
சென்னை:
செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருக்கும் சிறை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.
இதில் விக்ரம் பிரபு – கதிரவன், எல்.கே. அக்ஷய் குமார் – அப்துல் ராவூஃப்;, அனிஷ்மா அனில்குமார் – கலையரசி , ஆனந்த தம்பிராஜா – மரியம், மூணாறு ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுத படை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் விக்ரம் பிரபு சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்து வருகிறார். இதில் ஒரு குற்றவாளியை பேருந்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போது திடீரென்று அந்த பேருந்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி கலந்த கலவையை வீசி கைதியை தப்பிக்க வைக்க முயற்சி செய்ய, இதில் தடுமாறிவிடும் காவலர்களால் கைதியை பிடிக்க முடியாமல் போக, விக்ரம் பிரபு தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறார். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த கைதி தப்பித்து ஓடும்போது இறந்து விடுகிறான்.
இதனால் விக்ரம் பிரபு மீது விசாரணை நடந்து கொண்டிருக்க கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியான அக்ஷய் குமாரை வேலூர் மத்திய சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு இரண்டு காவலர்களுடன் அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசு பேருந்தில் அக்க்ஷய்குமாரை இரவு நேர பயணம் என்பதால் கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த நேரத்தில் உணவிற்காக ஒரு இடத்தில் பேருந்து நிற்க, அங்கு கைதியுடன் வந்த காவலர் ஒருவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் அதை தடுக்க விக்ரம் பிரபு செல்கிறார். அந்த சூழலில் மூன்று காவலர்களை விட்டுவிட்டு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறது. இந்த சமயத்தில் பேருந்தில் தனியாக விடப்பட்டு வந்த அக்க்ஷய் குமார் காவலர்களின் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். இறுதியில் விக்ரம் பிரபுவிடம் தப்பித்து ஓடிய கைதி அக்க்ஷய் குமார் கண்டுப்பிடிக்கப்பட்டாரா? கொலை குற்றவாளியான அவரது பின்னணி என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘சிறை’
கதையின் முக்கிய நாயகனாக விக்ரம் பிரபு கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் காக்கி சட்டை அணிந்த காவலராக நடித்துள்ளார். தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக நடித்து எதார்த்தமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைமைக் காவலராக விக்ரம் பிரபு மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சில காட்சிகளில் பேசாமல் தன் கண்கள் மூலமாகவே பேசுவதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது
மற்றொரு நாயகனாக அப்துல் ரவூப் என்ற கதாபாத்திரத்தில் கொலைக் குற்றம் செய்த கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அக்க்ஷய் குமார் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, கண் கலங்க வைத்து விடுகிறார்.
அக்க்ஷய் குமாரின் காதலியாக கலையரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிஷ்மா அனில் குமார் துறுதுறுவென்ற தோற்றத்தில் .எளிமையான அழகில் அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜா கதாபாத்திரக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ், காதர் பாஷா என்கிற கதாபாத்திரத்தின் மூலம், முஸ்லிம் மக்களைப்பற்றி பேசும் வசனத்தினால் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கொடுமைக்கார கணவராக ரகு , காவலராக ஹரிஷங்கர் நாராயணன் மற்றும் பல போலீஸ் துணைக் கதாபாத்திரங்கள் படத்திற்கு உறுதுணையாக இருந்து வழி நடத்தி செல்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் கதைக்களத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.
காவல்துறையில் பணி புரிந்தவர் என்பதால் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் தமிழ் உருவாக்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தெளிவான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமான காதல் கதையுடன் காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாக மிக எதார்த்தமாக ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன உணர்வுகளை தெளிவாக புரிய வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் என்றாலும் மொத்தத்தில் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 4/5.