‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்!

CHENNAI:

ஜெய், யோகிபாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராக இருந்த பாபு விஜய் என்பவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “சட்டென்று மாறுது வானிலை”.

இந்த படத்தினை பி.வி. பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

ஆசிரமத்தில் வளர்ந்த ஜெய் ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஓர் அமைச்சரின் மகளான மீனாட்சியை வசதியான அரசியல்வாதி சரவண சுப்பையா அடைய நினைக்கிறார். தன் மகளைத் திருமணம் செய்து வைத்து விட்டு தான் மேலும் அரசியலில் பெரிய ஆளாக வலம் வரலாம் என்று மீனாட்சியின் தந்தை நினைக்கிறார்.  அதனால் வேதனை அடைந்த  மீனாட்சியின் தாய் எதிர்ப்பு தெரிவித்தபோது தன் மனைவியையும் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்கிறார் அந்த அமைச்சர். அமைச்சரின் மகளாக வலம் வரும்  மீனாட்சிக்கு தனது வீட்டில் தந்தையினால் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் வெளியே வந்து லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார். அப்போது ஜெய் எதேச்சையாக மீனாட்சியை ஒருநாள் கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார்.

ஆனால் தனது காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்த ஜெய் மற்றொரு நாளில்  மீனாட்சியை பார்த்ததும், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று ஜெய் அவரிடம் கேட்க, மீனாட்சியும் தனிமையில் இருப்பதால் சரி என்று சொல்ல, உடனே இருவருக்கும் திருமணம் நடந்து விடுகிறது. அவசரமாகக் காதலித்து திருமணமும் செய்து கொண்ட ஜெய், தனது காதல் மனைவி மீனாட்சியை  அழைத்துக் கொண்டு தேனிலவுக்காக கொடைக்கானல் சென்று மலைகள் சூழ்ந்த இடத்தில் உள்ள  கருடா ராம் நடத்தும் சொகுசு ஹோட்டலில் தங்குகிறார்கள்.

அங்கு அவர்கள்  இருவரும் படுக்கையறையில் இருப்பதை கருடா ராம் ஹிடன் கேமரா மூலம் வீடியோ எடுத்து விடுகிறார். இவர்களை போல, பல ஜோடிகளை இப்படி வீடியோ எடுத்து, அதனை ஆபாச தளத்தில் ஏற்றி பல கோடிகளை சம்பாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கருடா ராம். இதனை தெரிந்துக் கொண்ட ஜெய் படுக்கையறை காட்சிகள் கொண்ட வீடியோவை கைப்பற்ற முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. அதன் பிறகு உண்மையில் நடந்தது என்ன? காணாமல் போன மீனாட்சியை போலீஸார் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான்  “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் ஜெய் ஒவ்வொரு காட்சியிலும் விஜய் போலவே ஸ்டைல்கள் செய்து நடிப்பது ரசிகர்களை குஷிப்படுத்துகின்ற விதத்தில் இருந்தாலும்  நடனம் ஆக்ஷன் காட்சிகளிலும் விஜய் பாணியிலேயே நடித்திருப்பதை ரசிக்கலாம். இவர் காதல் காட்சிகளிலும், கண்கலங்க வைக்கும் காட்சிகளிலும் சிறந்த முறையில் தனது  நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். விஜய் போல் நடித்திருப்பது சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் பலவீனமாகவும் இருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன்  தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

யோகிபாபுவின் காமெடி  படத்திற்கு பலமாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார். ஆதித்யா கதிர் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதா பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையும் படத்துக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்து  இருக்கிறது.

தேனிலவு காட்சிகள், இரவுக் காட்சிகள் மற்றும் உணர்ச்சி மிக்க தருணங்கள் அனைத்தும் மிக அழகாக ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப் பதிவு செய்து இருப்பதை ரசிக்கலாம்.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய். இவர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு முத்ன் முதலில் இயக்குகின்ற படம் என்பதால் அவரது ஸ்டைலை பின்பற்றாமல் தனது பாணியில் இளமை ததும்பும் காதல், பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை இப்படத்துடன் ஒன்றிவிடச் செய்து விடுகிறார் இயக்குநர் பாபு விஜய்.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் திரைப்படம்தான் ’சட்டென்று மாறுது வானிலை’

ரேட்டிங் 3/5.

 

"Sattenru Maaruthu Vaanilai" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment