Take a fresh look at your lifestyle.

‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம்!

54

சென்னை:

‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம்தான் இந்த ’மெல்லிசை’. இப்படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திரவ். 

கதாநாயகன் கிஷோர் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுபத்திராவும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். இவர்களும் இதே பள்ளியில் படித்து வருகிறார்கள். நல்ல வீடு மனைவி மக்கள் என்று அழகான குடும்பம், சிக்கலற்ற வாழ்க்கை என்று எளிமையாக வாழ்ந்து வருகிறார். இவர் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டிருந்தாலும் இசை மீது தீராத ஆசை கொண்ட கிஷோருக்கு எப்படியாவது பாடகராக வேண்டும் என்ற கனவு மனதில் இருக்கிறது. ஆனால் குரல், சில சமரசங்கள், பயம் மற்றும் நம்பிக்கை இல்லாமல் குடும்ப சூழல் காரணமாக அவரது ஆசை நிறைவேறாத நிலையில் சற்று தோல்வி மனநிலையில் வாழ்கிறார். நல்ல பணியில் இருந்தாலும் இசைத்துறையில் ஆர்வம் இருப்பதால் தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேற முயற்சி செய்கிறார் கிஷோர்.

 அவரது குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள், எப்பட்யாவது அவரை பாடகராக மேடையில் பாட வைக்க ஆசைப்படுகிறார். இந்த சூழலில் தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேறும் முயற்சியில், தனியாக சென்று தொலைகாட்சியில் நடந்த பாடல் போட்டியில் கலந்து கொள்கிறார் கிஷோர். இது அந்த பள்ளியின் முதல்வருக்குப் பிடிக்கவில்லை என்பதால் கிஷோரை வேலையை விட்டு நீக்குகிறார். ஆனாலும் அவருக்கு மனைவி மகன் மகள் நண்பர்கள் என்று அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அந்தப் பாடல் போட்டியில் கிஷோர் வெற்றி பெற்றாரா? அவரது கனவு நினைவானதா? இல்லையா? என்பதுதான்  ‘மெல்லிசை’ படத்தின் மீதிக் கதை.

கிஷோர் இப்படத்தில் ராஜன் என்கிற அந்தக் கதாபாத்திரமாகவே  தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பள்ளியில் வேலை இழப்பு,பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்தையும் தாங்கி பாடல் போட்டியில் பங்கேற்பது குடும்பத்தினருடன் பழகுவது, மனைவியிடம் செல்லமாய் காதல் என்று அவர் நடுத்தர குடும்பத் தலைவராகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.முழுக்க முழுக்க கதையின் நாயகனாக நடித்து நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

கிஷோரின் மனைவி வித்யாவாக சுபத்ரா ராபர்ட் சிறந்த குடும்பத் துணையாக பாசம், கோபம், சிணுங்கல், என அனைத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

கிஷோர் பிள்ளைகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி போன்ற அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பாக நடித்து இருக்கிறார்கள்.

இயற்கை எழில் மிகுந்த வெளிப்புறக் காட்சிகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மிக அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி.

சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார்.இசையை தலைப்பிலேயே வைத்திருக்கும் படம் என்பதால் அவருக்குக் கூடுதல் பொறுப்பு என்பதை உணர்ந்து கடுமையாக உழைத்திருக்கிறார்.

ஒரு உன்னதமான இயல்பான கதையை எடுத்துக்கொண்டு எதார்த்தமான நடிப்புக் கலைஞர்களைப் பயன்படுத்தி குடும்பம், பள்ளி பகுதிகளை உயிரோட்டமாக எடுத்து இயக்கி தயாரித்து இருக்கிறார் இயக்குநர் திரவ். உள்ளுணர்வுகள், பந்த பாசங்கள், இயலாமை,ஏக்கம் ஆகிய எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய ஓர் எளிய மனிதரின் வாழ்க்கைப் பயணத்தை மையக் கதையாக வைத்துக் கொண்டு அதற்கு, மாறுபட்ட முறையில் திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மெல்லிசை’  படம் இசை விருந்து.

ரேட்டிங் 4/5.