நடிகர் விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான்விஜய், கபீர் துகான் சிங் ,மகிமா குப்தா, விஜய் சேயோன், ஆல்ஃப்ரட் ஜோஸ், சிவ கிருஷ்ணா, இலக்கியா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “மகா சேனா”. இப்படத்தை தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு- மனாஸ் பாபு.டி.ஆர், ஏ பிரவீன் குமார் இசையமைத்துள்ளார் .மருதம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இயற்கை வளம் வாய்ந்த குரங்கணி மலை மக்களுக்கும் அதன் அடிவாரத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகைமை நிலவுகிறது. இந்தப் பகைக்கான காரணம் பழங்குடியின மக்கள் கொண்டாடும் யாளீஸ்வரர் சிலைதான். அந்த ஊரில் இருக்கும் யாளீஸ்வரர் கோவிலில் குடி கொண்டிருக்கும் அந்த சிலையை அடிவாரத்து மக்கள் கைப்பற்ற நினைத்து பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அந்த சிலையை அவர்களால் எந்த சூழ்நிலையிலும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் குரங்கணிபகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் இடையே ஜென்ம பகை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
மலைக்கு மேல் வசிக்கும் பழங்குடியின மக்களின் தலைவனாக விமல் இருக்கிறார். அவருடைய மனைவி சிருஷ்டி டாங்கே. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த சூழலில் அந்த யாளீஸ்வரர் கோவிலில் திருவிழாவை நடத்துவதற்காக அந்த ஊர் மக்கள் முடிவு செய்கிறார்கள். அதேசமயம் அந்த பகுதியின் வனக் காப்பாளராக இருக்கும் ஜான் விஜய் சிலை கடத்தல் பெரும் புள்ளியான கபீர் துகான் சிங் காட்டும் பேராசையால் பழம் பெருமை வாய்ந்த அந்த யாளீஸ்வரர் சிலையை கடத்த திட்டமிடுகிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்த விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறார்.அந்த யானை அவருடைய மகளையே தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.அந்த யானையைத் தேடிச் காட்டிற்குள் செல்கிறார் விமல். அதே சமயத்தில் மலைகிராமக் கோயிலில் இருக்கும் மதிப்புமிக்க யாளீஸ்வரர் சிலையை கடத்தும் முயற்சியில் வனக் காப்பாளராக இருக்கும் ஜான் விஜய் ஈடுபடுகிறார். இறுதியில் யாளீஸ்வரர் சிலையை கடத்தினார்களா? காட்டுக்குள் சென்ற யானை என்னவானது? என்பதுதான் ’மகாசேனா’ படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் மலைப்பிரதேச மக்களின் பிரதிநிதியாக செங்குட்டுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விமல். அவர்தான் ஊர் தலைவர் என்றாலும் அந்த தலைவருக்குரிய கெத்து எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான அலட்சிய உடல்மொழியைத் தாண்டி திடமான பழங்குடி இளைஞராக நடிக்க முயன்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வீர பெண்ணாக கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தாலும், வீரத்தை வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளில் அடங்கிப் போகிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடவில்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் கோமாளித்தனமாக நடித்திருப்பதால் வெறுப்பு ஏற்படுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளருக்கு மகிழ்ச்சி தரும் கதைக்களம். மலை,மலையடிவாரம்,காடு ஆகிய இயற்கை எழில் மிகுந்த சூழலை அள்ளிக் கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர்.
ஏ.பிரவீன் குமாரின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் கேட்கும் ரகம்தான். உதய் பிரகாஷ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் மலைப்பகுதி மக்களின் வாழ்வியலை சொல்லி இருக்கிறார். காட்டை பின்னணியாகக் கொள்ளாமல் ஒரு கதாபாத்திரம் போல் உணர வைத்திருக்கிறார். படத்தில் தான் சொல்ல வந்ததைவிட்டு விட்டு சிலை கடத்தல் கும்பல், அதற்கு உடந்தையாக இருக்கும் வன அதிகாரி, யானை, கல்லூரி சுற்றுலா என பல திருப்பங்களில் சிக்கிச் சுழன்று திணறி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘மகாசேனா’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5.