’மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ஆனந்த்ராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனீஷ்காந்த் மற்றும் ராம்ஸ் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
பெரிய நிறுவனங்களுக்கு கிளை அலுவலகங்கள் இருப்பது போல சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள் போல் சின்ன சின்ன ரவுடிகள் செயல்பட்டு குற்றத்தொழிலை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை நியமித்து ஐடி கம்பெனி போல் ரவுடி ஏஜென்சி நடத்தி வரும் அவர் அந்தந்த ஏரியாவில் ரவுடிகளாக இருப்பவர்களை வைத்து தனக்கு வரும் அசைன்மென்ட்களை கொடுத்து கொலைகளும் செய்கிறார். குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், மீது எநத ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர் மீது எந்த வழக்கும் காவல்துறை பதிவு செய்யாமல் இருப்பதை கண்டு காவல்துறை அதிகாரி சம்யுக்தா, ஒரு முக்கிய விஷயத்தை ஆதாரமாக வைத்து கைது செய்ய முனைகிறார்.
அதாவது ஆனந்த்ராஜின் மகள் ஒருவனைக் காதலித்ததால், அதை தெரிந்து கொண்டு அவனை மிரட்டியதில் அவன் காயப்பட்டு இறந்தே போகிறான். ஆனாலும் அவர்கள் வீட்டினர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இந்த ஆதாரத்தை வைத்து ஆனந்த்ராஜை கைது செய்ய முயலும்போது, அவரது கூட்டாளிகளே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்கள். இந்த சூழலில் இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் தப்பித்தாரா? தனது மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா? என்பதுதான் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் மீதிக் கதை.
ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி இப்போது நகைச்சுவையிலும் கலக்குகிறார்.இந்தப் படத்தில் பூங்காவனம் கதாபாத்திரத்தில் அவர் சிரித்துக் கொண்டே செய்யும் வில்லத்தனத்தை மிக சிறப்பாக செய்து இருக்கிறார். கதையின் நாயகனாகவே வந்து வில்லத்தனத்தில் தனது அனுபவத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் வித்ததில் நன்றாகவே கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் ஆனந்த்ராஜ்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, காவல்துறையின் காக்கி சீருடையில் கம்பீரமாக வலம் வரும் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்.
கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில் நானும் ரவுடிதான் என்று டம்மி ரவுடியாக வரும், முனிஷ்காந்த் படம் முழுவதும் தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.
ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா,அளவான அழகு ,தேவையான நடிப்பு என்று வந்து கவர்கிறார்.
ராம்ஸ், சசிலயா உள்ளிட்ட மற்ற கதாபாத்திங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வரும் குத்துப்பாட்டு கமர்சியல் ரகம்.இனிய பாடலும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா வண்ணமயமாக்கி அமைத்திருக்கும் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை காமெடியுடன் இப்படத்தில் கதை சொல்லி இருந்தாலும் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் சேர்க்கப்பட்ட மிகையான கலவையாக படம் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார். ஆனந்தராஜ் என்ற வில்லன் நடிகரை கதையின் நாயகனாக வைத்துக் கொண்டு காமெடி படமாக மட்டும் இன்றி மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாகவும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களை பாராட்ட வேண்டும்.