Take a fresh look at your lifestyle.

‘சீதா பயணம்’ – திரைப்பட விமர்சனம்!

53

CHENNAI:

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் – அர்ஜுன் சர்ஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும்  ’சீதா பயணம்’. என்ற இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெரும் கோடீஸ்வரரன சத்யராஜின் ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். சத்யராஜ் மனைவி ஐஸ்வர்யா சிறு குழந்தையாக இருக்கும்பொழுது இறந்துவிட்டார். தாயை இழந்த பாசத்தில் தந்தையையே உலகமாகக் கொண்டு வாழ்கிறாள். ஒரு சமையல் பயிற்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் மதுரைக்கு பயணம் செய்யும்போது நடுவழியில் ஐஸ்வர்யாவை சந்திக்கும் நிரஞ்சன், தன்னை போகிற வழியில் திருச்சியில் இறக்கி விட்டு விடும்படி கெஞ்சுகிறார். அவருடைய உண்மையான தோற்றம் ஐஸ்வர்யாவுக்கு நம்பிக்கை கொடுக்க அவரையும் அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார் ஐஸ்வர்யா.  போகும் வழியில் அவர் பலரை சந்திக்கிறார். சமையல்கலை மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்லும் போது திடீர் தீவிபத்து ஏற்படுகிறது.

அதில் ஐஸ்வர்யா உயிர் பிழைக்கிறாள். தான் உயிரோடு இருப்பதற்கு தான் வரும் வழியில் தன்னை இடைமறித்து நிறுத்தி பேசியவர்கள் தான் காரணம் என்று நினைத்து  அவர்களை சந்தித்து நன்றி சொல்ல போவதாக புறப்படுகிறாள். அவர் வழியில் சந்தித்த நிரஞ்சனை அவரது கிராமத்திற்கு சென்று சந்தித்து பேசுகிறார். அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகுகிறார். அதன் பிறகு நிரஞ்சனையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய பயணத்தில் தான் சந்தித்தவர்கள் எல்லாம் நேரில் பார்த்து நன்றி சொல்ல கிளம்புகிறார். அப்போது இருவருக்கும்  காதல் மலர்கிறது.அதோடு சில சிக்கல்களும் வருகின்றன,,,,,அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் ’சீதா பயணம்’படத்தின் மீதிக் கதை.

சீதா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பில் செயற்கைத்தனம் எல்லாம் எதுவும் இல்லாமல் மிக இயற்கையாக நம்முடைய மனதை தொடும் அளவுக்கு நடித்திருக்கிறார்.தனது கதாபாத்திரத்தை உணர்ந்து தன்னால் இயன்ற அளவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

நாயகனாக நடித்திருக்கும் நிரஞ்சனும் நல்ல தேர்வு.துடிப்பும் துள்ளலுமாய் வருகிறார்.காதல் மலர்ந்த பின்பு உள்ளத்தில் ஏற்படும் நெருடல்களை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சத்யராஜ்,பிரகாஷ்ராஜ்,கோவை சரளா,சுமித்ரா ஆகியோரின் வேடங்களும் அவற்றில் அவர்கள் நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

அர்ஜூன் மற்றும் துருவ்சார்ஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார்கள்.

ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவில் நிறைந்திருக்கும் சூப்பரான் காட்சிகள், நாயகியோடு சேர்ந்து நாமும் பயணம் செய்த உணர்வைப் பெறச் செய்திருக்கிறது.

அனுப் ரூபன்ஸ் இசையில்  தாளம் போடக்கூடிய கூடிய இனிமையான பாடல்கள் மற்றும் பின்ணணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

ஆக்சன்கிங் அர்ஜுன் என்று பெயர் பெற்றாலும் அவருடைய படங்களில் காதல் உணர்வுகளும் பாடல்களும் இரசிக்கும்படி அமைந்திருக்கும்.இப்படத்தில் மெல்லிய உணர்வுகளான அன்பு,பாசம்,காதல் ஆகியனவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.அவர் தன்  ரசிகர்களுக்காக அதிரடி சண்டைக்காட்சிகளில் தோன்றி அசத்தி இருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த அளவில் இந்த படத்தை உருவாக்கியிருக்கும் அர்ஜுனுக்கு நமது பாராட்டுக்கள்.

மொத்தத்தில் “சீதா பயணம்” படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.