தமிழ் சினிமாவில் ஒரு புதிய கமர்ஷியல் இயக்குநரின் வருகையை அறிவிக்கும் விதமாக, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் இது சாதாரண திரைப்பட விழாவாக இல்லை.
இந்த மேடை முழுவதும் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது — இயக்குநர் பாபு விஜயின் வாழ்க்கையையும், இந்தப் படத்தின் உருவாக்கத்தையும் ஆழமாக பாதித்த இரண்டு பெயர்கள் A.R. முருகதாஸ் மற்றும் முதல்வர் ஜோசப் விஜய்.
BV Production தயாரிப்பில், பாபு விஜய் இயக்கி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல், திரில்லர், சமூக பிரச்சனை, அரசியல் அடுக்குகள் என பல அம்சங்களை இணைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக விழா முழுவதும் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M. நாதன் பேசுகையில்,
“முதல் படத்தை இயக்கி அதையே தயாரிப்பது என்பது ஒரே நேரத்தில் பைக் ஓட்டிக்கொண்டு பெட்ரோல் கேனையும் சுமப்பது மாதிரி கடினம்” என்று கூறி பாபு விஜயின் உழைப்பை பாராட்டினார். இந்தப் படத்திற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். ‘நம்முடன் இருந்தவர் இன்று உயர்ந்து நிற்கிறார்’ என்ற பெருமிதம் மனதில் தோன்றும். அப்படிப்பட்ட நெருக்கமான வட்டாரத்தில் எனக்கு மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாபு விஜய். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரு பைக் ரேஸில் ஒரே நேரத்தில் வண்டியையும் ஓட்டிக்கொண்டு, பெட்ரோல் கேனையும் சுமந்து கொண்டு வெற்றியை நோக்கி செல்லுவது எவ்வளவு கடினமோ, அதே அளவுக்கு சவாலான விஷயம்தான் முதல் படத்தை தயாரித்து இயக்குவது. அந்தப் பொறுப்பும் போராட்டமும் என்ன என்பதை நன்றாக புரிந்துகொண்டதால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் இந்தப் படத்திற்கு ஆதரவாக நின்று, என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொடுத்தேன். இந்தப் படம் அந்த அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் உரிய வெற்றியை கண்டிப்பாக பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் வெற்றி பெறும் நேரத்திலும் நீங்கள் அனைவரும் இதே அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெய் முரளி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இயக்குநர் பாபு விஜயின் முடிவெடுக்கும் திறனை சிறப்பாக குறிப்பிட்டார்.
“ஒரு டியூன் கொடுத்த பிறகு தேவையற்ற விவாதங்கள் இருக்காது. அவர் நம்பிக்கை வைத்தால் முழுமையாக நம்புவார்,” என்று கூறிய அவர், படத்தின் பாடல்கள் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
முதலில் சசி சாரை நேரில் சந்திப்பதில் மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் ஒவ்வொரு படத்திலும் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அம்சம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. குறிப்பாக விஜய் ஆண்டனி சாருடன் வரும் உங்கள் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘கொலை’ படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கூட விஜய் ஆண்டனி சார் உங்களைப் பற்றி நிறையப் பேசுவார். அதனால் இன்று உங்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார். முருகதாஸ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கொடுக்காத தாக்கமே இல்லை. உங்கள் படங்கள் தமிழ்நாட்டையே குலுக்கியிருக்கின்றன. இன்றைய பல மாற்றங்களுக்கும் நீங்கள் விதைத்த விதைகளே காரணம் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பவர்.
