சென்னை:
பரத், அஜய் கார்த்திக், அபர்னிதி, பவானி ஸ்ரீ, சங்கீதா, ஆனந்தநாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் நடிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “காளிதாஸ் 2”.
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்ப குழுவினர்கள்:-
திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த், இசை – சாம் சி.எஸ், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜி.துரைராஜ், ஒலி வடிவமைப்பாளர் – தபஸ் நாயக், கலை இயக்குனர் – கலியுக ஏ.ராஜா, சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் – டோரதி ஜெய் (டிஜே), பாடல் வரிகள் – மோகன்ராஜ், நடனம் – பாபி, விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோகமக்கள் தொடர்பு – யுவராஜ்.
சென்னைக்கு அருகில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் 500 குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில், புத்தாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் 2025 டிசம்பரின் கடைசி நாள். அனைவரும் புத்தாண்டை எதிர்கொள்ள மகிழ்ச்சியாக கொண்டாடிக் இருக்கும் தருணத்தில் அந்த இரவு பொழுதில் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதியின் நான்கு வயதுள்ள மித்ரா என்கிற ஒரு குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் தீவிர விசாரணையில் ஈடுபடுகின்றனர்., ஒவ்வொரு கட்டமாக விசாரணை சென்று கொண்டிருந்தாலும் சரியான துப்பு கிடைக்காமல் இருவரும் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய்கார்த்தி மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுகிறது. அவன் தனியாக அந்த குடியிருப்பில் இருக்கிறான். அவனது நடவடிக்கைகள் மர்மம் சூழ்ந்ததாக இருக்கிறது. அவனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்கிறார்கள் .அவன் ஒரு பெரிய வழக்கறிஞர் நடராஜின் உதவியாளராக இருக்கிறான்.
இதற்கிடையில், தேடப்பட்டு வந்த சிறுமி மித்ரா என்கிற குழந்தை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறத்தில் ஒரு சூட்கேசில் சடலமாக மீட்கப்படுகிறாள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பாற்றி அழைத்துச் சென்று விடுகிறார். இதற்குள் இன்னொரு குழந்தையும் காணாமல் போய் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஏற்கெவே கொலையாளி யார்? என்று தெரியாமல் விசாரிக்கும் அதிகாரிகள் பரத்தும், பவானிஸ்ரீயும் ஒன்றும் புரியாமல் இந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இறுதியில் அந்த குழந்தைகளை கொலை செய்தது யார்? உண்மையான குற்றவாளியை இருவரும் கண்டுபிடித்தார்களா? என்பதை எதிர்பாராத பல திருப்பங்களுடன் பதில் அளிக்கும் படம்தான் “காளிதாஸ்-2”
போலீஸ் அதிகாரியாக பரத், மிக எளிமையான மற்றும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சினிமா பாணியில் இல்லாமல், யதார்த்தமான பாணியில் அவர் செய்யும் விசாரணை படத்திற்கு பலம் சேர்க்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் கூர்மையான புலனாய்வுத் திறன் கொண்ட அதிகாரியாகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் உண்மையான காவல்துறை அதிகாரி போலவே பிரதி பலித்திருக்கிறார்.
ஜூனியர் வக்கீலாக அஜய் கார்த்திக், வில்லன் சாயலில் நல்ல பரபரப்பை உருவாக்குகிறார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தை தூண்டுகின்ற அளவிற்கு அதிகம் பேசாமல் கண்களிலும் உடல்மொழியிலும் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்பதால் அதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
உதவி ஆணையாளர் கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி வைஷ்ணவியாக நடித்துள்ள பவானிஸ்ரீ காவல்துறை அதிகாரி என்று நம்ப முடியாத தோற்றத்திலும் மிடுக்கும் செருக்கும் ஆணவமும் கொண்ட குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மித்ரா குழந்தையின் தந்தை கோகுலாக அனந்தநாக்கும், தாய் சஞ்சுவாக அபர்ணதியும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துள்ளனர்.
அந்த குடியிருப்பின் நிர்வாகப் பொறுப்பு தலைவராக நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றும் சங்கீதா, ரூபா சுந்தரி கதாபாத்திரத்தில் சாதாரணமாக உள்ளே நுழைந்து பிறகு பாசமும் பரிதவிப்பும் கொண்ட தாயாகவும் தன்னை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி உள்ளார்.
வழக்கறிஞர் நடராஜ் பாத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளார். அதேபோல் பாண்டியனாக கசாப்புக் கடைக்காரராகவும் குற்றப் பின்புலம் கொண்டுள்ளவராகவும் வரும் கிஷோரின் திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, ஒரே அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்தாலும் திரைக்கதையில் இருக்கும் பதற்றம் காட்சிக்கு காட்சி வேறுபட்டு நம்மை கதைக்குள் வைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை மூலம் பதட்டமான சூழ்நிலைகளை சிறப்பாக உருவாக்கி அசத்தி இருக்கிறார்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் மர்மமான சிறுமி கடத்தல் மற்றும் தொடர் கொலைகளைச் சுற்றி நகரும் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் கலந்த கதையை ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை பரபரப்பை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை எதிர்பாராத திருப்பங்களுடனும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு பாகத்துக்கான வியக்கத்தக்க குறிப்பையும் கொடுத்து இந்தப் படத்தை முடித்து வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் ஸ்ரீ செந்திலை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘காளிதாஸ் 2’ – திரில்லர் ரசிகர்கள் ரசிக்கலாம்.
ரேட்டிங் 4/5.