CHENNAI:
தினேஷ் இலெட்சுமணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘தீயவர் குலை நடுங்க’.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இப்படம் ஆரம்பிக்கும்போதே எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் காட்சியுடன் தொடங்குகிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்க வருபவர் அதிகாரி அர்ஜுன். அவர் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது எதிர்பார்க்காத சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதை வைத்து விசாரணை செய்யும்போது ஒரு சிறுமியின் பரிதாப கொலையும் உடன் சேர்கிறது. ஒரு பக்கம் அர்ஜுன் விசாரணை தொடர இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்கிறது. மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது காதலர் பிரவீன் ராஜா ஆகிய இருவரையும் நோக்கி இந்த கொலை வழக்கின் விசாரணையை மேற்கொள்கிறார் அர்ஜுன். இதற்கிடையே, அர்ஜுன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, அது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இதன் பிறகு அர்ஜுன் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்தாரா? இந்தக் கொலைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் என்ன சம்பந்தம்? என்பதுதான் “‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் மீதிக் கதை.
மகுடபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார் அர்ஜூன். வழக்கமான தனது உடல்மொழியை வைத்துக் கொண்டு இன்வஸ்டிகேஷன் நடத்து விதம் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. தனது பாணியில் அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றையும் நிகழ்த்தி தனது ரசிகர்களை திருப்தியடைய செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமானது இப்படத்தில் சற்று வித்தியாசமானது தான். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார்.
பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பளித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, ஆரம்பக் காட்சியிலேயே மிரட்டி விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் வேகத்தை அதிகரித்து பார்வையாளர்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.திரை மொழிக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்களுடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். இப்படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.
மொத்தத்தில் ‘தீயவர் குலை நடுங்க’ ரசிகர்களை பிரமிக்க வைக்கும்.