*உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது!

CHENNAI:
இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.

பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.

இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், ‘ஃபியூஷன்’ (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த ‘சைவம்’ (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு ‘சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது’ கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த ‘பிசாசு’ திரைப்படத்தின் ‘நதி போகும் கூழாங்கற்கள்’ பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

*Shri Venkatesa Suprabhatham by Uthara Unnikrishnan unveiled on major platforms* NEWSFeatured
Comments (0)
Add Comment