’மைலாஞ்சி’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை இசைஞானி இளையராஜா மேற்கொண்டுள்ளார்.

வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்கு பிடிக்காதவர் உடனான திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக,  தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார். இந்த சூழலில் கிரிஷா குரூப் உடனான நட்பு நாயகன் ஸ்ரீராம் கார்த்திற்கு கிடைக்கிறது. நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் உள்ள காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார். தொலைபேசி எண், முகவரி என்று எதுவும் தெரியாத ஒருவரை தேடிப் பிடித்து சேர்த்து வைப்பதாக சொன்னாலும், அவர் மனதில் உள்ள காதலை வளர்க்கும் ஸ்ரீராம் கார்த்திக், மறுபக்கம் கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் போலியாக ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலன் சென்னையிலிருந்து ஊட்டிக்கு வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப் காதலித்த காதலன் யார்? கிரிஷா குரூப் காதலை ஶ்ரீராம் கார்த்திக் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதுதான் “மைலாஞ்சி” படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு,மனம் முழுக்க காதலை வைத்துக் கொண்டு அப்படி ஒன்றே இல்லாததுபோல நடிக்க வேண்டிய வலிமையான வேடம்.அதை முழுமையாக உள்வாங்கி சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்பாவி முகம் அழகிய உடலமைப்பு ஆகியனவற்றால் பார்த்தவுடன் ஈர்க்கும் நாயகி கிரிஷா குரூப்புக்கு அவருடைய மென்மைக்கேற்ப பறவைகள் பூங்கா நடத்தும் வேடம் அமைந்திருக்கிறது. குறிப்பாக வெகுளி தன்மை கொண்ட பெண் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி ஆகியோரின் நகைச்சுவை காட்சிகளில் அவர்களது நடிப்பு பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி, நாயகியின் சித்தியாக நடித்திருக்கும் நடிகை, மாமனாக நடித்திருக்கும் கலையரசன் கண்ணூசாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செழியனின் பணி இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பசுமை நிறைந்த ஊட்டியில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளை மிக சிறந்த முறையில் படமாக்கி இருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் திரைக்கதையில் நிறைந்திருக்கும் காதல் வழிந்தோடி மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் அஜயன்பாலா. எத்தனையோ படங்களில் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்து இருந்தாலும், இப்படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் உணர்வு பூர்வமாக இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

மொத்தத்தில், ‘மைலாஞ்சி’ படம் உணர்வில்லாத காதல்.

ரேட்டிங் 2.5/5.

 

"Mailanji" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment