Take a fresh look at your lifestyle.

‘வங்காள விரிகுடா’- திரைப்பட விமர்சனம்!

56

CHENNAI:

புதுமுகம் குகன் சக்கரவர்த்தி, அலினா ஷேக், டிப் லேனா ,வையாபுரி, பொன்னம்பலம் , வாசு விக்ரம், ஆகியோர் நடித்துள்ள படம்தான் ‘வங்காள விரிகுடா’

இப்படத்தில் குகன் சக்கரவர்த்தி கதாநாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப்பயிற்சி, உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்புத் தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம் ஆகிய அனைத்தையும் அவரே செய்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஷ்டப்பட்டு உழைத்து, முன்னேறி பணக்கார தொழிலதிபராக உயர்ந்து அங்குள்ள பலருக்கும் உதவிகள் செய்து மக்கள் அன்போடு அண்ணாச்சி என்று அழைக்கும் அளவிற்கு புகழ் பெற்று இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. இவர் அடிக்கடி தனதுகாதலியின் நினைவில், அவருடன் பழகிய நாட்களை நினைத்து கண்கலங்கி நிற்கிறார். இந்த சூழலில், தனது நண்பனின் மகள் ஒருவர் பள்ளியில் படிக்க, அண்ணாச்சி  குகன் சக்கரவர்த்தியை திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண் கூறுகிறார்.அந்த பெண்ணுக்கு வயது குறைவு என்றாலும், அவரை திருமணம் செய்து கொள்கிறார்.  ஆனால், அந்த பெண்ணுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. எந்தவித இன்பமும் இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

உடனுக்குடன் ஓடிச் சென்று முன்னாள் காதலி யை காப்பாற்றுகிறார் குகன் சக்கரவர்த்தி. தன்னைப் போலவே தனது காதலியும் வாழ்வில் தோல்வியடைந்தது அறிந்து மிகவும் வருந்தும் குகன் சக்கரவர்த்தியின் மனம் தன் காதலியுடன் ஒன்றிணைகிறது. காதலியை கொடுமை செய்யும் அவரது கணவனை கொன்று அவருடன் சேர்ந்து வாழ்கிறார். இந்த சூழ்நிலையில்  கொலை செய்து இறந்த போன காதலியின் கணவன் அண்ணாச்சி குகன் சக்கரவர்த்தியையும், காதலி​யையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் உயிரோடு இருப்பதாக மிரட்டுகிறார். இறந்து போனவர் எப்படி மீண்டும் உயிரோடு வந்து பேச முடியும்…என்று குழம்பும் சூழலில் தன் காதலியையும், தன்னையும் மிரட்ட முயற்சிக்கும் அந்த மர்ம நபர் யார் என்பதை குகன் சக்கரவர்த்தி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘வங்காள விரிகுடா’ படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, பல நடிகர்களின் மிக சாயல் இருப்பதால் அவர்களை நினைவுபடுத்தும்படி மிக சிறப்பாக  நடித்திருக்கிறார். இவர் தனது நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் என 21 பொறுப்புக்களை ஏற்று இப்படத்தில் பணியாற்றி ஒரு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகனின் மனைவியாக டிப்லேனாவும் காதலியாக அலினா ஷேக்கும் நடித்துள்ளனர். பாடல்கள், காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக நடிப்பில் மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.

திருநம்பியாக வித்தியாச முகம் காட்டிக் கவனம் பெறுகிறார் வையாபுரி.பொன்னம்பலம், வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் குகன் சக்ரவர்த்தி 21 துறைகளில் பொறுப்பேற்று, அனைத்து காட்சிகளையும் நி அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும்  செய்துள்ளார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,எம்.ஜி.ஆர்,அப்துல்கலாம் ஆகியோரைப் பற்றிய பாடல் இடம்பெற்று, அவரே இசையமைத்து பாடல் எழுதி பாடியிருப்பதும் பாராட்டத்தக்கது என்றாலும் ஒரு திரைப்படத்திற்கான எல்லா அம்சங்களும் இருந்தும் ஒருவரே தனது தோளில் இப்படத்தை தூக்கி சுமந்திருப்பதால் பலவற்றில் கவனம் செலுத்த முடியாத போதாமை தெரிகிறது. ஒரு நல்ல காதல் கதையாகத் தொடங்கி மர்மம்,திகில் ஆகியனவற்றில் தன் முழு கவனத்தையும் செலுத்தி பயணித்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘வங்காள விரிகுடா’  ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம்.

ரேட்டிங் 2.5/5.