CHENNAI:
ஜெயராம் ,ஊர்வசி, யோகிபாபு , சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார்,ஜி கே எம் தமிழ் குமரன், மிஷ்கின் ,சிங்கம் புலி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “பரிமளா அண்ட் கோ”
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பரிமளா என்கிற ஜெயராம், சுதந்திரம் என்கிற ஊர்வசியை திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியான தம்பதிகளாக தங்களது மூத்த மகள் சஞ்சனா, இளைய மகள் அனந்திகா ஆகிய இரண்டு மகள்களுடன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்த குடும்பம் ஒரு வாடகை வீட்டில் சிக்கனமாக, அமைதியாக வாழ்ந்து வரும் சூழலில் இளைய மகளை மீனவ குப்பத்தில் இருக்கும் போதை மருந்து விற்பனை செய்யும் சாண்டி அடிக்கடி வம்புக்கு இழுத்து காதலிக்கும்படி வற்புறுத்துகிறார். அது மட்டும் இல்லாமல் அனந்திகாவின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தொல்லை கொடுத்து இம்சையை ஏற்படுத்தி வருகிறார். அவர் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவரது தாதா அம்மாவும் மகனது காதலுக்கு ஆதரவாக ஜெயராம் குடும்பத்தை அவ்வபோது மிரட்டி வருகிறார்.
சாண்டியின் அட்டூழியங்கள் எல்லை மீறி கொண்டே போக “இவனை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து விட்டால் என்ன?” என்று அந்தக் குடும்பத்தில் இருக்கும் நான்கு பேரும் யோசிக்கிறார்கள். இந்த சமயத்தில் இவர்கள் கொலை செய்ய நினைத்த சாண்டியை மறுநாள் காலையில் மர்மமான முறையில் கொலையுண்டு இறந்து கிடக்கிறார். நான்கு பேருமே சாண்டியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைத்தது உண்மை என்றாலும் கொலை செய்யும் அளவிற்கு யாரும் அங்கு துணிவுடன் இல்லை. இக்கொலைச் சம்பவத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஷ்கின் தீவிரமாக விசாரிக்கும்போது, சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் ஜெயராம் குடும்பத்தினர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் சாண்டியின் அம்மாவும் கொலை செய்யப் படுகிறார். அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் இந்த கொலைகள் சம்பந்தமாக சந்தேகப் பார்வையில் சிக்குகிறார்கள். அப்படியென்றால் இந்த கொலைகளை செய்தது யார்? ஜெயராம் குடும்பம் அந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறது? என்பதுதான் “பரிமளா அண்ட் கோ” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் ஜெயராம் ஒரு ஹீரோவாக அல்ல, ஒரு தந்தையாக தனித்துவம் காட்டி ஜொலிக்கிறார். குடும்பத் தலைவர் பரிமளா என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு. தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னால் முடிந்த அளவுக்கான நகைச்சுவை நடிப்பையும் அப்பாவி கேரக்டரையும் மிக கச்சிதமாக செய்திருக்கிறார்.
சுதந்திரம் என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமாகத் தோன்றினாலும் அவ்வப்பபோது பேசும்போதும் போலீஸ் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் ஊர்வசி தனது அப்பாவித்தனத்துடன் வெளிப்படுத்தும் வசனங்களும் உணர்ச்சிகளும் திரையரங்கில் சிரிப்பை வர வைக்கின்றன. வழக்கம்போல தனது தனித்துவமான நடிப்பால் பல காட்சிகளை உயிர்ப்புடன் மாற்றி அசத்தியுள்ளார்.
மூத்த மகளாக வரும் சஞ்சனா மற்றும் இரண்டாவது மகளாக வரும் அனந்திகா ஆகியோர் தங்களின் எமோஷனல் மற்றும் பயந்த சுபாவக் காட்சிகளைச் சரியாகச் செய்துள்ளனர்.
வில்லனாக வரும் சாண்டி மாஸ்டர் காமெடி கலந்த வில்லத்தனத்தைக் கொடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளராக வரும் யோகி பாபு வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார்.
காதலராக வந்து சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் சந்தோஷ் சோபன், போலீஸ் அதிகாரியாக ஜிகேஎம் தமிழ்குமரன், சாண்டி மாஸ்டரின் காதலியாக பூர்ணிமா, அம்மாவாக வரும் காயத்ரி, மற்றும் சென்ராயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட காட்சிகளை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் அழகான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். வெளிப்புற காட்சிகளையும் வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளையும்கூட சிறப்பாகவே படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் பாக்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களை இயக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்த இயக்குனர் பாண்டிராஜ், இந்தப் படத்தை குடும்பப் பின்னணியில் ஒரு க்ரைம் கதையாகக் கொடுத்திருக்கிறார். ஒரு கொலையைச் செய்துவிட்டு ஜாலியாக தப்பித்துப் போவதுமாக சினிமாவில் காட்டுவது போன்ற காட்சிகள் வளரக் கூடிய நமது இன்றைய இளைஞர்களை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. கொலை, போதைப்பொருள் போன்ற சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதை ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பின்னணியில் காமெடியாகக் கொடுக்க முயன்ற விதம் பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், ‘பரிமளா அண்ட் கோ’ காமெடி கலந்த திரில் படம் என்பதால் அனைவரும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.