‘கெணத்தக் காணோம்’ – திரைப் படவிமர்சனம்!

சென்னை:

டிகர்கள்: யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ராமகிருஷ்ணன்

எழுத்து & இயக்கம் : சுரேஷ் சங்கையா

தயாரிப்பாளர்: ரமேஷ்பாபு & ஜெகன் பஷீகரன்

வழங்குபவர் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவாளர்: தியாகராஜன்

இசை : நிவாஸ் கே பிரசன்னா

படத்தொகுப்பு: ராமர்.

பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடங்கிபட்டி என்ற  கிராமம் தான் படத்தின் கதைக்களமாக இருக்கிறது. பல வருடங்களாக மழை பெய்யாததால் மழைக்காக ஏங்கி தவிக்கும் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சம் காரணமாக தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கிராமத்திற்கு நீர் வேண்டி மனுக்களை கொடுத்துக் கொண்டே வருகின்றனர். மழை பெய்து வருட கணக்கில் ஆகிவிட்டதால் தண்ணீர் பஞ்சம் கிராமத்தில் தலை விரித்தாடுகிறது. தண்ணீருக்காக ஊரில் கிணறு வெட்ட ஊர் மக்கள் முடிவு செய்கின்றனர்.அந்த கிராமத்தில் உள்ள யோகிபாபுவின் இருப்பிடத்தில் கிணறு வெட்டுகின்றனர். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் அங்கு தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. அதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்திற்கு வருகின்றனர். மேலும் தோண்டி பார்த்ததில் அது பல வருடங்களுக்கு முன்பு அழிந்து போன இனமான டைனோசர்ஸ் இனத்தின் எலும்பு துண்டுகள் என்று கண்டறிகின்றனர். அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அதன் பிறகு நடப்பது என்ன? என்பதுதான் ‘கெணத்த காணோம்’படத்தின் மீதிக் கதை.

இப்படத்தின் மையமாக இருக்கும் மணிவாசகர் கதாபாத்திரத்தில் கிராமத்துக் கோயில் பூசாரியாக யோகி பாபு எளிமையாக நடித்திருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள்,அந்த வேடத்தின் கனத்தையும் புலம்பெயர் மக்களின் வலியையும் உணர்த்தக் கூடியவையாக அமைந்திருக்கின்றன.

லவ்லின் சந்திரசேகர் ஒரு கிராமத்துப் பெண்ணாகத் தனது  நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தன் அழகிலும் நடிப்பிலும் நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டே வருகிறார்.

தொல்லியல் துறை அதிகாரியாக வருகிறார் ரேச்சல் ரெபெக்கா.கடைசிவிவசாயி படத்தில் நீதிபதியாகவே மாறியிருந்தவர் இந்தப்படத்தில் அதிகாரியாகவே ஆகியிருப்பது அவரது சிறப்பு.அவரது உதவியாளராக நடித்திருக்கும் இராமகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் சரியான தேர்வு.

இந்த படத்தில் ஹலோ காந்தசாமியின் உழைப்பு அளப்பரியது. அவரின் காமெடி நடிப்பு  திரையரங்கில் சிரிப்பொழிகளை வெடிக்க வைத்திருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களின் மனங்களை கவர்கிறது.

இப்படத்தில் நீரின்றி பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை பார்க்கும் அனைவரும் ரசிக்கும்படி  காட்சிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசிப் படம் இது. ஒரு கிராமத்தில் உள்ள எளிய மக்களின் தண்ணீரின்றி தவிக்கும் காட்சிகளையும்,  பொது நலனும் மற்றும் டைனோசர் படிமத்தையும்  வைத்துக்கொண்டு இந்தக் கதையை மிக அழகாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு கிராமத்தில் எதிர்பாராத ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற யோசனை தரும் விதத்தில் படத்தை இயக்கியிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’   எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் படம்.

ரேட்டிங் 3/5.

"Kinaththa Kanom' Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment