‘நீளிரா’ – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

படம்: நீளிரா

நடிப்பு: நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித்

தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ்

இசை: கே

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்

இயக்கம்: சோமீதரன்

பிஆர்ஓ : நிகில் முருகன்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ‘நீளிரா’. நீண்ட இரவு என்று நீளிராவுக்கு பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. இலங்கையின் போர் சூழலில் சிக்கிக் கொண்ட ஒரு சாதாரண குடும்பம்… மகளின் திருமணத்தை நடத்தவே இராணுவங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை…ஏற்படுகிறது. அப்படி அனுமதி வாங்கிய ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும் இருக்கிறது.

அப்போது விடுதலைப் போராளிகளைத் தேடி இந்திய அமைதி படை  வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.  ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய அமைதிப்படை என போர்ச்சுழலில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன என்பதை இலங்கையில் நடந்த ஒரு உன்மையான சம்பவத்தை படமாக்கி வெளி வந்திருக்கும் படம்தான் ‘நீளிரா”

இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா மற்றும் போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத் இருவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள்.

போராளிப் படைத் தலைவராக நடித்திருக்கும் சனத்,நம் மக்களுக்குப் பாதிப்பின்றி எதிரிப்படையைத் தாக்கவேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கும் அசல் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஈழப்பெண்களாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்தமக்களின் மிகப்பெருந்துயர்களை தம் கண்கள் மூலமாகவும் உடல்மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்திப் பதற வைத்திருக்கிறார்கள்.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இரவில் நடக்கும் கதை என்பதால் அந்த உணர்வே ஏற்படாத வகையில், இக்கட்டான சூழல்கள் மற்றும் அதனால் ஏற்படும்  பெரும் பதற்றத்தை உருவாக்கி காட்சிபடுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன்.

பாடலிலும்,பின்னணி இசையில் போராட்டக் காலகட்ட வலிகளையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.

இப்படத்தில் அதிகம் வசனங்கள் இல்லாமலேயே பரபரப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார் இயக்குநர் : சோமீதரன். தமிழீழ விடுதலைப் போராட்டக் காலகட்ட துயர்களையும் வலிகளையும் இரத்தம்,மரணம் ஆகியன இல்லாமலேயே பதிவு செய்திருக்கிறார். .அதோடு,இதுவரை யாரும் சொல்லாத இந்தியப்படையின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘நீளிரா’ ஈழ மக்களின் வலியை உணர வைக்கும் ஒரு முக்கியமான படம்.

ரேட்டிங் 3/5

"Neeliraa" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment