சென்னை:
1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டிலும், தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் கடைசியாக உருவான மவுனப் படம். இதற்கடுத்து தற்போது இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்த ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த்சாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மும்பை குடிசைப் பகுதியில் சிறிய கோழிக்கூண்டு மாதிரியான ஒரு குடியிருப்பில் வயதான நோயாளி அம்மாவுடன் வாழ்பவர் விஜய் சேதுபதி. வறுமை வாட்டி வதைப்பதால் எங்கும் தனக்கு வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார். இன்னொரு பக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, அடுக்கு மாடி கட்டிட தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழந்து நிற்கிறார். இந்த நிலையில் எதிர்விட்டு ஜன்னல் அதிதிராவுடன் காதலில் இருக்கிறார் விஜய சேதுபதி. இந்நிலையில், மும்பை மாநகராட்சியில் விஜய சேதுபதி விண்ணப்பித்த வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூபாய் ஐம்பது ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால் அந்த வேலை அவருக்குக் கிடைக்காமல் போகிறது. இதற்கிடையில் வருமானம் இன்றி தவிக்கும் விஜய் சேதுபதி ஒரு சம்பவத்தால் அரவிந்த்சாமி மீது கோபம் அடைந்து அவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அவர் திட்டமிட்டபடி அரவிந்த்சாமியின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயன்று 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு தெரியாமல் திருடி வருகிறார். அவர் திருடி வந்த பணத்தை விஜய் சேதுபதி தன் காதலியிடம் சொன்னபோது, கோபமடைந்த அவர் கொடுத்த அறிவுறுத்தலால், தான் திருடிய 50 ஆயிரம் பணத்தை அரவிந்த்சாமியிடம் கொடுக்க முன் வருகிறார். அப்போது அரவிந்த்சாமியின் பங்களா தீயில் கொழுந்து விட்டு எரிகிறது. அப்போது அரவிந்த்சாமியும், விஜய சேதுபதி இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது என்ன நடக்கிறது? என்பது தான் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் கதைக் கரு.
வறுமையைச் சுமந்து கொண்டு நோயாளி அம்மாவுடன் வாழ்க்கைக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் வருகிற விஜய் சேதுபதி தனது நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. முகபாவனைகள், உடல் அசைவுகள் மற்றும் சைகைகள் மூலம் வறுமையின் கொடுமைகளையும், தன் இயலாமையையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. எதார்த்தமான நடிப்பு அந்த கஷ்டத்திலும் எதிர் வீட்டுப் பெண் அதிதி ராவுடன் விஜய் சேதுபதி காதல் புரியும் காட்சிகள் அருமை.
அரவிந்த் சாமி, பெரிய பணக்கார சக்திவாய்ந்த தொழிலதிபராக இருந்து, தோல்வி, நிதிச் சரிவு, உணர்ச்சி மற்றும் மன வேதனையை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் அமைதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
சித்தார்த் ஜாவ் கதாபாத்திரம்,பேசாமல் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறது.
இப்படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையை பேச வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற வகையிலான பின்னணி இசை, படத்தின் காட்சிகளை ரசிக்க வைத்து இருக்கிறார்.
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டும் அரவிந்த் சாமியின் வீட்டையும், ஏழ்மையை பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியின் வீட்டையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுகுரியது.
ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு பணம் தான் என்பதை காட்சிபடுத்தியிருக்கும் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், தற்போதைய காலக்கட்டத்தில் லஞ்சமும், ஊழலும் பெருக்கெடுத்து ஓடுவதை தத்ரூபமாக படமாக்கி உள்ளார். வசனம் இல்லாமல் படத்தை இயக்கியிருந்தாலும், எந்த வகையிலும் பணத்தைத் தேடி அலையும் கூட்டத்தில் அனைத்து துறையிலினரும் சிக்கி களங்கப்படும் விதத்தை எடுத்துக் கூறி, தான் சொல்ல நினைத்த கருத்தை பார்வையாளர்களிடம் நேர்த்தியாகப் புரிய வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5.