CHENNAI:
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட், கொலப்புளி லீலா, சேத்தன், பிரகாஷ், குரு சோமசுந்தரம், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆங்கில மொழியை அகற்றி விட்டு இனிமேல் இந்தியா முழுவதும் அரசு அலுவல் மொழியாக இந்திதான் இருக்கும் என்று அப்போதைய சென்னை மாகாண அரசு அரசாணை பிறப்பித்த பொழுது, அப்போது அரசியல் கட்சிகளை விட மிகுந்த ஆக்ரோஷமாக போராட்டத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களும் குதித்தார்கள். இந்த கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முக்கிய மைய கருவாக வைத்து தற்போது வெளி வந்திருக்கும் படம்தான் ‘பராசக்தி’.
1959 ஆம் ஆண்டில் கதைக்களம் ஆரம்பமாகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு படை என்ற இளைஞர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக இருந்து, இந்தி மொழிக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு ஆதரவாகவும் பெரிய அளவில் போராட்டத்தை வழி நடத்துகிறார். அப்போது துடிப்பு மிக்க மாணவரான சிவகார்த்திகேயன் தலைமையில் அனைத்து மாணவர்களும் இணைந்து ரயில் எரிப்பு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ரயில் எரிப்பு போராட்டத்தில் சிவகார்த்திகேயனின் நண்பன் இறந்து விடுகிறார்.
ஒருகட்டத்தில் தனது நண்பனின் இழப்பால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தொடர்வண்டித் துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார் சிவகார்த்திகேயன் . வருடங்கள் உருண்டோட 1965-ஆம் ஆண்டில் பண்டித நேரு காலமான பிறகு இந்தியா முழுவதும் இந்தி மொழி கட்டாயம் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும். மாணவர்கள் இந்தியை படித்தே தீர வேண்டும் என்ற உத்தரவு ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வருகிறது. இதனால் வெகுண்டெழுந்த கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார். தன்னுடைய தம்பி எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் தம்பி அதர்வாவோ அண்ணனை விடவும் மிக வேகத்துடன் மொழி திணிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
இந்தித் திணிப்புக் கொள்கையினால் தமிழர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில் சிவகார்த்திகேயனும் இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். அதனால் மீண்டும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் சிவகார்த்திகேயன். .அப்போது அந்த புறநானூற்றுப் படை இயக்கத்தை சேர்ந்த மாணவர்களை ஒடுக்கவும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் போலீஸ் அதிகாரி ரவி மோகன் வருகிறார். இந்த சூழலில் மத்திய அரசின் எம்.பி.யின் மகள் ஸ்ரீலீலாவும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொள்கிறார். தெலுங்கு மொழிப் பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழி உரிமையின் வலியை புரிந்து கொண்டு இந்த போராட்டத்திற்கு துணை நிற்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரியான ரவி மோகன், தனது பணியில் வெறித்தனமாக செயல்பட்டு அந்தப் போராட்டத்தை அடக்க துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார். அதன் பிறகு போலீஸ் அதிகாரியான ரவி மோகன், புறநானூற்றுப் படை இயக்கத்தை சேர்ந்தவர்களை ஒழித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘பராசக்தி” படத்தின் மீதிக் கதை.
இந்தி மொழிக்கு எதிராக மொழிப்போர் வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவ்ருடைய தோற்றம்,உடைகள் மற்றும் உடல்மொழி ஆகியன அந்தக் காலகட்டத்தை அப்படியே பிரதியெடுத்தது போல் அமைந்திருக்கின்றன.இது ஒரு திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்றில்லாமல் செழியன் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதுவரையில் அவர் நடித்த படங்களில் எல்லாம் அவருடைய பேச்சுக்கள் காமெடியை வரவழைப்பது போல இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சிகூட அமையாமல் ஒரு போராளியாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். தன்னுடன் அடக்கி வைத்திருந்த தமிழ் மொழி வேட்கையால் எதிரிகளை சுட்டெரித்து துவம்சம் செய்யும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா அழகான வரவு.அவர் கதாநாயகனைக் காதலிப்பதோடு நில்லாமல் கதையிலும் ஒரு பாகமாய் இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த முறையில் படத்திற்கு நடித்து பலம் சேர்த்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன், கண்களிலேயே வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார்.ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்து அனைவரது வெறுப்பையும் சம்பாதிக்கிறார்.
அதர்வாவுக்கு இது மிக நல்ல பெயர் பெற்றுத்தரும் படம். துடிப்பும் துள்ளலுமான கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராணா டகுபதி,பசில் ஜோசப், சேத்தன், காளி வெங்கட் போன்ற இப்படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் காட்சிகளை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், 1960-க்கு முந்தைய காலக்கட்டங்களில் பயணித்த உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை உணர்வுப் பூர்வமாக பயணித்து கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் சுதா கொங்கரா ஒவ்வொரு வசனத்தையும் யோசித்து எழுதி இருப்பார் போலிருக்கிறது. ஒவ்வொரு வசனமும் நமக்கு ஈர்ப்பை கொடுத்து இருக்கின்றன. மொழி அழிந்தால் அடையாளம் அழியும். அடையாளம் அழிந்தால் அந்த இனத்தின் ஆன்மா அழியும் என்பதை மிக தெளிவாக இந்தி திணிப்பின் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்துக் கொள்கிற அளவிற்கு எளிமையான முறையில் திரை மொழியில் கொடுத்திருக்கிறார். அப்போதைய ஒன்றிய அரசு எப்படி எல்லாம் ஏமாற்றியிருக்கிறது என்பதையும் வசனம் மூலமாக சொல்லி நமக்கு ஒரு விழிப்புணர்வை வைத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
மொத்தத்தில், இந்த ‘பராசக்தி’- தாய்மொழியை காக்க வந்த ஒரு உன்னதமான படம்.
ரேட்டிங் 4/5.