Take a fresh look at your lifestyle.

‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ திரைப்பட விமர்சனம்!

31

சென்னை:

தமிழ்ப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.கிராமத்து ம்னிதர்கள் சிறுதெய்வங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படம்தான் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இதில் பரோட்டா” முருகேசன் நல்லபாடனாக, கார்த்திகேசனாக “பெரிய பண்ணாடி” , சித்திர நடராஜனாக தங்கம், முருகனாக “சின்ன பண்ணாடி”,  சேனாபதியாக மாப்பிள்ளை, விஜயன் வேலனாக, விகடன் பங்காளியாக ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உழைப்பைத் தவிர வேறு எதுவும் அறியாத ஓர் அப்பாவி ஏழை விவசாயி நல்ல பாடன். நன்றாக பாடுபடுவதால் நல்ல பாடன் என்று அவருக்குப் பெயர் ஏற்படுகிறது. அந்த கிராமத்தில் ஏழை விவசாயி பரோட்டா முருகேசன், தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இளம் மகனாக விஜயன் உயிருக்கு ஆபத்தில் இருக்கும் போது உள்ளூர் தெய்வமான ஒண்டிமுனியிடம் மகன் குணமடைந்தால் ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். சிறுவன் அதிசயமாக உயிர் பிழைக்கும்போது, தெய்வத்திற்கு பலி கொடுக்க ஆட்டை  வளர்க்கிறார்.  அந்த ஆட்டுக்குட்டி வளர்ந்து பெரிய கடாவாகிறது .

தனது மகனுக்காக காவல் தெய்வமான ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக விரதம் எடுத்த அவர், வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக கிடாயும், மகனும் வளர்ந்தாலும், பலியை நிறைவேற்றும் தருணம் வரும்போது அந்தக் கோவில் இரண்டு பண்ணாடிகளின் சச்சரவால் எந்த வழிபாடுமற்றுக் கிடக்கிறது. அந்த இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். மறுபக்கம், அவரது மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார். இறுதியில் காவல் தெய்வத்திற்கு தனது ஆட்டு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா ?  என்பதுதான் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் மீதிக் கதை.

நல்லபாடன் கதாபாத்திரத்தில் பரோட்டா முருகேசன் நடிப்பே படத்தின் சுவாசம் என்று சொல்லலாம்.படம் முழுக்க உழைத்துக் கொண்டே அவர் பாடுபடுவதும் அந்த நேர்த்திக்கடன் செலுத்த அல்லாடுவதும் பார்ப்பவரைக் கலங்க வைக்கும். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் பரோட்ட முருகேசனுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அங்கீகாரத்தோடு, பல விருதுகளையும் பெற்றுத்தரும்.

பண்ணாடி என்றழைக்கப்படும் ஊர்ப்பெரிய மனிதர்களாக நடித்திருக்கும் கார்த்திகேசன்,முருகன் ஆகிய இருவரும் தோற்றத்திலும் நடிப்பிலும் நிஜ பண்ணாடிகளாகவே தெரிகிறார்கள்.
மற்ற கதாபாத்திரங்களான முருகேசனின் மகனாக நடித்த விஜயன், மகளாக நடித்த சித்ரா நடராஜன், மாப்பிள்ளை விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்த சிறுவன்— அனைவரும் கதைக்கு ஏற்ற சிறந்த தேர்வுகள் என்றாலும் தங்களது நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர்.
நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார்.படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் கதைக்களம் இயக்குநரின் சிந்தனை ஆகியனவற்றை உணர்ந்து பின்னணி இசைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விமல், தனது கேமரா மூலம் கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும், அவர்களது வாழ்வியலையும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சுகவனம், ஒரு சாதாரண கதைக்கருவை, திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான திரைப்படமாக மட்டும் இன்றி, ஒரு மண்ணின் வாழ்வியலை சிறப்பான படைப்பாகவும் கொண்டு வந்திருக்கிறார். ஒரு நாட்டின் வளம்,வாழ்க்கை முறை, மக்கள் மனநிலை ஆகியன வெளிப்படுத்தப்படும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.வணிகத் திரைப்படங்களுக்குரிய விசயங்களைக் கையிலெடுக்காமல் அதேநேரம் வெகுமக்கள் திரைப்படமாகக் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படம் மனதில் நீண்டநாள் நிற்கும்.