‘கொலைச் சேவல் ‘திரைப்பட விமர்சனம்!

சென்னை:

கலையரசன், தீபா பாலு, பால சரவணன், கஜராஜ் ,விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “கொலை சேவல்”.

இப்படத்தை வி ஆர் துதி வாணன் இயக்கி உள்ளார் .சாந்தன் இசையமைத்துள்ளார்.ஆர்பி பிலிம் சார்பில் ஆர்பி பாலா கௌசல்யா பாலா தயாரித்துள்ளனர்.

கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி  தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் பேசி காதலர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்,அதையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஜாதி வெறி பிடித்து அலையும் தீபா பாலுவின் குடும்பம் இந்தத் திருமணத்தை அறவே வெறுக்கிறது. இதனால் காதலர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு வெளியூர் சென்று விடுகின்றனர்.வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த தீபா பாலு கர்ப்பமாகிறார்.  இந்த மகிழ்ச்சியான சமயத்தில், தங்கள் குடும்ப வழக்கப்படி குலதெய்வமான நிறை சூலி தெய்வம் உள்ள  கோவிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று கலையரசனின் குடும்பம் விரும்புகிறது.  அதனல் கலையரசனும், தீபா பாலுவும் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள்.

அவர்கள் இருவரும்  காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால்,  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் கணவர் கலையரசனது  குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள். அப்போது தீபா பாலுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் கௌரவத்தைக் காப்பதற்காக அந்தக் காட்டுப்பகுதியில் இவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். குலதெய்வ பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும்,  கலையரசனும் தீபா பாலுவும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது தீபா பாலுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  அவர்கள் இருவரையும் கொலை செய்ய முயல்கின்றனர். அதில் இருந்து அவர்கள் இருவரும் மீண்டார்களா? இல்லயா? என்பதுதான் ‘கொலைச் சேவல்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன்,சற்று எடை கூடி இருந்தாலும் அந்தப் பாத்திரத்தில் அழகாகப் பொருந்துகிறார் .இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தீபா பாலு, அறிமுக நடிகையாக இருந்தாலும் பார்த்தவுடன் பிடித்துப் போகும் குடும்பப் பாங்கான முகம் பாந்தமான தோற்றம் என்று வருகிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை.படத்தின் உச்சகட்ட காட்சியில் அவர் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிப்பிலிருந்து குணச்சித்திரத்தை நோக்கிப் பயணப்பட்டுள்ளார்.

குரூரத்தையும் வன்மத்தையும் மறைத்துக்கொண்டு வசனமே இல்லாமல் வந்து கலங்க வைக்கிறார் கஜராஜ்.

விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என படத்தில் நிறைய நடிகர் நடிகைகள்.எல்லோரும் கிராமத்து மனிதர்களாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமத்துக் கதைகளின் சிறந்த ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்த ஊர் மக்களின் கொடூரமான மனங்களையும் வன்மத்தையும் எதார்த்தமாக  பதிவு செய்து அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாந்தனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு அளவுக்கு பலம் சேர்க்கிறது. சில காட்சிகளில் இசையின் மூலம் பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்து பதற வைக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன்.இன்றைய சூழலில் இந்தச் சமுதாயத்தில் நிறைந்திருக்கும் சாதிய ஆணவங்களை அதன் கொடூரங்களை அவற்றை மனதில் வைத்திருக்கும் கோரமுகத்தினரை அப்படியே படம் பிடித்து காட்டி அதிர்ச்சியடையும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லாமல் ,கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்யாமல் சோகத்துடன் முடித்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆணவக் கொலை நடப்பதை காட்டினாலும் இவ்வளவு கொடூரமான காட்சிகளை எப்படித்தான் சென்சார் அனுமதித்தார்களோ என்று கேள்வி படம் பார்க்கும் அனைவர் மனதிலும் எழுகிறது.

மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ நடுங்க வைக்கும் ரத்தக்களரியான படம்.

ரேட்டிங் 3/5.

 

"Kolai Seval" Movie Review newsFeatured
Comments (0)
Add Comment