சென்னை:
ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் ‘நீ ஃபாரெவர் (Nee Forever)’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி. இப்படத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிறுவயதிலிருந்து தாத்தா ஒய் ஜி மகேந்திரனின் கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் சுதர்சன் கோவிந்த், காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதல் மற்றும் காதலர்களுக்கான செயலி ஒன்றை உருவாக்க முயற்சி செய்கிறார். ஆனால், தனிப்பட்ட காதல் அனுபவமே இல்லாத அவரிடம், இப்படிப்பட்ட ஒரு செயலியை உருவாக்கும் நம்பிக்கை எவ்வாறு வருகிறது என்பது புரியாத நிலையில், இணையதளத்தில் வெளியிடுவதற்காக ‘நீ ஃபார் எவர்’ என்ற இளைஞர்களுக்கான டேட்டிங் செயலியை கண்டுபிடித்து அதை ஒரு ஐடி அதிபருக்கு விற்க முயல்கிறார் சுதர்சன் கோவிந்த். இந்த சூழலில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி அர்ச்சனா ரவி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார்.
ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் நல்லதொரு காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூற, காதலைப் பற்றி அறிய எண்ணுகிறார் அர்ச்சனா. அதேபோல் காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்குவதற்கு, ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள முடிவு செய்கிறார் சுதர்சன் கோவிந்த். இருவருமே, காதலைப் பற்றி தெரிந்து கொள்ள டேட்டிங் செயலி மூலம் அறிமுகாமாகி சந்தித்துக் கொள்கின்றனர். இந்த இருவருமே நடிப்புக்காக காதல் செய்யும்போது அது உண்மையான காதலாக மாறுகிறது. அதன் பிறகு இருவரது காதல் வாழ்க்கையில் என்ன நடந்தது? அந்தக் காதலின் நிலை என்ன? என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ‘நீ ஃபார் எவர்’.
சுதர்சன் கோவிந்த், அஜய் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மென்மையான மற்றும் உணர்ச்சிகரமான இளைஞனாகத் தனது அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை நேர்மையாக வழங்கியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றம், துறு துறுப்பான உடல் மொழி மன இறுக்கத்தால் வளர்ந்த குணச்சித்திரம் நிறைந்த கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார்.
நாயகியாக அர்ச்சனா ரவி, இயக்குநர் வாய்ப்பு தேடும் மதி என்கிற பாத்திரத்தில் வருகிறார். அழகான தோற்றம் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் குணம் என்று சமகாலப் பெண்களைப் போல சிறந்த முறையில் நடித்து அனைவரையும் கவர்கிறார்.
கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து ஒளிப்பதிவு செய்து, அதனை அழகாக திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி.
இசையில் தனிக்கவனம் செலுத்தி, தனக்கான திறமையை காண்பித்து, நன்றாகவே பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த்.
இன்றைய இளைய தலைமுறை அதிகமாக நடமாடும் நவீன டேட்டிங் செயலி குறித்த தகவல்கள், தேவைக்கேற்ற நகைச்சுவை,இளமைத் துள்ளல் ஆகியனவற்றைக் கலந்து காதலோடு குடும்ப உணர்வுகளையும் உணர்ச்சி மயமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி.
. மொத்தத்தில் ’நீ ஃபார் எவர்’ காதலர்களுக்கு ஏற்ற படம்.
ரேட்டிங் 3/5.