‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

விஜய சதீஷ் தயாரித்திருக்கும் மனிதன் தெய்வமாகலாம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத். இப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி , ஆர் எஸ் சதீஷ், சிறுமி லிர்த்திகா,சேலம் தீபக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சேலம் அருகில் இருக்கும் பொன்வயல் என்ற கிராமத்தில் அப்பா, அம்மா இல்லாத அனாதையாக வளர்ந்தவர் செல்வராகவன். அவர் இப்போது தன்னுடைய உறவினரான அண்ணன் ஒருவருடன் சாலையோரமாக நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் அவரை குஷி ரவி திருமணம் செய்ய முன் வருகிறார். அழகிலும் வசதியிலும்   செல்வராகவனைவிட  குஷி ரவி  ஒரு படி உயர்ந்திருந்தாலும் அவரது குணம் கண்டு அவரை திருமணம் செய்கிறார். இவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. நுங்கு வியாபாரத்தை விட்டு பலரிடம் கடன் வாங்கி கிராமத்து ரோட்டோரத்தில் ஒரு தாபா போன்ற ஒட்டலை நடத்த முடிவெடுக்கின்றனர்.  “செல்வி ஓட்டல்” என்று தன் மனைவியின் பெயரிலேயே ஒரு ஓட்டலை ஆரம்பிக்கிறார் செல்வராகவன்.

அந்த பகுதியில் மைம் கோபி. அவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த தொழிற்சாலையில் அந்த ஊர் பெண்கள் பலரும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் பணம் கடன் உதவி கேட்டால் மைம் கோபி கொடுப்பார். ஆனால் வட்டி வரவில்லை என்றால் வீட்டிற்கு வந்து தகராறு செய்வார். அதன் பிறகு அந்த பெண்கள் பணம் கொடுக்கமுடியாத பட்சத்தில் அவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார். செல்வராகவனுடன் இணைந்து குஷி ரவி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் போது, மைம் கோபியால் திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துக் கொள்கிறார். அவர் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை தெரிந்துக் கொண்ட செல்வராகவன் ஒரு வெறித்தனமான மனிதனாக மாறுகிறார். இந்த இறப்புக்கு காரணமான வர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார். இறுதியில் தன் மனைவி தற்கொலை செய்ய காரணமான வர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான்  ‘மனிதன் தெய்வமாகலாம்’.படத்தின் மீதிக் கதை.

தன் மனைவியிடம் பாசம் காட்டும் போதும் கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் போதும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் பாதியில் எதிரிகளைத் துவம்சம் செய்யும் ஆக்ரோஷமான மனிதராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

செல்வராகவன் மனைவி செல்வியாக நடித்திருக்கும் அறிமுக நாயகி குஷி ரவி,குடும்பப் பாங்கான முகம், பாசத்தை வெளிப்படுத்தும் குணம் என்று தோற்றத்திலும் உடல் மொழியிலும் அனைவரையும் கவர்கிறார்.

முன்னாள் கதாநாயகி நடிகை கெளசல்யா செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார் . குறைந்த காட்சிகளில் வந்தாலும் சில காட்சிகளில் கவனம் பெறுகிறார்.அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ்,குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.

மைம் கோபி மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வில்லனாகி இருக்கிறார். அவருடைய அந்த ஒரு பார்வையே அவருடைய வில்லத்தனத்தை அழகாக காட்டுகிறது. ஒய்.ஜி.மகேந்திரன் நல்லதொரு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 

சிறுமி லிர்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் அந்த ஊர் மனிதர்களாகவே நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். உண்மையாகவே இந்த படத்தில் வரும் பாடல்கள் வரிகளை அனைவரும் உச்சரிப்பது போல செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அந்த  கிராமத்தில் இருக்கும் எளிமையான வீடுகளையும், இரவு நேரத்தில் ஒரு சின்ன வெளிச்சத்தை மட்டுமே வைத்து சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.

ஒரு கிராமத்து வாழ்வியலை அழகாக சொல்லி இருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அந்த மக்களின் அப்பாவித்தனத்தையும், அவர்களின் ஏழ்மையையும்… எப்படியெல்லாம் இந்த மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்.ஒரு சராசரி, மனிதன் எப்படி மற்றவர்களுக்கு தெய்வமாகிறார்…என்ற மாற்றத்தை காட்டிய விதத்தின் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனையை வழங்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

 

"Manithan Daivamakalaam" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment