சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்ணிகா, காளி வெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கொம்பு சீவி’ படத்தை கதை எழுதி இயக்கி இருப்பவர் பொன்ராம்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுதி இயக்கி உள்ளார் பொன்ராம். ஸ்டார் சினிமாஸ் சார்பில் தயாரிப்பு முகேஷ் டி.செல்லையா.
மதுரையில் வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு ஒரு இடத்திற்கு குடியமர்த்தப்படுகிறர்கள். அங்கு வாழ்ந்த மக்கள் நிலம் மற்றும் உடமைகளை இழந்த நிலையில் வைகை அணையில் நீர் வற்றினால் விவசாயம் செய்து பிழைக்கிறார்கள், மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் போது, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். வைகை அணைக்கட்டு மீன் பிடிக்கும் ஏலத்தை யாரையும் எடுக்க விடாமல் தடுத்து சரத்குமாரே எடுக்கிறார். வேறு யாரும் எடுத்தாலும் அங்கே அவர்கள் இயங்க முடியாது.அது மட்டுமல்ல கஞ்சா போன்ற போதை பொருள் கடத்துவது போன்ற குற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார் சரத் குமார்.. அப்படி வைகை அணை நீரில் மூழ்கி இருக்கும் ஓர் ஊரைச் சேர்ந்தவரான ரொக்கப்புலி என்கிற சரத்குமாரிடம், பாண்டி என்கிற சண்முக பாண்டியன் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்று கேட்கிறார். முதலில் எந்த வேலையும் தர முடியாது என்று சொன்ன சரத்குமாரை சில ரவுடிகள் கொலை செய்ய முயன்றபோது சண்முக பாண்டியன் அங்கிருந்த கத்தியை எடுத்து அந்த ரவுடியை குத்தி விடுகிறார்.
அதன் காரணமாக தனது பெற்றோரை இழந்த சண்முக பாண்டியன், சிறு வயதில் சரத்குமாருடன் வேலைக்கு சேர்ந்து அவரைப் போலவே தவறான செயல்களில் ஈடுபடுகிறார். அவரை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறார் சரத்குமார். ஒரு கட்டத்தில் இருவரும் மாமன் மச்சானாக பழகுகின்றனர். கஞ்சா மற்றும் கடத்தும் இவர்கள் அடிக்கடி காவல் துறையில் சிக்குகின்றனர். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி சுஜித் சங்கர் இவர்கள் இருவரையும் கைது செய்ய முயன்றபோது மோதல் ஏற்படுகிறது.ஒரு கட்டத்தில் எஸ்பி சுஜித் சங்கர் இவர்கள் இருவர் மீதும் வஞ்சம் வைத்து தீர்த்து கட்ட நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் ‘கொம்பு சீவி’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், கிராமத்து இளைஞனாக அந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கண்களும், அடிதடிக் காட்சிகளும்,காதல் காட்சிகளிலும் நடிப்பில் வெற்றி பெற்று இர்ருக்கிறார். சில காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் திணறி இருந்தாலும் குறை வைக்கவில்லை.
இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக சரத்குமார் ரொக்கப்புலி கதபாத்திரத்தில் நரைத்த தலை,மீசை என்று தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார். அவரது உன்னதமான நடிப்பு இப்படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக அதற்குண்டான தோற்றத்தில் மிடுக்காகவும், அழகாகவும் இருக்கிறார். கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுவார் என்பது தெரிகிறது.
ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக வரும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான்,லாரி டிரைவராக முனீஷ் காந்த்,சரத்குமார் உடன் சுற்றும் அல்லக்கையாக கல்கி ராஜா ஆகியோர் தங்கள் நகைச்சுவைக்கான பங்கைச் செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியாக சிறிய வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை கேட்கும் ரகம்தான். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘வஸ்தாரா’ பாடல் நன்றாக வந்திருக்கிறது.
இந்தப் படம் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்.
இந்தப் படத்தை இயக்கியுள்ள பொன்ராம் ஏற்கெனவே வணிகரீதியிலாக வெற்றி பெற்ற ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’,’ ரஜினி முருகன்’ போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்தை தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார். இதில் கூடுதலாக ஆக்சனையும் சேர்த்து மாறுபட்ட கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறார். சரத்குமாரையும், சண்முக பாண்டியன் விஜயகாந்தையும் முதன்முறையாக இப்படம் மூலம் இணைத்து கதைக்கு ஏற்றவாறு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் தடுமாறி இருப்பது நன்றாக தெரிந்தாலும் வழக்கமான கமர்ஷியல் பாணியிலான படமாகத்தான் இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘கொம்புசீவி’ படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.
ரேட்டிங் 2.5/5.