சென்னை:
ஆர்யா, சரத்குமார், கௌதம் ராம் கார்த்திக் ,மஞ்சு வாரியர் அனேகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயபிரகாஷ் காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள படம்தான் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X). இப்படத்தை மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சோதனை முயற்சிக்காக நந்தா தேவி மலைப் பகுதிக்கு ஒரு சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தின் மூலப் பொருள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு ஏற்பட்ட ஒரு பயங்கர பனிச்சரிவில் இந்த அணு ஆயுதத்தின் மூலப் பொருள் தொலைந்து போகிறது. இதையறிந்த எதிரி நாடுகள் அந்த கைப்பற்றி அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்திய ரா அமைப்பின் உளவாளியாக சரத்குமார் அந்த அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருளை யாருக்கும் தெரியாமல் சில காலமாகக் காப்பாற்றிவருகிறார். தன் குடும்பத்தைப் பிரிந்து போலியான பெயரை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் சரத்குமார்.. இந்த அணு ஆயுத மூலப் பொருளை பத்திரப்படுத்துவதிலேயே தன்னுடைய வாழ்க்கையையே பணயம் வைத்துவிட்டார் சரத்குமார்.
பல ஆண்டுகள் கழித்து அணு ஆயுதத்தின் மூலப் பொருளை ரஷ்யா கண்டுபிடிக்கிறது. அதை மையமாக வைத்து பாகிஸ்தானுடன் சேர்ந்து ஒரு ஆபத்தான திட்டம் தீட்டப்படுகிறது ரஷ்யா. இந்த அணு ஆயுத மூலப் பொருளை தேடி அதை கைப்பற்ற நினைத்த சரத்குமாரையும் ரஷ்ய ராணுவம் கைது செய்கிறது. இந்த சூழலில் இந்த அணு ஆயுத மூலப்பொருளை கைப்பற்ற ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு இருக்கும் சரத்குமாரின் உதவியோடு அந்த மூலப் பொருளை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற திட்டம் தீட்டுகிறார்கள். இதற்காக ரா அமைப்பின் ஏஜெண்ட்டான ஆர்யாவையும் அவருடைய ரா ஏஜெண்ட்டு குழுக்கள் அனைத்தையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள். இதற்கிடையில் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறும் G20 மாநாட்டில் அணு ஆயுத தாக்குதல் நடக்க இருப்பதாக ரா அதிகாரியான மஞ்சு வாரியருக்கு தகவல் வருகிறது. இந்திய வலிமையைக் கேள்விக்குள்ளாக்கவும் அணு ஆயுத ஆபத்தை உலகத்திற்கு உணர்த்தவும் அன்று நடக்க இருந்த மிகப்பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா? இல்லையா? என்பதுதான் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா தனது கட்டுமஸ்தான உடலுடன், ஒரு ‘ரா’ ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கு தேவையான உடல் அமைப்பை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
எதிரிநாட்டுக்கு வேலை செய்யும் வில்லன் வேடத்தை ஏற்றிருக்கிறார் கௌதம் கார்த்திக், தனது உருவத்திற்கு பொருந்தாத ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்தவரை நியாயம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார்.
ரா அமைப்பு உயர் அதிகாரியாக இந்திரா வர்மா கதா பாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியருக்கு சவாலான வேடம்தான் என்றாலும் அதில் அவர் ஈடு கொடுத்து ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்.
இவர்களை தவிர ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரு நடிப்புக் கலைஞர்களாகக் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.
பிரம்மாண்டமான காட்சிகளைத் தனது ஒளிப்பதிவில் அசத்தலாகக் காட்டி மிரட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட். பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒளிப்பதிவு செய்திருப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான வண்ணங்களை புகுத்தி படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயீரூட்டுவதற்கு திபு நினன் தாமஸ் கடுமையாக உழைத்திருப்பது நன்றாக தெரிகிறது. சில உணர்ச்சிகரமான காட்சிகளில் இசை அதிகமாக ஒலிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.
இந்திய உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை முன்னணியில் வைத்து அவற்றில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் காட்சிகளை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த். ஆங்கிலப் படங்களின் மோகத்தால் உருவான திரைக்கதை, உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லத் தவறிய விதம் மற்றும் தேவையில்லாத மசாலாத்தனமான படத்தின் சில காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவாகத் தெரிவதும் ஒரு சிறு குறையாகத் தெரிகிறது.
மொத்தத்தில், ‘மிஸ்டர்.எக்ஸ்’ ஆங்கில படங்களுக்கு நிகரான ஒரு படம்.
ரேட்டிங் 3/5.
திரைநீதி செல்வம்.