ஜெ.பி. பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்து ஜோன்ஸ் வழங்கும் LSS என்ற ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். இப்படத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனும், செல்வச் செழிப்பான மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலிப்பது அவ்வளவு சுலபமான விஷயமா? இதனை மையமாக வைத்து ஒரு உன்னதமான காதல் கதையை எழுதி இயக்கி இருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். சென்னையில் வசிக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த வசதியான மார்வாடி வீட்டுப் பெண் நாயகி சிம்ரன். தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தந்தை அரவணைப்பில் வளர்கிறார்.அப்படிப்பட்ட சிம்ரன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை விரும்புகிறார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனின் காதலை முதலில் நிராகரித்தாலும், அவரது உண்மையான அன்பை புரிந்துக் கொண்டு அவரும் காதலிக்க தொடங்குகிறார். இவர்களது காதலுக்கு ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, ஆனால் சிம்ரனின் தந்தையும் அவரது உறவினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதைத் தனது கௌரவப் பிரச்சினையாக நினைக்கிறார் சிம்ரனின் தந்தை. தனது சிறு வயதில் தந்தையை விட்டு பிரிந்து சென்ற தாய் வாரணாசியில் (காசி) தனியாக வசித்து வருகிறார். .தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வாழும் சிம்ரனிற்கு, தன் தாயை சந்தித்து காதலை சொல்லி ஆசிர்வாதம் பெற விரும்புகிறார். இதற்கு தந்தை எதிர்க்கிறார், இதனால் அவருக்கு தெரியாமல் காதலன் ஆதவ் கிருஷ்ணாவுடன் சேர்ந்து தன் தாயை காண காசிக்குச் செல்கிறாள். அங்கு ஆதவ் கிருஷ்ணாவை தவிர்த்து விட்டு தாயின் அழைப்பின் பேரில் தனியாக செல்லும் சிம்ரன் அங்கு எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து காசியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதன் பிறகு நடந்தது என்ன? காதலர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆதவ் கிருஷ்ணா புதுமுக நடிகராக இருந்தாலும் முதல் முதலாக நடிப்பு துறையில் ஈடுபட்டு மிகுந்த நம்பிக்கையோடு நடித்துள்ளார். அவரது மிதமான துள்ளல் தோற்றம் நடிப்பு என்று அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக அவர் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகி சிம்ரன் அத்வானி தனது முதல் படத்திலேயே மிக சிறப்பாக அனைவரும் கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சி வசப்பட்ட தருணங்களிலும், துடுக்கான இளம்பெண்ணாகவும், காதலை வெளிப்படுத்த தயங்கும் காட்சிகளிலும் திறமையாக நடித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக உருவெடுக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.
நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர், மற்றும் ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசியை இயல்பாக படமாக்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, கதையின் ஓட்டத்தை புரிந்து பாடல்கள் மற்றும் பின்னணிசையில் திருப்திகரமான பணியை செய்துள்ளார்.
தற்போது இருக்கின்ற இளைஞர்களின் காதல் கதையை உணர்ந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர். மகாலட்சுமி முருகன் ஒரு உன்னதமான் காதல் கதையோடு பெற்றோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார். முதல் பாதியில் காதல் என்றும் இரண்டாவது பாதியில் காதலில் பிரிவு, பெற்றோர்களின் உணர்வுகள், காதலர்களின் நம்பிக்கை போன்றவற்றையும் திரைக்கதையில் கொடுத்துள்ளார். இந்தப் படம் காதல் மற்றும் உறவுகளை நம்பும் பார்வையாளர்களிடம் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மொத்தத்தில், ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ இளம் தலைமுறையினர் விரும்பும் படம்.
ரேட்டிங் 3/5.