ஜெய் ப்ரோவுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின் மிகச் சிறிய விவரங்கள் வரை என்னுடன் விவாதிப்பார். ‘இதை எப்படிச் செய்தீர்கள்?’, ‘இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?’ என்று அருமையான ஆலோசனைகளை வழங்குவார். இந்தப் படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி ப்ரோ. படத்தைப் பார்த்தவுடன் உங்கள் ஸ்கிரீன் பிரசென்ஸ் அனைவருக்கும் புரியும். மீனாட்சி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதேபோல் ரிச்சர்டின் வேலை எனக்கு முதல் படத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். ..என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசுகையில்,
“இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு இசையமைப்பாளர், கவிதைகளுக்கும் வரிகளுக்கும் உண்மையான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்பெரிய சந்தோஷம். சாதாரணமாக ஒரு மெட்டு கிடைத்தாலே போதும், அதற்குள் வரிகளைப் பொருத்திவிடலாம் என்ற மனநிலை பல இடங்களில் இருக்கும். ஆனால் வரிகளை ரசித்து, படைப்பாளிகளையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் இசையமைப்பாளர்கள் மிகவும் அரிது. அந்த வரிசையில் இன்று மிக அழகாக வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். தமிழ் வரிகளையும் கவிதைகளையும் அவர் ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று ‘சட்டென்று மாறுது வானிலை’, இன்னொன்று ‘உயிரே’. அந்த இரண்டு பாடல்களையும் நாங்கள் சேர்ந்து உருவாக்கினோம்.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் சசி சார் மற்றும் முருகதாஸ் சார் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் நேரடியாக வேலை செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய ரசிகனாக நான் எப்போதும் ஒரு மூலையில் இருப்பேன்.ஜெய் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்க்கும்போதெல்லாம் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தையைப் போலவே தோன்றுவார். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்தைத்தனமான குணம் இருக்கும். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் மிகவும் பெரிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக வெட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுமையான நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் சொற்களும் கொண்ட பாடல்கள் வருவது அரிது.
அந்த வகையில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களாக அமையும் என்று நம்புகிறேன். அந்த வாய்ப்பை அளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.”
நடிகை மீனாட்சி பேசுகையில்,
“அனைவருக்கும் வணக்கம். பாபு விஜய் சாருக்கு நான் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மிகவும் நன்றி சார். நம்முடைய பயணத்தில் நிறையத் தடைகள் இருந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்று இந்த நிகழ்வை நடத்தும் நிலைக்கு வந்திருக்கிறோம். என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. ஜெய் சாருடன் இது என்னுடைய இரண்டாவது படம். மீண்டும் அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அதேபோல் ரிச்சர்ட் சாருக்கு ஒரு சிறப்பு நன்றி. எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றிகள். வரும் மே 15-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.” என்றார்.
இயக்குநர் முருகதாஸ் பேசுகையில்,
“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்று பாபு விஜய்யின் முதல் இயக்கம் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படம் வெளியான போது நான் எவ்வளவு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தேனோ, அதே உணர்வை இன்று பாபு விஜய்யிடம் பார்க்கிறேன். பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் தெரியும் — ஆரம்பத்தில் வேலைக்கு அழைக்கும் போது நல்ல சம்பளம் பேசிவிடுவார். ஆனால் படம் முடியும் நேரத்தில் தான் புரியும்; அவர் எல்லோரிடமிருந்தும் மூன்று மடங்கு உழைப்பை வாங்கியிருப்பார். அது அவருடைய அர்ப்பணிப்பு.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஞாபகம் வருகிறது. ‘சர்கார்’ படத்தின் போது நடந்தது. படம் முடிந்த பிறகு ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் நான், ஹீரோயின் மற்றும் பழ.கருப்பையா சார் கலந்து கொண்டோம். அப்போது பழ.கருப்பையா சார் பாபு விஜய்யை அழைத்து, “எனக்கு அரசியல் மேடைகளில் பேசத் தெரியும். ஆனால் சினிமா இன்டர்வியூ கொடுக்கத் தெரியாது. என்ன பேசுவது?” என்று கேட்டார். இன்டர்வியூ ஆரம்பித்ததும், பழ.கருப்பையா சார் தொடர்ந்து “பாபு விஜய்… பாபு விஜய்…” என்று பெயரைச் சொல்லிக்கொண்டே பேச ஆரம்பித்தார். நான் பக்கத்தில் இருந்தபடி, ‘இவ்வளவு தடவை என் பெயரைச் சொல்கிறாரே!’ என்று ஆச்சரியப்பட்டேன். அந்த நேரம் இன்றும் மறக்க முடியாத நினைவு.
அதுமட்டுமல்ல, எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் வெளியானபோது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு பெரிய பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தன. போலீஸ் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் கொண்ட காரில் அமைதியாக உட்கார்ந்து காசி தியேட்டர் அருகே நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார். இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல, இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஜெய் பற்றியும் சொல்ல வேண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்போது இது மூன்றாவது முக்கியமான கூட்டணி போல இருக்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாக அமைய வேண்டும்.
