கே ஆர் குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நிதிஷ் சகாதேவ்.
இப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா அங்குள்ள மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார். ஊரில் ஊள்ள அனைவரின் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர் ஜீவா. அந்த ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அந்த கிராமத்து மக்களுடன் இணைந்து பலவித நன்மைகளையும் செய்து வருகிறார் .அந்த ஊர்க்காரர் இளவரசுவின் மகளின் திருமணத்திற்காக முக்கிய பணிகள் நடக்கின்றன. அதில் ஜீவாவும் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார். இந்த சூழலில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி ராமையாவுக்கும், இளவரசிற்கும் நீண்ட நாள் முன் பகை இருந்து வருகிறது. பொழுது விடிந்தால் இளவரசுவின் மகளுக்கு 10.30 மணிக்கு திருமணம் நடைபெற இருக்கும் இந்த சமயத்தில் நோய்வாய்பட்டிருக்கும் தம்பி ராமையாவின் தந்தை திடீரென்று இறந்து விடுகிறார்.
.ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு, இன்னொருவர் வீட்டில் மரண நிகழ்வு. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் அதாவது 10.30 மணிக்கு நடந்தாக வேண்டும் என்று இருவரும் பிடிவாதமாக இருக்கின்றனர். முன் பகை காரணமாக தம்பி ராமையா, இளவரசைப் பழி வாங்குவதற்காக எவ்வளவு கீழ் நிலைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார். இடையில் திடீரென்று மணப்பெண்ணும் காணாமல் போக மொத்த பழியும் ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் ஜீவாவின் தலையில் விழுகிறது. இறுதியில் இளவரசின் மகள் திருமணம் நடந்ததா? தம்பி ராமையா தந்தையின் இறுதி சடங்குகள் நடந்தனவா?என்பதுதான் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் மீதிக் கதை.
ஜீவா வழக்கமான காதல், சண்டைக் காட்சிகள் இல்லாமல் இந்த படத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றி கொண்டு அரசியல் பிரமுகராக வெள்ளை சட்டை, வேஷ்டியுடன் அமைதியாக, எளிமையாக நடித்திருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம். இரண்டு தரப்பினரையும் திருப்திப் படுத்தியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் அவர் படும்பாடுகள் அவருடைய நடிப்புத் திறனை மிக சிறப்பாக வெளிப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன.
ஆணவத்தின் அகங்காரத்தின் மூலம் பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொண்டே செல்லும் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் தம்பி ராமையாவும் இளவரசுவும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள்.
’பார்க்கிங்’ படத்தில் மகளாக கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இதில் மணமகள் கதாபாத்திரத்தில் எளிமையான அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனம் கவர்கிறார்.
தவிடு பாத்திரத்தில் வரும் ஜென்சன் திவாகர் செய்யும் சேட்டைகளும், பல புதுமுகங்களும் இதில் வந்து தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். அப்படி இந்தப் படத்தில் வருகிற சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் படம் முழுவதும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே வந்து சிரிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகத்தில் உள்ளன.பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பப்லு அஜு ஒரே நாள், ஒரே இரவு நடக்கும் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட படப்படிப்பு தளங்களில் தன்னுடைய நேர்த்தியான காட்சிக் கோணங்களால் வியக்க வைத்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் கொடூரதனத்தையும் பகைமைகளையும் அதனால் வெளிப்படும் சண்டைகளையும் வெளிச்சம் போட்டு, இயல்பான கதாபாத்திரங்களின் மூலம் இந்தப் படத்தில் காட்டி உள்ளார் இயக்குநர் நிதிஷ் சகாதேவ். அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல உபத்திரம் செய்வதையும் அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர். பல கொடூர குணங்கள் கொண்ட கதாபாத்திரங்களை படைத்து குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ்.
மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் காமெடி கொண்டாட்டம்.
ரேட்டிங் 3.5/5.