சென்னை:
தனுஷ் , மமிதா பைஜு,கே. எஸ் .ரவிக்குமார்,ஜெயராம், ஸ்ரீஜா ரவி ,கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன்,சுராஜ் வெஞ்சரமூடு,எம் எஸ் பாஸ்கர் , ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “கர” . இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். எழுத்து: ஆல்பிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1990களின் கிராமப்புற பின்னணியில் உருவான இந்த படம், விவசாயிகள் எதிர்கொள்ளும் கடன் சிக்கல்கள், வங்கிகளின் செயல்முறைகள், மற்றும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது.
ராமநாதாபுரம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு சம்பவம் நடத்தும் தனுஷ் காவல்துறையினரிடமிருந்து சிக்கி கொள்கிறார். இந்த வழக்கை விசாரிக்க சார்ஜ் எடுத்துக்கொளும் சுராஜ் வெஞ்சாரமூடு, மீடியாவில் பெயர் வாங்க தனுஷ் மீது செய்யாத குற்றத்தையும் சுமத்த ப்ளான் போடுகிறார். இதனை அறிந்த தனுஷ்அதீத வெறி கொண்டு எழுந்து சுராஜ் வெஞ்சாரமூடுவை அடித்து தாக்கிவிட்டு, தன் மனைவி மமிதா பைஜுவுடன் ஆந்திராவுக்கு தப்பிக்கிறார். அங்கே ஓட்டல் ஒன்றில் இருவரும் வேலை செய்கின்றனர். ஆனாலும் அந்த வருமானம் போதுமான அளவில் இல்லாததால் அங்கு மனைவி படும் கஷ்டத்தைப் பார்த்த தனுஷ் சொந்தமாக ஓட்டல் தொழில் செய்ய திட்டமிடுகிறார். அப்போது வங்கி கடன் பெற முயற்சிக்கும் போது, சொத்து ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களால் பின்னர் தன் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் திருடனாக இருந்த தனுஷ் தனது தந்தை கே எஸ் ரவிக்குமாரிடம் இருக்கும் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஓட்டல் தொழில் செய்து வாழலாம் என்ற எண்ணத்தில் ஊருக்கு வருகிறார். அங்கு அவரது தந்தை கே எஸ் ரவிக்குமார் ஏற்கெனவே வங்கியில் விவசாய நிலத்தின் மீது வாங்கிய கடனை செலுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இந்த சூழலில் தனுஷ் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், அதற்கு மாறாக, அவரது தந்தை இறந்துவிடவே, அவரின் பிணத்தை அவர்களது சொந்த நிலத்தில் புதைக்க விடாமல், அந்த நிலத்தின் மீது கடன் கொடுத்த வங்கியினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் அங்கு எதிர்பாரத சம்பவங்கள் நடக்கின்றன. தன் தந்தையை அடக்கம் செய்ய என்ன செய்வதென்று புரியாமல் தவித்த தனுஷ் வங்கியில் கொள்ளையடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதன்பிறகு தனுஷின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் “கர” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் ‘கர’ என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார் . இதில் குறிப்பாக குடும்பப் பொறுப்பு, மனக்குழப்பம், தப்பிக்க முடியாத சூழ்நிலை போன்றவற்றில் அவர் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடும் தொடர்ச்சியாக தனது படங்களில் தனித்துவத்தை காட்டி மிக சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் தனுஷை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்படத்தின் கதைக்கு தகுந்தாற்போல தன்னை பொருத்திக்கொள்ளும்போது தனுஷின் ஆகச்சிறந்த நடிப்பை பார்க்க முடிகிறது.
தனுஷின் காதலியாக வரும் நடிகை மமிதா பைஜூ குறைந்த அளவிலான காட்சிகளில் வந்து இருந்தாலும் அவரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரும் குறை இல்லாமல் நடித்து நிறைவு செய்துள்ளார்.
தனுஷ் தந்தையாக நடித்திருக்கும் கே எஸ் ரவிக்குமார் தோற்றத்திலும், நடிப்பிலும் மிகவும் வித்தியாசம் காட்டி அருமையாக நடித்திருக்கிறார். தனுஷின் நண்பராக வரும் பிருத்வி பாண்டியராஜன் மற்றும் தனுஷின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, உறுதிமிக்க கிராமத்து தாயாகவே மாறியிருக்கிறார்.
யூத் படத்தில் கென் தந்தையாக நடித்த சுராஜ் வெஞ்சாராமூடு இப்படத்தில் தனுஷை துரத்தி பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் என்ன மாதிரியான முகபாவனைகளை கொடுக்கலாம், அதனை எப்படி கொடுக்கலாம் என்று ஒவ்வொரு இடத்திலும் தனது தனித்துவத்தைக் காட்டிக் கொண்டே நடித்து இருக்கிறார் சுராஜ் வெஞ்சாராமூடு.
சிரித்துக் கொண்டே கார்ப்பரேட் வில்லத்தனம் செய்யும் வங்கி அதிகாரியாக வரும் ஜெயராம் சைலன்ட் வில்லனாக வந்து படத்தில் மிரட்டி இருக்கிறார்.வயதான விவசாயியாக வாழும் நம்மாழ்வாராக எம் எஸ் பாஸ்கர் வந்து மனதில் பதிகிறார்.
தனுஷின் மாமா காசி பாத்திரத்தில் வரும் கருணாஸ் தனது பாமர பார்வையுடன் உடல்மொழி நடிப்பு என அனைத்திலும் அந்த மண்ணின் மைந்தராகவே வந்து அசத்தியுள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. 90களின் காலக்கட்டத்தையும் களத்தின் அசல் வண்ணமும் மாறாமல் நம் கண்களை கவர்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் எளிமையான மெட்டுகளில் அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார். பின்னணி இசையும் சிறப்பு.
‘போர் தொழில்’ என்ற ஒரு உன்னதமான த்ரில்லர் படத்தை எடுத்து வெற்றி பெற்ற விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எழுத்தில் திருப்பத்தையும் வேகத்தையும் கொடுத்து இயக்கி இருக்கிறார். வங்கிக் கடன்களால் பாதிக்கப்படும் கிராமத்து மனிதர்களின் துயரங்களை வெளிக்கொண்டுவர வேண்டுமென கதையில் மாறுபட்ட காட்சிகளை புகுத்தி கடுமையாக உழைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘கர’ வங்கியில் கடன் வாங்கி சிரமப்படுவர்களை சிந்திக்க வைக்கும் படம்.
ரேட்டிங் 4/5.