சென்னை:
“நூறு சாமி” என்ற இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா ,அஜய் திஷான் ,சக்தி, பாடினி குமார், காவியா அனில், கருணாஸ் , லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் , முனிஷ்காந்த் ,ஜென்ஸன் திவாகர் ,பகவதி பெருமாள் ,வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர்.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுக்கும் சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் இடையேயான மோதலை மையமாகக் கொண்டு ஒரு உண்மையான சம்பவத்தை கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. .தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பாலாஜி ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார்.
இளம் வயதிலேயே கணவனை இழந்து, ஊர் மக்களின் ஏளனப் பேச்சுகளையும் வறுமையையும் சகித்துக் கொண்டு, தன் இரு மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தியையும் வளர்க்கும் சுவாசிகாவின் வேதனையான வாழ்க்கை தொடங்குகிறது. தனது இரண்டு மகன்ளை கஷ்டப்பட்டு வளர்க்கும்போது, . தனிமையில் இருக்கும் சுவாசிகாவை ஊரில் உள்ள சில பெரியவர்கள் தங்களது காம இச்சைக்கு அழைக்கின்றனர். ஆனால் தனது இரு மகன்களை வளர்ப்பதே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வயல்வெளிகளில் கூலி வேலைகளுக்கு சென்று உழைக்கிறார். தான் சம்பாதித்த பணத்தில் இரு மகன்களையும் கல்லூரியில் படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். இந்த நேரத்தில் சுவாசிகா தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து யாராவது நல்ல ஒரு மனிதரை மறுமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்.
தன் மனதில் இருந்த எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்லும் போது அவர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க, அதிர்ந்து போய்விடுகிறார் சுவாசிகா. சில ஆண்டுகள் கழித்து தாயின் மன உணர்வைப் புரிந்து கொள்ளும் மகன்கள் தாய்க்கு மறுமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதற்கு தாய் சுவாசிகா மறுக்கிறார். அவரை வற்புறுத்தி மறுமணத்திற்கு மகன்கள் இருவரும் சம்மதிக்க வைக்கின்றனர். சுவாசிகாவின் மறுமணம் குறித்து கேள்விப்பட்ட உறவினர்கள் கடுமையாக இதை எதிர்க்கிறார்கள். ஆனால் தங்களது தாய்க்கு தாங்களே முன்னின்று மாப்பிள்ளை தேட முடிவெடுக்கிறார்கள். சமுதாயத்தின் போலிப் புனிதங்களை உடைத்து, தன் தாய்க்குத் மனைவியை இழந்து தனது மகளின் சம்மதத்துடன் ஒரு துணையைத் தேடும் கரும்புத் தோட்டத் தொழிலாளியான பக்குவப்பட்ட விஜய் ஆண்டனியை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த சமயத்தில் அந்த ஊரில் இருக்கும் சுவாசிகாவின் எதிர்ப்பாளர் பாலாஜி சக்திவேல், அந்த ஊர்க்காரர்களை உசுப்பேற்றி விட்டு, இப்படி சுவாசிகாவை மறுமணம் செய்ய நாம் விட்டுவிட்டால் ஊரில் இருக்கும் அத்தனை விதவை பெண்களும் மறும்ணம் செய்ய கிளம்பி விடுவார்கள். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணி ஊரில் உள்ள மக்களை திரட்டிக் கொண்டு சுவாசிகா மறுமணம் செய்யும் இடத்திற்கு செல்கிறார் பாலாஜி சக்திவேல்,. அவர்களது எதிர்ப்பையும் மீறி தன் தாய்க்கு மகன்கள் இருவரும் மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதே “நூறு சாமி’ படத்தின் மீதிக் கதை.
ஒரு கிராமத்து ஒடுக்கப்பட்ட பெண்ணாக, தாயாக, தனக்கான உரிமையை கேட்கும் ஒரு சராசரி மனிதராக தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் சுவாசிகா. தன்னுடைய மகன்களுக்காக உயிர் வாழ வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்தில் அவர் காட்டுகின்ற ஒட்டுமொத்த நடிப்பும் நம்மை கண்கலங்க வைக்கிறது. ஒரு விதவையின் வலி, அவமானம், பயம், நம்பிக்கை, மகிழ்ச்சி என பல பரிமாணங்களை மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி இருவரும் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்கள். மற்றும் பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என துணைப் கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஸ் அந்த சிறிய கிராமத்தையும் அதன் எழிலையும் கள்ளக்குறிச்சி நகரையும் அதன் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான மலை மற்றும் காடுகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
பாலாஜி ஸ்ரீராமின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளை அதிகப்படுத்த உயிரூட்டியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் தன்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அப்படியே எடுத்தால் அது சினிமாவுக்கு சரி வராது என்பதால் சில காட்சிகளை படத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து சினிமா ரசிகர்களுக்கு பிடித்ததுபோல இந்தப் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் சசியை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு சுயமரியாதை உணர்வு என்கிற ரீதியில் பெண்மையை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் உயர்த்திப் பிடித்துள்ளார்.
மொத்தத்தில், ‘நூறுசாமி’ விதவைப் பெண்களின் உணர்வுகளை சொல்லும் படம்.
ரேட்டிங் 4/5.