Take a fresh look at your lifestyle.

‘கும்கி 2’ – திரைப்பட விமர்சனம்!

45

சென்னை:

புதுமுக நடிகர் மதி, அர்ஜுன் தாஸ், ஷிரிட்டா ராவ் , ஹரிஷ் பாரேடி, ஸ்ரீநாத், நடக்கள் உன்னிகிருஷ்ணன், திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான்”கும்கி-2′

கும்கி படத்தில் யானையை மையமாக வைத்து ஓர் அழகான காதல், மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள்,மனித நேயம் ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருந்தார் பிரபு சாலமன். அதேபோல ‘கும்கி 2’ படத்திலும் அளவற்ற அன்பு, மனித நேயத்தையும் தாண்டிய உயிர்நேயம் ஆகியனவற்றைப் பேசியிருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மலைப்பகுதியில் வாழும் மதிக்குத் தந்தை இல்லை.தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். இந்த சூழலில் ஏழை குடும்பத்தில் பிறந்து வளரும் மதி. பள்ளியிலும் அவரை யாரும் நண்பராக சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்குகிறார்கள். இதனால் வேதனை அடையும் மதிக்கு அவரது ஆசிரியர் அறிவுரை கூறுகிறார். “நீ இயற்கையிடம் பழகு அது உன்னிடம் அன்பு காட்டும்” என்கிறார். அதன்படி காடு மலை மரம் விலங்குகள் பறவைகள் என்று நேசிக்க ஆரம்பிக்கிறான். அப்போது குழிக்குள் விழுந்த ஒரு குட்டியானையைக் காப்பாற்ற முயலும் போது அந்தக் குட்டி யானைக்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது.  அந்த யானை அவனது வாழ்க்கையில் அன்பும் ஆறுதலும் கொடுத்து குடும்பத்தைப் ஒருவர் போல மாறுகிறது.

யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அந்த யானையைப் பெரிய பூஜைக்காக பலி கொடுக்க வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று அறிந்து பதறுகிறான். அதை எப்படியோ தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான். அவர்களிடமிருந்து அந்த யானையை ஓட்டிக் கொண்டு காட்டுக்குள் செல்கிறான். அரசியல்வாதியின் அடியாட்கள் அவனைத் துரத்துகிறார்கள். அந்த யானையை அவர்களிடமிருந்து மதியால் மீட்க முடிந்ததா? இல்லையா? என்பதுதான் ‘கும்கி 2’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி திரைப்பட கதாநாயகனுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார்.அன்பு, பாசம், கோபம், வலி ஆகிய உணர்வுகளை சரியான முறையில்  வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். யானையுடன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்றாலும் கொஞ்சமும் பயமில்லாமல் பெரிய உருவம் கொண்ட யானையுடன் மதி நடித்திருப்பதும், பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி அவர் தன் நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கதாநாயகியாக சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ் மற்றும் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் மலைகளையும், அருவிகளையும் இயற்கை எழில் மிகுந்த இடங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

குழந்தைகள் ரசிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வழக்கமான மசாலாத்தனமின்றி உருவாக்கப்பட்டிருந்தாலும் ‘படைத்தலைவன்’ ‘ராஜ பீமா” ஆகிய படங்கள் இப்படத்தைப் போலவே கதை இருப்பது பிரபு சாலமன் தெரிந்ததா? என்பது புரியவில்லை. திரைக்கதையை சற்று சுவாரஸ்யமாக எழுதி இருந்தாலும், காட்சிகளில் அத்தகைய சுவாரஸ்யம் இல்லை. இருந்தாலும், குட்டி யானை சிறுவனுடன் நட்பாவது, யானையை வைத்து படமாக்கிய விதம், யானை செய்யும் சண்டைக் காட்சிகள் போன்ற காட்சிகள் கண்களை மிரள வைக்கின்றன.  முற்றிலும் மாறுபட்ட கதை கோணத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தை கொடுத்து இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘கும்கி 2’ படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.