Take a fresh look at your lifestyle.

’ஹபீபி’ திரைப்பட விமர்சனம்!

19

சென்னை:

கஸ்தூரி ராஜா, ஈஷா,மாளவிகா மனோஜ், தனஸ்ரீ ,அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார்,ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைஜென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ நடித்துள்ள படம்தான் “ஹபீபி”

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் மீரா கதிரவன். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

கடையநல்லூரில் நெசவு தொழிலை பின்னணியாக கொண்டு இந்தப் படத்தின் கதை நகருகிறது. முழுக்க, முழுக்க நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக முகமது யூசுப் என்ற பெயர் கொண்ட கஸ்தூரிராஜா கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக இருக்கிறார். தன் குடும்பத்திற்காக கைத்தறி நெசவுத் தொழில் செய்து அனைவரையும்  காப்பாற்றி வருகிறார். ஆனாலும் பெரிதாக வருமானம் எதுவும் இல்லாததால் அவரது தம்பி மனைவிக்கு இப்படியே பொருளாதார சிக்கலுக்குள் குடித்தனம் செய்வது பிடிக்கவில்லை. நவீன விசைத்தறிகளின் வருகையாலும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார் கஸ்தூரி ராஜா.

இதனால், அவரது தம்பியை வேலைக்காக அரபு நாட்டுக்கு அனுப்புகிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியுடன் இருக்கிறார்.  இதற்கிடையில், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த  கஸ்தூரிராஜாவின் மகன்  ஈஷாவுக்கு பள்ளியில் தன்னுடன் படித்த பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் குடும்பத்துப் பெண்ணான மாளவிகா மனோஜ் மீது  காதல் ஏற்படுகிறது. கஸ்தூரி ராஜாவின் தம்பி அரபு நாட்டில் வேலை பார்த்து அங்கிருந்து அனுப்புகின்ற பணத்தில் குடும்பத்தை நடத்தி வரும் கஸ்தூரிராஜாவுக்கு தன் மகனின் காதல் ஒரு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து கொடுக்கிறது.

இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக தன் மகன் ஈஷாவையும் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யுமாறு உறவினர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். தன் சித்தப்பாவின் பிரிவால் வாடித்துடிக்கும் அவரது சித்தியின் நிலையை கண்டு குடும்பத்தை விட்டுச்செல்ல விரும்பாமலும் காதலை கைவிட முடியாமலும் வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார் ஈஷா. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அழுத்தம் காரணமாக ஈஷா வெளிநாடு சென்று பணத்தை சம்பாதித்து விட்டு தன் சொந்த ஊருக்கு வருகிறார். இந்த சூழலில் ஈஷா தான் காதலித்த பெண்ணான மாளவிகா மனோஜை  கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் “ஹபீபி’ படத்தின் மீதிக் கதை.

ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறையால் தான்  நேசிக்கும் நெசவுத் தொழிலை கையாண்டு வரும் முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா, பல்வேறு உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தன் மகனின் நிலையை கண்டு கதறி அழும் காட்சிகளிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கண் கலங்க வைத்து விடுகிறார்.

அதேபோல் அவரது மகன் சையத் அபுதாகிராக நடித்திருக்கும் ஈஷா தோற்றத்திலும் நடிப்பிலும் புது முகமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

குறிப்பாக மாளவிகா மனோஜ், பாரம்பரிய இஸ்லாமியப் பெண்ணாகத் தனது எதார்த்தமான நடிப்பால் தன்  கண்களாலேயே அனைவரையும் கவர்கிறார்.

தனாஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜான், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கய்சன், சன் சாகுல், மாஸ்டர் தீகன், தீக்‌ஷா ஸ்ரீ ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில்  தென் தமிழக கிராமங்களின் இயற்கை அழகையும், அந்த மண்ணின் வாழ்வியலையும் மிக சிறப்பாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு ஏற்றவாறு அமைத்து, அவர்களது  உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் பயணிக்க வைத்திருக்கிறார்.

இப்படத்தை இயக்கி இருக்கும் மீரா கதிரவன், வழக்கமான கமர்ஷியல் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ,  கவர்ச்சியான் குத்துப்பாடல்களோ இல்லாமல், ஒரு உன்னதமான நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தரும் திரைக்கதையை அமைத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். .ஒரு பொதுவான காதல்கதை போலத் தொடங்கி இஸ்லாமிய வாழ்வியலை அப்படியே வெளிப்படுத்தி வியக்கவைக்கும் திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்டினாலும் ஒரு குடும்பத்தை பிரிந்து வெளி நாட்டிற்கு செல்லும் வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ’ஹபீபி’  காதல் படம் அல்ல.. இஸ்லாமிய வாழ்வியலை சொல்லும் படம்.

ரேட்டிங் 3/5.