CHENNAI:
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் ரூம் பாய் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.
இப்படத்தில் நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனது தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கியவர்களையும் தனது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி தாய் தந்தையை இழக்க செய்தவர்களையும் நாயகன் ஒரு ரூம்பாயாக நுழைந்து அவர்கள் செய்த சதிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட கொடிய கயவர்களை அழிப்பதே’ ரூம் பாய்’ படத்தின் கதை.
சிறுவர் கூர்நோக்கு பள்ளியின் வார்டனாக இருக்கும் தந்தை பிரபாகர் நான்கு நாட்களாக காணவில்லை என்று அவரது மகள் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறை தீவிர விசாரணையை தொடங்குகிறது. இந்த சூழலில் அந்த சிறுவர் கூர்நோக்கு பள்ளியிலிருந்து வெளியே வரும் நிகில் வேலை தேடி தன் சித்தப்பா வசிக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கிருக்கும் இமான் அண்ணாச்சியில் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார் நிகில். அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் காத்து கருப்பு கலையோடு நட்புடன் பழகுகிறார். அந்த ஹோட்டலில் நடந்த ஒரு சம்பவத்தால், இருவரையும் வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் இமான் அண்ணாச்சி. அதே ஏலகிரியில் உள்ள குயின் மார்க் என்ற வேறொரு ஹோட்டலில் நண்பன் காத்து கருப்பு கலையுடன் வேலைக்கு சேர்கிறார் நிகில்.
அந்த புதிய ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்குச் சேர்கிறான் நிகில். அங்கே சேர்ந்ததும் அங்கே நிகழும் பல கொடூர விஷயங்கள் நிகிலுக்கு தெரிய வருகின்றன . அங்கே நடக்கும் பாலியல் அத்துமீறல்களையும் அநியாயங்களையும் கண்டு சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க நினைக்கிறான் நிகில். அப்படி பழிவாங்க துடிக்குப்போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் நிகிலுக்கு தெரிய வருகின்றன. அவனுக்குத் தெரியாத தனது குடும்ப வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டு நிராதரவாகத் தான் நிற்கும் நிலைக்குக் காரணமானவர்களை தெரிந்துக் கொள்கிறான். அவர்களை அவன் எப்படிப் பழிக்கு பழி வாங்குகிறான் என்பதுதான் ‘ரூம் பாய்’ படத்தின் மீதிக் கதை
கதாநாயகனாக நடித்திருக்கும் நிகில், தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் அனைவரையும் இழந்து அனாதையாகி.அந்த பெரும் வலியை தன் நடிப்பில் சிறப்பாக காட்டியிருக்கும் நாயகன் நிகில் இதற்குக் காரணமானவர்களைப் பழிதீர்க்கக் கிளம்பும்போது முற்றிலும் வேறுமனிதராக மாறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அறிமுக நடிகராக இருந்தாலும் துடிப்பான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு மட்டும் முகம் காட்டியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அருண்ராஜாவை விட, கூர்நோக்கு மையத்தின் காப்பாளராக நடித்திருக்கும் பிரபாகர் வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, கேரளா பெஹமின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து இருக்கின்றனர்.
இப்படத்தின் கதை பெரும்பாலான காட்சிகள் வீட்டிலும், ஹோட்டல் உள்ளேயும் நடக்கின்றன. வெளிப்புறக் காட்சிகள் அதிகம் இல்லை என்பதால் அதற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார் பாரதி ராஜன்.
வேலன் சகாதேவன் இசையில் பட்டர் ஃபிளை கண்ணடிச்சி உட்பட பாடல்கள் கேட்டு ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசை கதைக்கேற்ப பயணித்திருக்கிறது.
சொகுசு விடுதியில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதனை வைத்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஆகியவற்றுடன் தவறு ஏதும் செய்யாத நாயகன் கூர்நோக்கு பள்ளியில் இருப்பது, அவரது குடும்ப பின்னணி என்று பல அம்சங்களோடு, பல கதாபாத்திரங்களை புகுத்தி குடும்பம் பாசம் காதல் நகைச்சுவை அனைத்தும் கலந்த கலவையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.
மொத்தத்தில், ‘ரூம் பாய்’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.