Take a fresh look at your lifestyle.

’படையாண்ட மாவீரா’ திரைப்பட விமர்சனம்!

68

சென்னை:

வ.கௌதமன், மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், பூஜிதா, சமுத்திரக்கனி, பாகுபலி பிரபாகர், மதுசூதனன் ராவ், ஆடுகளம் நரேன், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, தமிழ் கௌதமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘படையாண்ட மாவீரா’.  இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் வ.கௌதமன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

வன்னியர் சங்கத் தலைவராக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் துணை தலைவராகவும் பதவி வகித்த காடுவெட்டி குரு என்கின்ற ஒரு அரசியல்வாதியை பற்றிய படம்தான் இது. மறைந்த முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குருவின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சற்றே கற்பனை கலந்து பல கமர்ஷியல் விஷயங்களை புகுத்தி இப்படத்தை எடுத்து இருக்கிறார்கள். 

அரியலூர் மாவட்டத்தில் ராணுவத்தில் பணி புரிந்து விட்டு வந்த  சமுத்திரக்கனி, தனது கிராமத்தில் வாழும் பகுதியில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றெண்ணி அங்குள்ளவர்களின் குறைகளை கேட்கிறார். அதற்கேற்றவாறு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு, பல வருடங்களாக தலைவராக இருந்த ஆடுகளம் நரேனை தோற்கடிக்கிறார் சமுத்திரக்கனி. இதனால் கோபமடைந்த நரேன் சமுத்திரக்கனியை கொல்லத் துடிக்கிறார். சமுத்திரக்கனியின் மனைவியாக வருகிறார் சரண்யா பொன்வண்ணன். இவர்களுக்கு குருநாதன்(கௌதமன்) என்ற மகனும் இருக்கிறார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு, பல வருடங்களாக தலைவராக இருந்த ஆடுகளம் நரேனை தோற்கடித்த சமுத்திரக்கனியை கொல்ல துடித்துக் கொண்டிருக்கும், ஒரு கட்டத்தில் தன் சமுதாய மக்களுக்காக நியாயம் பேச சென்றபோது சமுத்திரகனியை அவரது மகன் (கௌதமன்) கண் முன்னே கொன்று விடுகிறார் நரேன்.

இந்த சூழலில் தன் கணவனைக் கொன்ற நரேனை தலை துண்டித்துக் கொன்று விடு என்று தனது மகன் (கௌதமன்)குருநாதனிடம் கூறுகிறார் சரண்யா. பல ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தந்தையை கொன்றவரை பழிக்கு பழி தீர்க்க நரேனை தலை துண்டித்து கொல்கிறார் குருநாதன்(கௌதமன்).

இதனை தொடர்ந்து, தனது கிராமத்து பெண்களுக்காகவும், அங்குள்ள தனது சாதி மக்களுக்காக பல பேரை கொலை செய்கிறார் குரு(கௌதமன்). இதனால் சிறைத் தண்டனை பெற்ற குரு(கௌதமன்), தண்டனை முடித்து வெளிவந்த பிறகு தனது சமூகத்தை மட்டுமின்றி, அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவராகவும், மக்களுக்கு எதையும் செய்யத் தயங்காத ஆளுமை படைத்த ஒரு தலைவராகவும் அனைவருக்கும் பாது காவலராகவும் மாறுகிறார். இந்த சமயத்தில் சிமெண்ட் பேக்டரி, அந்நிய நிறுவனம் என தனது மண்ணை அடைய நினைக்கும் அனைவரையும் எதிர்த்து களத்தில் நிற்கிறார் குரு(கௌதமன்). இதனால் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை நிலை என்ன ஆனது என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கும் கதைதான் ‘படையாண்ட மாவீரா’.

காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், விஜயகாந்த் சாயலில் சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து ஏரியாவிலும் அவரைப் போலவே நடித்திருக்கிறார். தான் சார்ந்த மக்களுக்காகவும், தன் சமுதாயம் தாண்டிய மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் பேசுகின்ற பல வீர ஆவேச பேச்சுக்கள் சிறந்த இயக்கத்தின் மூலம் கேட்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் வ கெளதமன். 

கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் டித்திருந்தாலும் தனது பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.

காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தன் தந்தையை கொலை செய்தவரை பழிதீர்க்கும் கதாபாத்திரத்தில் தன் கோபத்தை கண்களில் மட்டும் இன்றி உடல்மொழியிலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் காடுவெட்டி குருவின் இளம்பருவத்தில் நடித்திருக்கும் தமிழ் கெளதமனின் நடிப்பு அபாரம்.
ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பாடல் வரிகள் அனைவரையும் கவரக் கூடிய விதத்தில் இருக்கிறது. சாம்.சி.எஸ் பீன்னணி இசை காட்சிகளுக்குத் தக்கவாறு இசையை கொடுத்திருக்கிறார்.

இப்படத்திற்கு கோபி ஜெகதீசுவரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவருடைய உழைப்பில் படம் வண்ணமயமாக காட்சிகள் இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது.

வன்னியர் சமுதாயத்தைப்பற்றி தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் காடுவெட்டி குரு என்கின்ற பெயர் கேட்டவுடன் என்ன மாதிரியான மனநிலை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்படுமோ அதையெல்லாம் மாற்றி அமைக்கும் வகையில் மிகவும் சிறந்த முறையில் கதையை எழுதி மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய நேர்மையான மனிதராக காட்டும் ஒரு  படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வ. கெளதமன்.

மொத்தத்தில், ‘படையாண்ட மாவீரா’ காடுவெட்டி குருவின் வாழ்க்கை என்பதால் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.