CHENNAI:
ராஜா மலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, சுரேகா ஆர், காதல் சுகுமார், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம் எஸ் செல்வா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘ ‘போலீஸ் ஃபேமிலி’. இப்படத்தை பாலு எம். இயக்கியுள்ளார். ஜெயா கே.தாஸ் இசை அமைத்துள்ளார். ஆன் த டேபிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரித்துள்ளார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் பருத்திவீரன் சரவணனின் மகனை போலீசார் கைது செய்கிறார்கள். விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கி விட அவர் சுயநினைவு இழக்கிறார். காவல் நிலையத்தில் கடுமையாக சித்ரவதை செய்யப்படும் சரவணனின் மகன் உயிருக்கு போராடும் நிலையில் காட்டுக்குள் தூக்கி எறியப்படுகிறார். மறுநாள் அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தகவல் வருவதோடு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட உண்மையும், தன் மகனை கொலை செய்யப்பட்டு இறந்த விஷயமும், அவரது தந்தை சரவணனுக்கு தெரிந்து விடுகிறது.
இதனால் வெகுண்டெழுந்த சரவணன், பழிக்குப் பழி என்ற வகையில் தன் மகனை கொலை செய்தவர்களைத் தீர்த்துக்கட்ட வெறியோடு புறப்படுகிறார். சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவரை கொலை செய்ய தொடங்குகிறார் சரவணன்.. ஆனால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. அப்படி என்றால் சரவணனின் மகனை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார்?கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் போலீஸ் ஃபேமிலி’ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜா மலைச்சாமி நடித்துள்ளார்.காவல்துறையின் நடவடிக்கைகளைத் தனது பாத்திரத்தின் மூலம் அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளார்.தன் மகளுக்கு நேரும் கொடுமைகளைக் கண்டு தவித்துக் கதறும் காட்சிகளில் ஒரு தந்தையாக நம் மனதை கலங்க வைக்கிறார்.
இன்னொரு பக்கம் மகன் மீது அன்பும் பாசமும் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் சரவணன் நடித்துள்ளார். வில்லன் குணம் வெளிப்பட்டாலும், ஒரு தந்தையாக கோபத்தில் கொந்தளிக்கும் காட்சியில் அவரது அனுபவ நடிப்பு வியக்க வைக்கிறது. அதே சமயத்தில் அவரது அனுபவ நடிப்பு இப்படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.
இக்கதையின் முக்கியமான திருப்பத்திற்கான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் காதல் சுகுமார்.தன் வழக்கமான நடிப்பைக் கைவிட்டு இந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே கொடுத்த வேலையை குறையில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற கதாபாத்திர ங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இந்தக் கதைக்கு என்ன தேவை? என்பதை உணர்ந்து அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்து மிக கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார்.
ஜெயா கே.தாஸ் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கின்றன.பின்னணி இசை திரைக்கதைக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
வழக்கமான லாக்கப் மரணங்கள் நம் நாட்டில் சகஜமாகி வரும் இந்த வேளையில் அந்த ஒரு கருவை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலு. எம். திரைக்கதையில் சஸ்பென்ஸையும் வேகத்தையும் உருவாக்கும் முயற்சி காணப்பட்டாலும், இன்னும் கொஞ்சம் காட்சிப்படுத்தலில் தீவிரம் இருந்திருந்தால் படம் மேலும் வலுவாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘போலீஸ் ஃபேமிலி’ ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கும் படம்.
ரேட்டிங் 3/5.