‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்!

சென்னை:

கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஶ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, விணுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இணைய தொடர்தான் “வேடுவன்” இந்த தொடரை எழுதி, இயக்கி இருப்பவர் பவன்குமார்.

ஒரு சினிமாவுக்குள்ளேயே சினிமா எடுப்பது என்பது பல படங்களில் கதையாக வெளிவந்திருக்கிறது அதுபோல இந்த ‘வேடுவன்’ இணைய தொடரிலும் அந்த மாதிரியான  ஒரு கதையை உருவாக்கி சூரஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடிகராகவே நடித்திருக்கிறார்.  இந்த கதையைப் பொருத்தவரையில்,

அவர் கதாநாயகனாக நடித்த ஒரு படம் தோல்வி அடைந்ததால் மனம் வேதனையடைந்த  சூழ்நிலையில், ஒரு இயக்குனர் உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் அவரிடம் கதை சொல்ல வருகிறார். அதுவும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதை என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஒரு உண்மையான ரகசிய காவல்துறை அதிகாரி எப்படி இருப்பாரோ அதே மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் கண்ணா ரவி.  ஒரு மூத்த  காவல்துறை மேல் அதிகாரி ரகசியமான முறையில் வடசென்னையில் உள்ள ஒரு பெரிய ரவுடியை என்கவுண்டர் செய்ய கண்ணா ரவிக்கு  உத்தரவிடுகிறார். இந்த நிலையில் கண்ணா ரவி ஒரு பிச்சைக்காரன் வேடம் போட்டு, என்கவுண்டர் செய்ய வேண்டிய அந்த ரவுடியை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  ஒரு கட்டத்தில் அந்த ரவுடி சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது  என்கவுண்டர் செய்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்.

அதன்  பிறகு சிறுவயதில் இருந்தே பலரை கொன்று, தற்போது ஊர் மக்களால் பெரும் வள்ளலாக உயர்ந்து நிற்பவரான முன்னாள் ரவுடி சஞ்சீவை என்கவுண்டர் செய்யவேண்டும் என்று மூத்த  காவல்துறை மேல் அதிகாரி  உத்தரவிடுகிறார்.  அவரை தொடர்ந்து கண்காணிக்க முயலும்போது, சஞ்சீவ் தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பதையும், ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் நல்ல மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி தெரிந்து கொள்கிறார். ஆனால், தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் சஞ்சீவை எங்கவுண்டரில் சுட்டுக் கொன்றாரா? இல்லையா? என்பதுதான் “வேடுவன்” இணைய தொடரின் மீதிக் கதை.

நடிகர் கதாபாத்திரம் என்பதால் பலவித கெட்டப்புகள் போட கூடிய வாய்ப்பு இந்த தொடரில் கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது. ரகசிய காவல்துறை அதிகாரி , பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கண்ணா ரவி, நடிப்பில் அசத்தியிருக்கிறார். இந்த ‘வேடுவன்’ வெப் சீரிஸில் சூரஜ், அருண்மொழி வர்மன் என இரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று, தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரும் ரசிக்கும் விதத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

ஆதிநாதன் என்ற ரவுடி கதபாத்திரத்தில் நடித்திருக்கும்சஞ்சீவின் நடிப்பும் இந்த தொடருக்கு மிகப்பெரிய பலமாகவும்  இதன் வெற்றிக்கு கை கொடுத்து இருக்கிறது.

ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, காட்சியின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த  கதை என்ன என்பதை உணர்ந்து படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை, இந்த தொடரை முன்னணிக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் பவன்குமார். கதையின் நாயகன் ஒரு திரைப்பட நடிகர் என்று எடுத்துக் கொண்டு திரைக்கதையை மிக நேர்த்தியாக ஒவ்வொரு எபிஸோட்களையும்  சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் அடுத்து என்ன நடக்கும் என்பதை பரபரப்பான முறையில்  இயக்கி, அவருக்குப் பலம் என்றாலும் அனைவரும் ரசிக்கும் விதத்தில் எடுத்து இருப்பதை கண்டிப்பாக பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘வேடுவன்’ இணையத் தொடர்  ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.

 

"Veduvan" Web Series Review NEWSFeatured
Comments (0)
Add Comment