’குற்றம் புதிது’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் வரிசையில் ஒரு புதிய கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் “குற்றம் புதிது”. இந்தப் படத்தில் தருண் விஜய் நாயகனாகவும், சேஷ்விதா கனிமொழி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நோவா ஆம்ஸ்ட்ராங் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கதாநாயகனான தருண் விஜய் உணவு டெலிவரி செய்யும் பணியில் இருக்கிறார். அவருடைய வீட்டிற்க்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ் குடியிருந்து வருகிறார். இந்த நேரத்தில் காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றும் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி திடீரென்று காணாமல் போகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன் ராவுக்கு, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி நாயகன் தருண் விஜய் காவல் நிலையத்தில் சரணடைகிறார். ஆனால் அதன் பிறகு அந்த கொலை அவர் செய்யவில்லை எனக் கூறி ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது கொலை பழி சுமத்தி அவரை கைது செய்கின்றனர்.
இந்த சூழலில் தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண் யார் ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கும் காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த கொலை மட்டும் அல்ல, மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக தருண் விஜய் காவல்துறையினரிடம் சொல்கிறார். இந்த விசாரணை சென்று கொண்டிருக்கும் வேலையில் நாயகி சேஷ்விதா உயிரோடு மீட்கப்படுகிறார். இதனால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் அவர் மனநிலை பாதித்தவர்போல் தருண் விஜய் பேசுகிறார். நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் நிறுத்தும்போது அவரது நடவடிக்கை பார்த்து நீதிபதி கொலை வழக்கை தீவிர விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இறுதியில் இந்த கொலைகளை செய்தவர்கள் யார்? உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக தருண் விஜய் எதற்காக சொல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில் இந்த க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த “குற்றம் புதிது” படம் பார்த்தால் தெரியும்.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய் ஒரு கதாநாயகனுக்குரிய முக வெட்டும், உடல் அமைப்பையும் வைத்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் முகபாவனைகள் அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டதை தன்னுடைய முகபாவனைகளாலும், வசன உச்சரிப்பிலும், தங்களுடைய நடிப்பிலும் கடைசி வரையில் நம்மை நம்ப வைத்து சாதித்திருக்கிறார் தருண் விஜய். நடனம், ஆக்ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் தத்ரூபமாக நடித்து அசத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி தனது கண்கள் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களிடத்தில் பாராட்டு பெறுகிறார். தந்தை மீது பாசம் பொழியும் மகளாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
துணை கமிஷனர் ஆக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் எல்லா படங்களிலும் வில்லனாக நடித்து தன் திறமையை காட்டி இருந்தவர், இந்த படத்தில் முதன்முதலாக ஒரு அன்பான, பாசமான தந்தையாக நடித்திருக்கிறார். தந்தை கதபாத்திரத்திற்கு இனி இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் ஆட்டோ டிரைவராக நடித்த ராம்ஸ், அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து இந்த படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் கேமரா, சிறிய அறையில் நிகழும் கொடூரமான காட்சிகள் மற்றும் திகில், திரில் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்களை கொஞ்சம் கலங்க வைக்கும்விதமாகஅப்படியே தத்ரூபமாக நிகழ்வதைப்போல படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் கரண்ட் கிருபா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் பின்னணி இசையும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருப்பதை பாராட்டலாம்.
வழக்கம்போல ஒரு கொலை , சஸ்பென்ஸ், திகில், திரில்லர் கலந்த கதையில் ,ஒரு பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங் படத்தின் இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸ் குறையாமல் மேலும் மேலும் அதிர்ச்சியை கொடுக்கும் அளவுக்கு திருப்பங்களை ஏற்படுத்தி, ஒரு தரமான சஸ்பென்ஸ் படமாக கொடுத்து இருப்பதை பாராட்டலாம்..
மொத்தத்தில், ‘குற்றம் புதிது’ கிரைம் திரில்லர் ஜானர் நிறைந்த படம் பார்ப்பவர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.