சென்னை:
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘மார்க்’.
இப்படத்தில் ல் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், விக்ராந்த், யோகி பாபு, ஜி.எம்.குமார், சுப்பு பஞ்சு, ரோஷினி பிரகாஷ், அர்ச்சனா கொட்டிகே, தீப்ஷிகா, அஷ்வின் ரமாபா நேசன், பிரத்பல் ஹாசன், கோட்பால் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபல தாதாவான நவீன் சந்திரா குழந்தை கடத்தல், போதைப்பொருள், கட்டபஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்று பெரிய ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். பல பிரச்சனைகளை சந்திப்பதால் குழந்தை கடத்தலை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறான் நவீன் சந்திரா . இந்நிலையில் தம்பி விக்ராந்தின் காதலை எதிர்க்கும் அண்ணன் நவீன் சந்திராவுக்கு தெரியாமல் காதலியுடன் தலைமறைவாக சென்று விடுகிறான். அது மட்டுமில்லாமல் பணத்திற்காக 16 குழந்தைகளை கடத்தி அணைக்கட்டு அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைக்கிறார் விக்ராந்த்.
இந்த சூழலில் ஒரு முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணியும் மற்றும் ஒரேநாளில் 16 குழந்தைகள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கின்ற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் கிச்சா சுதீப். .ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி தன்னுடன்தேவைக்கேற்ப போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த வழக்கை விசாரிக்கப் புறப்படுகிறார். கடத்தப்பட்ட சிறுவர்களை தேடும் கிச்சா சுதீப்புக்கு, மறுபக்கம் முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் தேடி கண்டுபிடிக்கும்போது, இந்த இரண்டு சம்பவங்களுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இறுதியில் தன் போலீஸ் குழுவுடன் சேர்ந்து கடத்தபட்ட 16 குழந்தைகளை தேடி கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றினாரா? முதலமைச்சரை கொலை செய்த கொலையாளியை கண்டிபிடித்து கைது செய்தாரா? என்பதுதான் “மார்க்” படத்தின் மீதிக் கதை.
இடைநீக்கம் செய்யப்பட்டாலும், காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் கிச்சா சுதீப், சில படங்களில் வில்லனாக தோன்றினாலும் இப்படத்தில் கதை முழுவதையும் தனது தோளில் தாங்கிச் சென்றிருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் தண்ணீரில் மூழ்கவிருக்கும் குழந்தைகளை முதுகில் சுமந்து, காப்பாற்றும் காட்சியில் கழுத்தளவு தண்ணீரில் மூச்சு முட்டினாலும் கடினமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் கிச்சா சுதீப்.
வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை நடுங்க வைத்து விடுகிறார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக ஆக்ரோஷமாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
ருத்ரனாக வரும் விக்ராந்த் குறைந்த காட்சிகளில் வந்தாலும் குறை இல்லாமல் வந்து போகிறார்.அவரது பாத்திரம் கதையின் விறுவிறுப்புக்கு உதவி உள்ளது.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்த முறையில் அவர் ஏற்றுள்ள ஸ்டீபன் ராஜ் கதாபாத்திரத்தில் குறையின்றி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
யோகி பாபு வரும் இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் தன் பங்கை நிறைவாகச் செய்ய முயன்றிருக்கிறார்.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
சேகர் சந்துரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தனது ஒளிப்பதிவின் மூலம் படத்தின் விறுவிறுப்புக்கு உதவி செய்து, குறிப்பாக காளி கோயில் பாடல் காட்சிகள் பிரமாண்டம்மாக படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் வியாபார ரீதியிலான ஆக்சன் படத்திற்கான அனைத்து இசைக் கருவிகளையும் பயன்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள், வசனங்கள், பில்டப்கள் கொடுத்து படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக புகுத்தி சாதாரண கதையாக இருந்தாலும் அதை ஒரு மாஸ் ஹீரோவுக்கான படமாக கொடுக்கும் வித்தையை மிக நேர்த்தியான முறையில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மார்க்’ அதிரடி ஆக்ஷன் படம்.
ரேட்டிங் 3/5