நடிகர் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்ய தேவ், வெங்கடேஷ் வி.பி., அய்யப்பா பி. சர்மா, கோபராஜு ரமணா, மணீஷ் சவுதாரி, பாபுராஜ், மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித் கோஷி, ரோகிணி, பூமி ஷெட்டி, ரவி கிருஷ்ணா, நவ்யா சுவாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘கிங்டம்’. இப்படத்தை கவுதம் தின்னனூரி கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
1920 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது. அதை எடுத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 களின் முற்பகுதியில் நடக்கும் காலங்கட்டங்களில் கதை நகருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான நாயகன் விஜய் தேவரகொண்டா, சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது அண்ணனை தேடும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரது அண்ணன் ஸ்ரீலங்காவில் தங்க கடத்தல் தொழில் செய்து வருவதாக இவருக்கு காவல்துறையை சேர்ந்த தேசிய பாதுகாப்பு துறை சிறப்பு அதிகாரி மூலம் தெரிய வருகிறது. ஒரு நாள் தனது மேலதிகாரி தேவை இல்லாமல் ஒரு முதியவரை தாக்கும்போது, கோபப்பட்டு அவரை தாக்கி அடித்து விடுகிறார். அதனால் விஜய் தேவரகொண்டாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் தைரியத்தை பார்த்து அவரிடம் தேசிய பாதுகாப்பு துறை சிறப்பு அதிகாரி தங்க கடத்தல் கேங்ஸ்டர் மாஃபியா குழுவை கண்டுபிடிக்க ஒரு உளவாளியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 18 ஆண்டுகள் காணாமல் போன தனது சகோதரர் சத்யதேவை மீண்டும் சந்திப்பதாக அவருக்கு உறுதி அளிக்கப்படுகிறது.
இலங்கை தீவில் கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்க கட்டிகளை கொண்டுவரும் வேலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் கொத்தடிமைகளாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். தனது அண்ணனை மீட்டு தனது அம்மா முன்பு நிறுத்த எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ரகசிய உளவாளியாக இலங்கை மாஃபியா கூட்டத்திற்குள் நுழைகிறார். அந்த மாஃபியா கூட்டத்திற்குள் நுழைந்த விஜய் தேவரகொண்டா, இலங்கையில் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனது அண்ணன் சத்ய தேவ், பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து அந்த குழுவை வழி நடத்துகிறார் என்பதை அவர் அறிகிறார். பின்னர் விஜய் தேவரகொண்டா, தனது அண்ணனை கண்காணிக்கவும், இலங்கையில் இருக்கும் தங்க கடத்தல் மாஃபியா கும்பலை கண்டுபிடிக்கவும் யாழ்ப்பாணச் சிறைக்குள் ஊடுருவி, இறுதியாக தன் அண்ணன் சத்யதேவைச் சந்திக்கிறார். ஆனால் அந்த தங்க கடத்தல் கேங்ஸ்டர் மாஃபியா குழுவில் அண்ணன் ஒரு தலைவனாக இருப்பதால் அவரால் வெளியே வர முடியாமல் தவிக்கிறார் விஜய் தேவரகொண்டா.
தன் அண்ணனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இலங்கை செல்லும் விஜய் தேவரகொண்டா, அங்கு கொத்தடிமைகளாக இருக்கும் ஒரு இனத்தையே மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இந்த சூழ்நிலையில் அந்த கும்பலுக்கு ஒரு போலீஸ் இன்பார்மர் வந்துள்ளதாக தகவல் வருகிறது. தங்க கடத்தல் தலைவனுக்கு அண்ணன் & தம்பி இருவர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இறுதியில் தன் அண்ணனையும், கொத்தடிமைகளாக இருப்பவர்களையும் அந்த கடத்தல் கும்பலிடமிருந்து விஜய் தேவரகொண்டா காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘கிங்டம்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும், விஜய் தேவர கொண்டாவை இதுவரை லவ்வர் பாயாகவே பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதத்தில் எதிரிகளை அடித்து நொறுக்கும் மாறுபட்ட முறையில் தனது தலை முடி தோற்றத்தை மாற்றியமைத்து நடித்து இருப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காவல்துறை உளவாளியாகவும் அண்ணனை தேடி செல்லும் பாசகார தம்பியாகவும் இரண்டு உணர்வுகளை தாங்கி இலங்கை தீவிற்கு செல்லும் விஜய் தேவரகொண்டா அங்கு அண்ணனைக் கண்டு மகிழ்வதும், உளவாளியாக இருந்து காவல்துறைக்கு கடத்தல்காரர்களின் தகவல்களை கொடுப்பதும் என நடிப்பில் வித்தியாசம் காட்டி இருப்பதை பாராட்ட வேண்டும்.
விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ்..இவர்கள் இருவரும் உண்மையான அண்ணன் – தம்பி தோற்றத்தில் இருப்பது படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். சத்யதேவ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை குறையின்றி செய்திருக்கும் சத்யதேவ் ரசிகர்கள் மத்தியில் சிவாவாகவே மனதில் நிற்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு வசீகரமான அழகு முகம், அவரது காதல் காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சியில் கீர்த்தியும், சில காட்சிகளில் ராஷ்மிகா போல சாயல் இருப்பது இவருக்கு ப்ளஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குருவாக நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியாவாக நடித்திருக்கும் பாபுராஜ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த பணியை குறையில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் & ஜோமன் டி.ஜான் ஆகியோர் படத்தை பிரமாண்டமாக படமாக்கியிருக்கின்றனர்.. இலங்கை ராணுவ சேசிங் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் இயற்கை எழில் மிகுந்த இடங்களை காட்டி மிரட்டி இருக்கின்றனர்..
அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தாலும், குறிப்பாக பின்னணி இசையும் கதைக்கு தகுந்தவாறு அதிர வைக்கின்றன.
இயக்குநர் கௌதம் தின்னனுரி. இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு அண்ணனை தேடும் போலீஸ் கான்ஸ்டபிள்.. குற்ற பின்னணி கொண்ட கும்பல் சதி, போலீஸ் உளவாளி, இலங்கையில் சிக்கிய பழங்குடியின மக்கள், தங்க கடத்தல் கும்பல் என.. இவை அனைத்தையும் கலந்து கமர்சியலாக கதை எழுதி விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்த்தி சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘கிங்டம்’ ரசிக்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.