ராம்சரண், ஜான்வி கபூர்,சிவராஜ் குமார்,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா,ஸ்ருதிஹாசன்,விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “பெத்தி”. இப்படத்திற்கு கதை .எழுதி இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் எந்தவித பதக்கங்களைக் குவிக்க முடியவில்லை என்று வேதனைப்படுகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர். அப்போது விளையாட்டுத் துறை அதிகாரி போமன் இரானி திறமையான கிராமிய வீரர்களைத் தேடி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரம் வருகிறார். அங்கு பல விளையாட்டுக்களில் தனித்துவமான சாதனை படைத்துள்ள பெத்தி என்பவரை பற்றி கேள்விப்படுகிறார். “யார் இந்த பெத்தி?” என்று அந்த அதிகாரி விசாரிக்கும்போது, ஒரு பழங்குடியின மனிதர் அவரைத் தன் மலைகிராமத்திற்கு அழைத்துச் சென்று, ‘பெத்தி’யின் கதையைக் கூறுகிறார்.
இந்த சூழலில் பெத்தி என்கிற ராம் சண் வாழும் மலை கிராமத்திற்கு அரசாங்க பதிவேடுகளில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான முகவரிகள் இல்லாமல் சுற்றியுள்ள மக்கள் அதை மலைக்கு கீழே இருக்கும் கிராமம் என்றுதான் அழைக்கிறார்கள். அந்த ஊரில் வாழும் பெத்தி கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்குகிறான் .விஜயநகரத்தில் யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக அணியில் சேர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைப்பான் .பெத்தியைக் காசு கொடுத்து விளையாடும் ஒரு ‘வாடகை ஆட்டக்காரராக’ ஏலத்தில் எடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்கிறார்கள். இந்த நிலையில் அந்த மலை அடிவாரத்தில் சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர் என எதுவுமே இல்லாத, வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லாத அந்த கிராமத்திற்கு ஒரு ரயில் நிலையத்தையாவது கொண்டு வந்து, அதற்கு அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஜெகபதி பாபு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி அது முடியாமல் போக தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
இதனால் அந்த மலை கிராமத்திற்கு தனிப்பட்ட ஒரு அங்கீகாரத்தை பெறுவதற்காக தனக்கு இயல்பாகவே கிடைத்திருக்கும் விளையாட்டு திறமையை பயன்படுத்தி தன்னுடைய அடையாளத்தை பெற முயற்சி செய்கிறார் பெத்தி என்கிற ராம் சரண்.இந்த சமயத்தில் பெத்தியின் அசாத்தியமான உடல் பலத்தைக் கவனிக்கும் கூர்நாயுடு சிவராஜ்குமார், அவனுக்கு பாரம்பரிய மல்யுத்தத்தைக் கற்றுக் கொடுக்க முன்வருகிறார். பெத்தியை குத்துச்சண்டையில் பயிற்சி அளித்து பெரிய மல்யுத்த வீரனாக்குகிறார் சிவராஜ்குமார். இதனால் மல்யுத்தக் களத்தில் பெத்தி அசுர வளர்ச்சி அடைவதைப் பார்த்து, அதுவரை சாம்பியனாக இருந்த தாரக் பொன்னப்பா பொறாமை கொள்கிறான். அதனால் அங்கு நடக்கும் மல்யுத்த போட்டியின் போது, தாரக் பொன்னப்பா, பெத்தியின் கால் நரம்புகளைக் கொடூரமாகத் தாக்கிச் சிதைக்கிறான். இதனால் வேதனையுற்ற பெத்தி எப்படி தன் மலை கிராமத்திற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று அங்கு ரயில் நிலையத்தை கொண்டு வந்தார்… என்பதுதான் “பெத்தி” படத்தின் மீதிக் கதை.
அந்த மலை வாழ் கிராமத்து வாலிபன் பெத்தி என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளார் .ஒரு கிரிக்கெட்டர், மல்யுத்த வீரர், மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரர் என மூன்று விளையாட்டு வீரர் வேடத்தில் நடித்திருக்கிறார். ராம் சரண். அவர் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று சொல்வதை விட மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மாற்றுத்திறனாளியாக ராம்சரண் ஓட்டப்பந்தய களத்தில் நடத்தும் சாகசம்தான் அபாரம்.
கதாநாயகி அச்சியம்மாவாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கௌர் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் வரும் சிவராஜ்குமார் ஒரு நல்ல மல்யுத்த பயிற்சியாளராக கவனம் ஈர்க்கிறார்.
அப்பல சூரி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜகபதி பாபு உயிரோட்டமுள்ள ஒரு கேரக்டரில் அருமை யாக நடித்து பாராட்டுப் பெறுகிறார். பெத்தியின் தாயாராக விஜி சந்திரசேகர் நடித்துள்ளார்.அவர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார். திவ்யேந்து சர்மா, பொமன் இரானி, ஜான் விஜய் போன்ற பல நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் இசைதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவரது ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகக் கண்களை நிறைக்கின்றன. கண் முன் வாழும் ஒரு வரலாற்றைப் படமாகப் பார்த்த உணர்வைத் தருகிறது
இப்படத்துக்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புஜ்ஜி பாபு சனா. ஒவ்வொரு காட்சியிலும் ஏராளமான மக்களைப் பின்புலமாக வைத்து காட்சிகளைப் பிரம்மாண்டமாக மாற்றி உள்ளார். இடைவேளைக்கு முந்தைய காட்சியிலும், இரண்டாம் பாதியில் மாற்றுத்திறனாளி விளையாட்டுக் களத்தை எமோஷனலாக மாற்றிய இடத்திலும் இயக்குநராகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இந்தியாவில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை ஒரு மலை கிராமத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், ‘பெத்தி’ சமுதாயத்தில் ஏற்படும் அவலங்களை சொல்லும் படம்.
ரேட்டிங் 3.5/5