ஜெய் மிகவும் நல்ல நடிகர். அவருடைய காமெடி டைமிங் அருமை. திரையில் மட்டுமல்ல, நேரில் பேசினாலும் அதே நகைச்சுவை உணர்வு இருக்கும். மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒரே குருவிடம் நடனம் கற்றவர்கள். அதனால் அவரை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பல தடைகள், போராட்டங்களைத் தாண்டி பாபு விஜய் இந்தப் படத்தை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறார். அதனால் பத்திரிக்கை நண்பர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், யூடியூபர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு நல்ல ஆதரவு கொடுக்க வேண்டும். பாபு விஜய் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.” என்றார்.
இயக்குநர் பாபு விஜய் பேசுகையில்,
“முதலில் ஆண்டவனுக்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான தருணத்தையும், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கொடுத்ததற்கு. என் பெற்றோருக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும். அதைவிட முக்கியமாக என் மனைவி லக்ஷ்மி சர்மாவுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. எல்லா வகையிலும் என்னை முழுமையாக ஆதரித்தவர் அவர் தான். அதேபோல் என் நண்பர் சத்யநாராயணன். நான் சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் என்னைத் தாங்கிப் பிடித்து, ‘உங்களால் முடியும்’ என்று சொல்லி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அவருக்கும் என் நன்றி. எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒரே ஒரு பேர் — A.R. முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையே இல்லை. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக ஒரு படம் வேலை செய்தாலே போதும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு பைத்தியக்காரமான அன்பு. நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுடைய வீட்டில் பெரிய பிரச்சனை வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது.அவருடன் வேலை செய்தால் வெளியுலகமே தெரியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கற்றுக்கொடுப்பார். நான் படம் தயாரிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தவுடன் முதலில் தனஞ்செயன் சாரைச் சந்தித்தேன். அவர் சொன்ன ஆலோசனைகள் இந்தப் படத்தில் மிகவும் உதவியாக இருந்தது.
கதாநாயகி மீனாட்சியை முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இந்தக் கதைக்குச் சரியானவர் இவர்தான் என்று தோன்றியது. அவரைத் தொடர்பு கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார்கள். அவருக்கும் என் நன்றி. ஜெய் சாரை அணுகும் முன்பே நிறையப் பேர் என்னிடம் எதிர்மறையாகப் பேசினார்கள். ‘ஜெய்யா? அவர் ஷூட்டிங்கே வரமாட்டார்’, ‘அவரை வைத்து படம் எடுக்க முடியாது’, ‘அது வேலை ஆகாது’ என்று பலரும் சொன்னார்கள். ஒருநேரம் எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது. அப்போது சரவணா சாரிடம் பேசினேன். அவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் — ‘அவர் ஒரு குழந்தை மாதிரி. சரியாகப் பழகி, அவரைப் புரிந்து கொண்டு நடத்தினால், உங்களைவிட முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்’ என்றார். அது உண்மையிலேயே அப்படித்தான் நடந்தது.
ஜெய் சார் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி. நடுவில் சில பிரச்சனைகள் வந்தாலும், அமைதியாக விளக்கிப் பேசினால் உடனே புரிந்துகொள்வார். ஒரு ஹீரோவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார். கேரவனுக்குப் போனால் நேரம் ஆகிவிடும், லைட்டிங் மாறிவிடும் என்று நினைத்து, அங்கேயே உடை மாற்றிக்கொள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். அவர் ஒரு சிறந்த நடிகர். உண்மையாகச் சொன்னால், அவரை இன்னும் முழுமையாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்லை — என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். படம் பார்க்கும்போது எனக்கே தோன்றியது, ‘இவரை வைத்து இன்னும் எவ்வளவு பெரிய கதைகள் செய்யலாம்!’ என்று. அந்த அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிகவும் ஒத்துழைப்பானவர். அவரைப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில சம்பவங்களை வைத்து அவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர். ரொம்ப நல்ல மனசு. “தேங்க் யூ செல்லம்… லவ் யூ,” என்று உணர்ச்சியுடன் பேசினார். அனைத்து டெக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது வெறும் வேலை இல்லை — அன்போடு செய்த வேலை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி…என்றார்.
நடிகர் ஜெய் பேசுகையில்,
“இங்கே வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் — எல்லோருக்கும் ரொம்ப நன்றி. இப்போது எல்லாருமே பிஸியானவர்கள். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், போய் பார்க்கலாம்’ என்ற அன்போடு இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்மையாகவே மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தை எங்களுக்காகச் செலவழிப்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.
பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன். ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.
ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன். ‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார். அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.
இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள் — இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன். ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.
இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார். ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார். கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும். அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.