Take a fresh look at your lifestyle.

’எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்!

6

சென்னை:

நடிப்பு: துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா.சி, நரேன் மணி, ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஏ.சற்குணம்

ஒளிப்பதிவு: அருண் அமரேந்திரன்

படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின். ஏ

இசை: சாம் சி எஸ்

ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்

தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ்

தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: புஷ்கர் & காயத்ரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்.

போட்டித் தேர்வுகள் அதற்கான பயிற்சி மையங்கள் அதன் பின்னே உள்ள கார்ப்பரேட் மாபியாக்கள் செய்யும் அட்டூழியங்களைத் தோலுரித்துக்காட்டி உள்ளது இந்த ‘எக்ஸாம் ‘இணையத் தொடர். தற்போது நமது இந்தியாவில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் நடந்த ஊழல்களையும், தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்து தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவ, மாணவிகளின் வாழ்க்கையும் பாழான  விஷயம் அனைத்து பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘எக்ஸாம்’ என்ற இந்த இணைய தொடர் அதனை மையமாக வைத்து எடுத்து இருப்பது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கிறது.

ஒரு ஊரில் இருந்து மற்றொரு மலை கிராம ஊருக்கு பணி மாறுதல் காரணமாக வருகிறார் போலீஸ் உயரதிகாரியான அதிதி பாலன். அந்த சமயத்தில் அதிதிபாலனை கடத்தி, அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து, அந்த பணியில் ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் டிஎஸ்பி யாக அமர்கிறார் துஷாரா விஜயன். போலி டிஎஸ்பி யாக காவல் நிலையத்தில் நுழைந்து, அங்கு நடக்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு கோச்சிங் சென்டரை ஆராய்ந்து வருகிறார் துஷாரா விஜயன். எவ்வளவோ சிரமப்பட்டு போராடி படித்து தேர்வு எழுத சென்றால் அங்கே குறுக்கு வழிகளில் வினாத்தாள்களை பெற்று ,நோகாமல் அந்த தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அரசுப் பணிகளை அடைய ஒரு கூட்டம் முயற்சி செய்வதை துஷாரா விஜயன் அறிந்து கொள்கிறார். இந்த மோசடிகளுக்குப் பின் உள்ள நபர்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்த நினைக்கிறார் துஷாரா.

அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் துஷாரா விஜயனுக்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது. இந்த சூழலில் அந்த பகுதியில் ‘குரூப் 1’ அரசுப்பணிக்காக நடக்க இருக்கும் போட்டித் தேர்வில் நிகழ இருக்கும் மோசடிக் குற்றங்களையும், அவற்றுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் துஷாரா விஜயன். இறுதியில் துஷாரா விஜயனின் முயற்சிகள் வெற்றி பெற்றதா?இல்லையா? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா? என்பதுதான் ‘எக்ஸாம்’ இணையத்தொடரின் மீதிக் கதை.

கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ள ஜான்சி கதாபாத்திரம் இந்த இணைய தொடரின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. அவரது மனஉறுதி, கோபம், பயம், நம்பிக்கை என பல உணர்ச்சிகளை கண்களில் மட்டும் கொண்டு வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, இது வரை அவர் நடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக நினைவில் நிற்கின்ற மாதிரி இருக்கிறது.  துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் ஏழை மக்களை பிரதிபலித்திருக்கிறது.

இரண்டாவது நாயகியாக, தாசில்தாரின் மகளாக, குறுக்கு வழியில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் டி.எஸ்.பி ஆகும் மரமல்லியாக அதிதி பாலன் நடித்திருக்கிறார். பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மேல்தட்டு மக்களின் மனநிலையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். ஜெயிலராக நடித்திருக்கும் அப்பாஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வசுந்தரா,
நரேன்  மணி  ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். மற்றும் ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்.

அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவில்,திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு அனைத்து காட்சிகளிலும் வெளிப்பட்டு அதிர வைக்கின்றன. சாம்.சி.எஸ் இசை,தொடரின் தரத்தை உயர்த்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.

முறைகேடாக வினாத்தாளை கசிய விட்டதற்காக, நடத்தப்பட்ட நீட் தேர்வையே ரத்து செய்திருக்கும் இன்றைய சமூகச் சூழலில், இந்த வெப் தொடர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும்,  நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் எதார்த்தம் குலையாமல் சொல்லி, .இத்தகைய மோசடி எப்படி நடக்கிறது ?, யார் மூலமாக நடக்கிறது ? என்பதை மிக விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பணமுதலைகள் உள்ளே நுழைந்து பணம் கொடுத்துப் பதவிக்குப் போய்விடுகின்றனர் என்கிற கொடூரங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதையும் வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்  இயக்குநர் சற்குணம்.

மொத்தத்தில் இந்த  “எக்ஸாம்” கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்.

ரேட்டிங் 4/5.