
CHENNAI:
சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, சிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான், ஜாக்சன் ஜாபர் சாதிக், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், நமோ நாராயணா, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “கருப்பு”. இந்த படத்தை ஆர். ஜே. பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கேரளாவிலிருந்து இந்திரன்ஸ் தன் மகளுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நகைகளுடன் ரயிலில் புறப்பட்டு சென்னை வருகிறார். பெரம்பூர் செல்ல வேண்டிய அவர் பேசின் பிரிட்ஜில் இறங்குகிறார். அப்போது அவர்களிடம் வழிப்பறி நடத்தி இரண்டு பேர் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த இந்திரன்ஸ் தன் மகளுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கிறார்.
இரண்டு நாட்களில்அந்த நகையை பறிமுதல் செய்து குற்றவாளிகளையும் பிடிக்கிறது போலீஸ். ஆனால், திருடு போன மொததம் 60 பவுன் நகையில் 45 பவுன்தான் திருடனிருந்து மீட்டதாக அந்த இன்ஸ்பெக்டர் சொல்கிறார். ஆனால் அந்த நகைகளை நீதிமன்றம் மூலம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.
இதற்காகவே இந்திரன்ஸ் சென்னையில் தங்க வேண்டிய நிலைமை வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நகரத்தின் நீதிமன்றம், காவல்துறை, அரசியல் என அனைத்தையும் பணத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த வக்கீலாக பேபி கண்ணன் எனப்படும் ஆர். ஜே.பாலாஜி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு அந்த நீதிமன்றத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் இந்திரன்ஸும் அவரது மகளும் நீதிமன்றத்துக்கு சென்று வக்கீல் ஆர் ஜே பாலாஜியிடம் கொள்ளை போன விஷயத்தை சொல்லி அந்த 60 பவுன் நகைகளையும் மீட்டுக் கொடுக்க வற்புறுத்துகின்றனர். அந்த வழக்கை ஏற்றுக் கொண்ட ஆர் ஜே பாலாஜி நீதி மன்றத்தில் ஆஜராகி உதவி செய்வதாக சொல்லி இவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டே இருக்கிறார். ஊழல் வக்கீல் ஆர் ஜே பாலாஜியும் அவரது கூட்டாளிகளும் அவர்களை ஏமாற்றி, பிரியாணிக்கும் சிகரெட்டுக்கும் அலைக்கழித்து வழக்கை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் வேதனையடைந்த இந்திரன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் எல்லைத் தெய்வம் ‘கருப்பசாமி’யிடம் கண்ணீர் மல்க முறையிடுகிறார். அவரது துயரத்தை துடைக்க, அந்த தெய்வ சக்தியுடன் குலதெய்வமான கருப்பசாமி ஒரு மனித ரூபத்தில் வக்கீல் சரவணனாக சூர்யா நீதிமன்றத்திற்குள் வருகிறார். அங்கு வந்திருப்பது கடவுள் என்பதை அறியும் பாலாஜி “கடவுளின் சக்தியை பயன்படுத்தாமல் ஒரு சாதாரண மனிதனாக இந்த நீதிமன்றத்தில் வழக்காடி ஜெயித்துக் காட்டு… என்று சூர்யாவிடம் சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக் கொண்ட சூர்யா நீதித்துறையின் அவலநிலையை மாற்றினாரா? இல்லையா? என்பது தான் “கருப்பு” படத்தின் மீதிக்கதை.
கருப்பசாமி என்ற கருப்பு கதாபாத்திரத்தில் மனித உருவில் நீதிமன்றத்திற்கு வரும் வக்கீல் சரவணனாக நீதிக்காக வாதாடும் சூர்யா, தனது நடிப்பில் எவ்விதக் குறை இல்லாமல் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இந்த படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறார். நீதிமன்றக் காட்சிகளிலும் ஒரு சில எமோஷன் காட்சிகளிலும் தன்னுடைய நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்கிறார். .சூர்யாவுக்கு இந்த படம் நல்லதொரு மறுமலர்ச்சியாக பெரிய வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆர்ஜே பாலாஜி இதுவரை நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட வகையில் மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வருகிறார். சில இடங்களில் பிரதான வில்லனாகவே அசத்தி இருக்கிறார்.
சூர்யாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரிஷா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரீத்தியாக வருகிறார். ஆனால் இப்படத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாதது வேதனைதான்.
ஆணவம் கொண்ட நீதிபதியாக நட்டி நடித்திருக்கிறார். இப்படிக் கூட நீதிபதி இருப்பாரா என்று எண்ணும் அளவுக்கு நடித்துள்ளார்.
கேரளாவில் இருந்து வயதான தந்தையாக மட்டஞ்சேரி சுகுமாரன்பாத்திரத்தில் வரும் இந்திரன்ஸ் துயரமான காட்சிகளில் நமது நெஞ்சைப் பிழிய வைக்கிறார்.அவரது மகளாக சிவதா நோயாளி பெண்ணாக வந்து அனைவரது அனுதாபத்தையும் அள்ளுகிறார்.
சுவாஷிகா, சுப்ரீத் ரெட்டி, வேல ராமமூர்த்தி, மன்சூர் அலிகான், ஜாக்சன் ஜாபர் சாதிக், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், நமோ நாராயணா, தீபா சங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாய் அபியங்கர் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இல்லை. பின்னணி இசையில் சத்தத்தை அதிகமாக்கி காதைத் துளைக்கிறது.
நீதிமன்றத்தின் இடங்களும், கருப்பசாமியின் தெய்வீக காட்சிகளையும் பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்து படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
சில தெய்வங்கள் மீது மக்களுக்கு இருக்கும் இறுக்கமான பிணைப்பை அடிநாதமாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் திரைக்கதையை அப்படியே நீதி மன்றத்தை மையமாக வைத்து மாற்றி எழுதி கருப்பசாமி என்கிற தெய்வ சக்தியை இணைத்து பக்திப் படமாகவும் இல்லாமல் சமுதாய அவலங்கள் உள்ள படமாகவும் இல்லாமல் புதிய ரகத்திலான படமாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர், ஜே.பாலாஜி.
மொத்தத்தில், “கருப்பு” படத்தில் கதை இல்லாவிட்டாலும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.