’கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

“கார்மேனி செல்வம்” என்ற இப்படத்தில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா நடித்துள்ளனர்.

ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ளார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசையமைத்துள்ளது .ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பு செய்துள்ளனர். தயாரிப்பு: அருண் ரங்கராஜுலு.

கார் டிரைவராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, மனைவி மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், “சொந்த வீடு” என்ற கனவு அவரை கடன் வலையில் இழுத்துச் செல்கிறது. தொழில் அதிபர் கௌதம் மேனனிடம் கார் டிரைவராக பணியாற்றுகிறார் சமுத்திரக்கனி . ஒரு சமயம் கௌதம் மேனன் வெளிநாடு செல்ல அவரது காரை தனது தேவைக்காக வாடகைக்காராக சமுத்திரக்கனி பயன்படுத்துகிறார். இந்த சூழலில் அவசரத்திற்கு பலரிடம் கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை அனைவருக்கும் அறிவுரையாக சொல்லி இருக்கும் படம்தான் ‘கார்மேனி செல்வம்’.

சமுத்திரக்கனி,ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். ஒரு சராசரி மனிதனின் நிம்மதி, பேராசை மற்றும் வீழ்ச்சியைத் தனது முதிர்ச்சியான நடிப்பால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பல படங்களில் நல்ல அறிவுரை சொல்லும் அவர் இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் வேடத்தில் நன்றாக நடித்து நல்லதை உணரவைக்கிறார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் லட்சுமிபிரியா,நடுத்தர வர்க்க மனைவிகளின் பிரதிநிதியாக இருக்கிறார்.அவர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்.இவர்களின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியும் நன்று.

நாயகனின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம்மேனன்,அவர் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா ஆகியோர் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன்,கதை சொல்லும் பாடத்தை காட்சிகளிலும் சரியாக வெளிப்படுத்தி கவர்கிறார்.

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜி  இசையில் பாடல்கள் கதைக்கேற்பவும்,  பின்னணி இசை திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் வண்ணமும் அமைந்திருக்கிறது.

நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டுமே தவிர, பிறரிடம் இருப்பதை நாமும் வாங்கி வாழ வேண்டும், என்ற ஆசையில் சிக்கி அவதிப்படக் கூடாது, என்பதை சிந்திக்க வைக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சக்ரி. பலர் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேதனையையும்,  அதன் ஆபத்துகளைப் புரிய வைக்கவும் புதிதாக யாரும் அதில் சிக்காமல் தப்பவும் இந்தப் படம் உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’  நடுத்தர மக்களுக்கான படம்.

ரேட்டிங் 3/5.

"Kaarmeni Selvam" Review Movie NewsFeatured
Comments (0)
Add Comment