Take a fresh look at your lifestyle.

‘ரஜினி கேங்க்’ திரைப்பட விமர்சனம்!

31

CHENNAI:

நடிகர் ரஜினி கிஷன், திவிகா, மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி போன்ற பலர்  நடித்துள்ள படம்தான் ‘ரஜினி கேங்’ இப்படத்தை எம். எஸ், ரமேஷ் பாரதி எழுதி இயக்கியுள்ளார். இசை -எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – என்.எஸ். சதீஷ்குமார், படத்தொகுப்பு – ஆர்.கே. வினோத் கண்ணா, மிஸ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி எஸ் பதம்சந்த் ,சி அரியந்த்ராஜ்,ரஜினி கிஷன் தயாரித்துள்ளனர்.

‘ரஜினி கேங்’ படத்தின் கதை, ஒரு அமைச்சரின் காரை திருடும் முனீஷ்காந்தைச் சுற்றி தொடங்குகிறது.  கதாநாயகன் ரஜினி கிஷனும் கதாநாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள். இந்த சூழலில் காதலர்கள் ரஜினியும் த்விவிகாவும்; ஓடிப்போய், ஒன்றாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ஊரை விட்டு ஓடிச் செல்லும் சமயத்தில் ரஜினி கிஷனின் விளையாட்டுத்தனத்தால், இந்த விஷயம் ஊருக்கு தெரிந்துவிட ஊர்க்காரர்கள் துரத்துகிறார்கள்.அந்த வழியாக காரில் வந்து கொண்டிருக்கும் முனிஷ்காந்தை வழிமறித்து, இருவரும் அந்த காரில் ஏறிக் கொள்கிறார்கள். அதே சமயத்தில் நகைகள் திருடிக் கொண்டு ஓடும் கல்கியும் இதே காரில் ஏறுவதால் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இரவு நேரத்தில் பயணிப்பதில் இவர்கள், ஏடாகூடமான இடத்தில் சிக்கி விடுகிறார்கள். இந்நிலையில் ரஜினி கிஷன் – த்விவிகாவுக்குத் திருமணம் ஆகிறது. அதுவரை நகைச்சுவையாக சென்ற படம் வேறு விதமாகத் திசை மாறுகிறது. த்விவிகாவின் கழுத்தில் ரஜினி கிஷன், கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது பிறகுதான் தெரிய வருகிறது. ரஜினி கிஷன் கட்டும் அந்தத் தாலியில் பேய் இருப்பது வெளிச்சத்துக்கு வரும் போது, நாயகி திவிகாவுக்கு அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் வந்தது.. அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் “ரஜினி கேங்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் என்றாலும் நகைச்சுவைக்கு அவரது தோற்றம் பொருந்துகிறது. அவருக்குத் தைரியம் அதிகமாக இருந்ததால்  முதல் படம் என்ற பயமே இல்லாமல் அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் த்விவிகா அழகு  மிகுந்தவராக இருந்தாலும் தனது நடிப்பில் கவனம் செலுத்த மறந்து விட்டார். முதல் இரவு பாடலில் அழகு தேவதையாகவே காட்சியளித்திருந்தார் த்விவிகா.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார். கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக நேர்த்தியாக  இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ்பாரதி, படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இயக்கியிருக்கிறார்.அதற்காகவே முனீஷ்காந்த்தை தூங்கி வழிபவராகவும் மொட்டை ராஜேந்திரனை ஆவிகள் மையம் நடத்துபவராகவும் வடிவமைத்திருக்கிறார். திகில் மற்றும் நகைச்சுவைப் படங்களுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க முயற்சி செய்து இருந்தாலும் நடிகர்களை நம்பிய அளவிற்கு கதையை நம்பி, திரைக்கதைக்கு உழைத்து இருந்தால் இந்தப் படம் நல்ல நகைச்சுவைப் படமாக மாறி இருக்கும்.

‘ரஜினி கேங்’ படத்தை ரசிக்கலாம்..