’ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் ,ராதிகா சரத்குமார் ,சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்ராயன், அகஸ்டின் ,பிளேடு சங்கர், ராமச்சந்திரன் ,அக்ஷதா அஜித், குகாசினி, காயத்ரி ஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கிருக்கிறார் ஜே. கே .சந்துரு. ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்,இசை – ஷான் ரோல்டன் ,படத்தொகுப்பு – பிரவீன் கே எல்,தயாரிப்பு பேஷன் ஸ்டுடியோஸ் – தி ரூட்..

பாண்டிச்சேரியில் அங்குள்ள சக்திவாய்ந்த தாதாவாக அறியப்படும் சூப்பர் சுப்பராயனை, முன் பகை காரணமாக ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிடுகிறது. அவருக்குப் பெண்கள் மோகம் இருப்பதால் ஒரு நாள் விலைமாதுவைச் சந்திக்கப் புறப்படும்போது தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார் சூப்பர் சுப்பராயன். இதனால் பதறிப் போன கீர்த்தி சுரேஷும், அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் அவரை வெளியே போகுமாறு விரட்டுகிறார்கள் அவரை இருவரும் அடித்து தாக்குகிறார்கள். ஆனால் சூப்பர் சுப்பராயன் துப்பாக்கியை சுடுவதற்கு எடுக்கிறார். அம்மாவும் மகளும் பயந்து பதற்றத்தில் அவரைத் தள்ளிவிட சூப்பர் சுப்பராயன் கீழே விழுகிறார். தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன்.

இதனால் பயந்து போன கீர்த்தி சுரேஷும், அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் கொலைப் பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும் களத்தில் இறங்குகிறது. இந்த நிலையில் சூப்பர் சுப்பராயனின் மகனான சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேட, மறுபக்கம் உயிரிழந்த ரவுடியின் உடலைக் கைப்பற்றி அதன் மூலம்  ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சி செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்யின் விசாரணை, அழுத்தம், தொல்லைகள் என பல விதத்தில் பாதிக்கப்பட்டாலும் கீர்த்தி சுரேஷும், அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் சூப்பர் சுப்பராயனின் சடலத்தை அப்புறப்படுத்தினார்களா? இல்லையா? என்பதுதான்  “ரிவால்வர் ரீட்டா’ படத்திந் மீதிக் கதை.

கதையின் நாயகியாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.பயம் பதட்டம் கோபம் தைரியம் என்று பலவிதமான முகபாவனைகளைக் காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.அவரது அழகான தோற்றமும் இளமையும் தற்போது ரசிகர்களை கவர்ந்தாலும், இப்படத்தில் அம்மாவைச் செல்லமாகக் கண்டிப்பது, பழிவாங்கத் துடிக்கும் காவல்துறை அதிகாரியை அவருடைய பாணியிலேயே பழிவாங்குவது போன்ற காட்சிகளில்  தனது இயல்பான நடிப்பால் மிக எளிதாகக் கடக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வருகிறார் ராதிகா. நீண்ட கால சினிமா அனுபவத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ்,காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் ஆகிய அனைவரும் பதட்டம் இல்லாமல் நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் ஒன்று, இரண்டு பேரை தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையமைத்த பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசை படத்திற்கு தேவையான முறையில் சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை கலர்புல்லாகவும், படத்தை பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம்.

எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, இந்தப் படத்திற்காக எடுத்துக் கொண்ட கதை பழகியது போல் தோன்றினாலும் புது விதமான கோணத்தில் சொல்லிச் சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பையும் வலிமையையும் சேர்த்திருக்கலாம்.

மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’  அனைத்து ரசிகர்களையும் கவரும் படம்.

'Rivalvar Reedda' Movie ReviewFeatured
Comments (0)
Add Comment