Take a fresh look at your lifestyle.

அதிக திரையரங்குகளை இலக்காக வைத்து ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

8

சென்னை:

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆட்டி’ திரைப்படம் தற்போது தனது வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் ஜூன் 5ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை தயாரித்துள்ள இசக்கி கார்வண்ணன், படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக அவர் நடித்துள்ள நிலையில், ‘அயலி’ தொடரின் மூலம் கவனம் பெற்ற அபி நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களின் உரிமை, சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வரலாற்று காலங்களில் பெண்கள் முன்னின்று போராடி பெற்ற வெற்றிகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் சந்தித்த பல்வேறு சமூக மற்றும் பாலியல் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களையும் படம் பேசுகிறது.

தற்போது திரையரங்குகளில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ மற்றும் அர்ஜூன் நடித்துள்ள ‘BLAST’ திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், புதிய படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சவாலான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தரமான படைப்பாக உருவாகியுள்ள ‘ஆட்டி’ திரைப்படம் அதிகமான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள வி ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் காமாட்சியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, அதிக திரையரங்குகள் கிடைக்கும் சூழலை உருவாக்கும் வகையில் படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைப்பது சிறந்த முடிவாக கருதப்பட்டது.

அதன்படி, பெண்களின் வீரத்தையும் உரிமைப் போராட்டங்களையும் பேசும் ‘ஆட்டி’ திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.