Take a fresh look at your lifestyle.

‘ரெட் லேபில்’ திரைப்பட விமர்சனம்!

49

சென்னை:

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ‘ரெட் லேபில்’ படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத்

இப்படத்தில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காலேஜில் பயின்று வரும் மாணவர்களுக்கிடையான தேர்தலில் மந்திரி  மகன் போட்டியிட அவரை எதிர்த்து காலேஜின் சிறந்த மாணவன் போட்டியிட மந்திரியின் மகன் பண பலத்தால், தான் ஜெயிப்பது கடினம் என்ற எண்ணத்தால் காலேஜின் புரொபசர் அந்த காலேஜின் முன்னாள் மாணவரை உதவிக்கு அழைக்கிறார். இந்த சூழலில், முன்னாள் மாணவரும் நேர்மையான பண்புகளைக் கொண்டவருமான லெனின் காலேஜுக்குள் வருகிறார். காலேஜ் காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்கு என்று இருந்த லெனின், கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அனைத்தையும் விட்டுவிட்டு, தொழில், காதல் என்று அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், .சமாதானப் பாதையில் செல்லவே முடிவெடுத்தவர் ஒரு கட்டத்தில்,கல்லூரிக்குள்ளேயே ஒரு கொலை செய்யும் அளவிற்குச் சென்று விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியோடு ஒரு திட்டம் போடுகிறார். கல்லூரி வளகத்துக்குள்ளேயே நடக்கும் கொலையை மறைப்பதற்காக லெனின் மற்றும் அவரது தோழர்கள் உறுதுணையாக இருக்கும் சூழலில் கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருகிறது. அப்போது இவர்களை தாண்டி லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி லெனின் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான்  ‘ரெட்லேபில்‘  படத்தின் மீதிக்கதை.

இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் லெனின், ஒரு புதுமுக நடிகர் போல் தெரியாமல் நன்றாகவே நடித்திருக்கிறார். இவருக்கு இது முதல் படமாக இருந்தாலும், அனுபவம் மிக்க நடிகரைப் போல தன்னம்பிக்கையுடன் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது.ஒரு தயாரிப்பாளராக லெனின்  முதலீடு போட்டது மட்டுமல்லாமல், நடிகராக உழைப்பையும் போட்டுள்ளார் .

கதாநாயகியாக நடித்திருக்கும் அஸ்மினுக்கு சிறிய கதாபாத்திரமில்லை என்றாலும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இயக்குநர் சங்கத் தலைவரும் பல நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கிய ஆர்.வி.உதயகுமார் இதில் வில்லனாக அனைவரும் ரசிக்கும்படியான நினைவில் நிற்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதையின் முக்கிய வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம் என்பதால் அனுபவம் வாய்ந்த நடிப்பால் மிரட்டியுள்ளார்.

அனு மோகன், முனீஷ்காந்த்,, அஜய், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த பணியை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் கல்லூரி காட்சிகளையும் மாணவர்களின் கூட்டம், கல்லூரியில் நடைபெறும் ஆட்டம், பாட்டம் என அனைத்தையுமே கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார்.

கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒரு கல்லூரி, அதற்குள் இருக்கும் மாணவர்களின் மோதல், தேர்தல், வெளியில் இருந்து வரும் அரசியல் அழுத்தம்  என்ற அனைத்தையும் ரசிக்கின்ற விதத்தில்  மிகுந்த சுவாரசியத்துடன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் எழுத்தாளர் பொன். பார்த்திபன் பல திருப்பங்கள் மூலம், அதிக கவனத்துடன் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

இயக்குனர் கே.ஆர் வினோத் காலேஜுக்குள் காதலை வைத்து ஏதோ காலேஜ் கதையை சொல்ல வருகிறார் என்று பார்த்தால் அதற்குள் ஒரு க்ரைம் ஸ்டோரியை சிறப்பாக நுழைத்து எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக காட்சிக்கு காட்சி ஒரு பரபரப்புடன் விறுவிறுப்புடன் வடிவமைத்து படம் பார்க்கும் ரசிகனை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘ரெட் லேபில்’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.