Take a fresh look at your lifestyle.

’மாண்புமிகு பறை’ திரைப்பட விமர்சனம்!

85

சென்னை:

அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம். சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருவதோடு, அழிந்து வரும் பறை இசையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும், அக்கலையின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பறை இசையை தாழ்த்தப்பட்ட மாணவர்களும், மற்ற சாதியைச் சேர்ந்த சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இது மேல்சாதியை சேர்ந்த சாதி வெறியர்களுக்கு பிடிக்காமல் போகிறது. ஊர் தலைவரும் இன்னும் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றும் மேல் சாதியைச் சேர்ந்த நாயகி காயத்ரி மீது நாயகன் லியோவுக்குக் காதல் வருகிறது. அந்தக் காதல் காயத்ரியின் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிகிறது. இன்னொரு பக்கம் இந்த பறை இசை பரப்புரை மேல் சாதியினரை கடும் கோபத்தில் கொண்டு போகிறது. பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு விழாவில் பறை இசைப்பதற்காக சென்ற ஆரியன் மேல் சாதியினரால் படுகொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொலை சம்பவத்தை போலீசை வைத்து அங்குள்ளவர்கள் மறைத்துவிடுகிறார்கள்.  ஆனால் லியோ எவ்வளவு முயன்றும் கொலை செய்தது யார் என்ற உண்மையை வெளிக்கொண்டுவர முடியவில்லை. இறுதியில் ஆர்யனை கொலை செய்த கொலையாளியை லியோ கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘மாண்புமிகு பறை’ படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். பறை இசைக்கலைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.ஒருசில காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

இவருடைய உற்ற நண்பனாக நடித்திருக்கும் அரியனும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை மிக சிறப்பக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, உணர்வுப்பூர்வமாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து  பலம் சேர்த்திருக்கிறார்.

கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் பறைஇசை அதிர்வுகளும் கண்களை நிறைத்து மனதிலும் நுழைகின்றன.

தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன.பின்னணி இசையில் பறையின் பெருமிதத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், பறை இசையின் பெருமையையும், அந்த இசைக் கருவியை வாசிப்பவர்கள் எப்படி சிறுமைப்படுத்தப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய முயற்சி செய்து இருக்கிறார். பறை இசையின் பின்னணியில் உள்ள,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக இப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார் அறிமுக இயக்குநர்.

மொத்தத்தில், ‘மாண்புமிகு பறை’  படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5.