Take a fresh look at your lifestyle.

‘லாக்டவுன்’ திரைப்பட விமர்சனம்!

57

சென்னை:

லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘லாக்டவுன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயக ராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பட்டதாரி பெண்ணான அனுபமா பரமேஸ்வரன் தன்  படிப்பிற்குண்டான வேலையை தேடிக் கொண்டிருக்கிறார். ஐடி துறையில் பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் அனுபமா பரமேஸ்வரன். ஆனால், அவருக்கு இரவு நேரத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைப்பதால் கலாச்சாரம் கட்டுப்பாடுகள் நிறைந்த அவரது குடும்பத்தார் தடை விதித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறிய தோழியின் அழைப்பின் பேரில்  அனுபமா பரமேஸ்வரன் ஒரு விருந்துக்கு செல்ல, அங்கே தோழியின் வற்புறுத்தலால் மதுவை அதிகமாக குடித்துவிட்டு ஆட்டம்,  பாடல், நடனம் என ஆடி மது போதையில் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்.

மறுநாள் காலை வீட்டுக்கு சென்று வழக்கம் போல் தனது வாழ்க்கையை தொடரும் அனுபமா பரமேஸ்வரன், சில வாரங்கள் கழித்து எதிர்பார்க்காத பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அதற்கு காரணம், அந்த மது விருந்து தான் என்று தெரிந்து தனது பொறுப்பற்ற செயலால் நடந்த விபரீதத்தை உணர்ந்து கலங்குகிறாள். தன் கற்பை அழித்தவர் யார் என்பது தெரியாமல் தவிக்கிறார். இதனால் தன் குடுபத்தினரிடம் இதை சொல்ல முடியாமல் தவிக்கும் அனுபமா பரமேஸ்வரன் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்கிறார்.தனது தோழியுடன் டாக்டரைப் பார்க்க செல்ல, அவர் கருக்கலைப்பு  செய்ய மறுத்து விடுகிறார். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் வந்து விட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.  இந்த சூழலில் அவரால் எந்த செயலும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இறுதியில் அவர் எடுத்த முடிவு என்ன? கருகலைப்பு செய்தாரா? இல்லையா? என்பதுதான் “லாக்டவுன்” படத்தின் மீதிக் கதை.

அனிதாவாக இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், இப்படம் முழுவதும் தன்னுடைய இயல்பான அமைதியான அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட இடையூறினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி ரசிகர்களை கலங்க வைத்து விடுகிறார். வளர்ந்து வரும் கதாநாயகிகள் யாரும் இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க  தயங்குவார்கள். ஆனால் அனுபமா பரமேஸ்வரன் இந்த கதாபாத்திரத்தை ஏற்று, அதில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருப்பதை பாராட்டலாம்.

அவருடைய பெற்றோராக நடித்திருக்கும் சார்லி,நிரோஷா ஆகியோர் நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள்.

என் ஆர் ரகுநாதன், சித்தார்த் விபின் என இரு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். பாடலில் சோகத்தை ஏற்படுத்தி ரசிகர்களை கலங்க வைத்து விட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் வீட்டிற்குள் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் இயல்பாக செயல்பட்டு பதிவு செய்து இருப்பது பாராட்டத்தக்கது.

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கு உத்தரவு காலக்கட்டத்தை கதையின் முக்கிய அம்சமாக கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.ஒரு இளம்பெண்ணின் சிக்கலைப் பற்றி மட்டுமின்றி ஊரடங்குக் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு கர்ப்பமானதை அறிந்து அதனை கலைக்க தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியை அந்தப் பெண் எப்படி சிரமப்பட்டு தடைகளை தாண்டி செய்ய முடிந்தது என்பதை குடும்ப சென்டிமெண்ட் கலந்த முறையில் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘லாக்டவுன்’  மனதை வருடும் படம்.