’குமார சம்பவம்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘குமார சம்பவம்’. என்ற இந்தப் படத்தில் குமரன் தியாகராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், ஜி.எம்.குமார், வினோத் முன்னா, வினோத் சாகர், பாலசரவணன், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், கவுதம் சுந்தர்ராஜன், அர்ஜய், சார்லஸ் வினோத்,விஜய் ஜாஸ்பர், கே.சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி.தாரணி, கவிதா, சரவண் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
புதுமுக நடிகர் குமரன் தன் தாத்தா, தாய், தங்கையுடன் ஜமீன் வீடு மாதிரி உள்ள ஒரு பெரிய வீட்டில் வசித்து வருகிறார். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கின்ற ஆசையில் பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வதற்காக குமரன் செல்லும்போது யாரும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வரவில்லை. இதனால் குமரன் மனம் உடைந்து வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
குமரனின் கதையை யாரும் கேட்டு தயாரிக்க முன் வராததால் தாங்கள் வாழும் வீட்டை விற்று, அதில் வரும் தனது பங்குத் தொகையை வைத்து ஒரு படத்தை இயக்க தாத்தா ஜி எம் குமாரிடம் வீட்டை விற்குமாறு குமரன் கேட்க, முதலில் சம்மதிக்க மறுத்த தாத்தா பின்னாளில் விற்க சம்மதிக்கிறார். இந்த சமயத்தில் ஓரிரு நாட்கள்களில் தாத்தா ஜி எம் குமார் இறந்துவிட, வீட்டை விற்க துடித்துக் கொண்டிருக்கிறார் குமரன். இவருடைய வீட்டின் மேல் மாடியில் வருடக் கணக்காக குடியிருப்பவர் குமரவேல் என்ற சமூக செயற்பாட்டாளர். இவர் ஒரு நேர்மையான, உண்மையன மக்களுக்கு சேவை செய்யும் தொண்டராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் குமரனுக்கும் அடிக்கடி ஏதாவது ஒரு விதத்தில் மோதல் ஏற்படுகிறது.
இந்த சூழலில் குமரனது வீட்டில் குடியிருந்த சமூக செயற்பாட்டாளர் குமரவேல் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த மரணம் கொலையாக இருக்கலாம், என்று சந்தேகிக்கும் காவல்துறையின் சந்தேகப்பார்வை குமரன் மீது திரும்புகிறது. காவல்துறையின் இந்த விசாரணை வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளும் குமரன் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவுடன் அந்த வீட்டை விற்பனை செய்ய பெரும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைகிறது. இறுதியில் குமரன் அந்த வீட்டை விற்றாரா..? காவல்துறையிடம் இருந்து குமரன் தப்பித்தாரா?.. குமரவேலை கொலை செய்த பின்ணணியில் இருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தார்களா? என்பதுதான் ‘‘குமார சம்பவம்’ படத்தின் மீதிக் கதை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கும் குமரன்தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். இது அவருடைய முதல் படம் என்பதால் அவருடைய நடிப்பு பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு, அனைத்து உணர்வுகளையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார். காமெடியிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.
குமரனின் காதலியாக பாயல் நடித்திருக்கிறார். தெலுங்கு வரவான பாயலுக்கு அதிக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சமூக செயற்பாட்டாளராக நடித்திருக்கும் குமரவேல், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
தாத்தாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் தன்னுடைய உடல் வலுவையும், கனமான முகத்தையும், கணீர் குரலையும் வைத்து அந்த தாத்தாவிற்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பராக வரும் பாலசரவணன்,மாமாவாக வரும் வினோத் முன்னா, சிபிஐ அதிகாரி வினோத் சாகர், காவல்துறை அதிகாரி சிவா ஆனந்த்,லிவிங்ஸ்டன், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். பின்னணி இசை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்களத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்..
காமெடியான ஜார்னரில் இப்படத்தை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கி இருந்தாலும், இன்னும் கூட பல காட்சிகளை ஆக்சன் காட்சிகளாக வைத்து முழு நீள காமெடி கதையாக மாற்றியிருக்கலாம். எந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் பொதுநலன் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பது தான் ஒரு இயக்குனரின் வெற்றியாக இருக்கும். அப்படியான ஒரு தாக்கத்தை இப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் கொடுத்திருக்கிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மொத்தத்தில், ‘குமார சம்பவம்’ படத்தை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.
.