CHENNAI:
பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் – ஜெயா தேவதாஸ் தயாரித்திருக்கும் ஜாக்கி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். பிரகாபால்
இதில் யுவன் கிருஷ்ணா – ராமர், ரிதன் கிருஷ்ணா – கார்த்தி, அம்மு அபிராமி – மீனாட்சி, காளி – காளி, மதுசூதன் ராவ் – வஸ்தவி, சித்தன் மோகன் – ஓதமுத்து, சரண்யா ரவி – ஈஸ்வரி, பாத்மன் – அய்யாவு, யோகி – சுப்பு, சாய் தினேஷ் – சிவபானம், சிதம்பரம் – ஜோன்ஸ், பிரவீன் – மைக், ஆதவ் – வசந்த், ஈஷா – இனியாள் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை போல தற்போது தென் தமிழகத்தில் நடைபெறும் ஆட்டு கிடா சண்டைகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் என்ன என்பதையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ‘ஜாக்கி’.
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா தான் வளர்க்கும் காளி என்ற கிடாவை கிடா முட்டு போட்டிக்கு சிறிது தாமதமாக அழைத்து வருகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறும் கிடாவுக்கும் அதன் உரிமையாளருக்கும் ‘ஜாக்கி’ என்கிற பட்டம் பொறித்த செயின் கிடைக்கும். அந்த ஜாக்கி என்ற செயினை யாருக்கும் விற்கவும் முடியாது. சொந்தமாக வைத்திருக்கவும் முடியாது. அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து நடக்கின்ற கிடா சண்டையின்போது அந்த செயினையும் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். புதிதாக யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு அந்த செயின் கொடுக்கப்படும்.
இந்த கிடா சண்டைகிடா சண்டை போட்டியில் வருடாவருடம் தொடர்ந்து ஜெயித்து ஜாக்கி மெடல் செயினை வாங்கும் ரிதன் கிருஷ்ணா இந்தாண்டும் போட்டியில் வெற்றி பெறுகிறார். பெரிய அளவில் வசதி படைத்தவரான ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையை கெளரவமாக கருதுகிறார். இதற்கிடையே, யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு முறை வீழ்த்தி விடுகிறது அதனால் மனம் வெறுத்த ரிதன் கிரிஷ்ணா எப்படியாவது காளி என்ற கிடாவை தனது கிடா மூலம் வெற்றி பெற வேண்டும் என்று சில சதிகள் செய்யும்போது இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி சண்டைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர் மதுசூதன் ராவ் இருவரையும் சமாதானம் செய்து போட்டியை ஆரம்பித்து வைக்கிறார். அந்த கிடா சண்டையில் வெற்றி பெற்றது யார்? ரிதன் கிருஷ்ணாவை எப்படி யுவன் கிருஷ்ணா பழி வாங்கினார்? என்பதுதான் “ஜாக்கி” படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரைப் பக்கத்து இளைஞராக மிக யதார்த்தமாக மாறி சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கிடா காளியிடம் காட்டும் பாசம், அதனுடன் பேசும் பேச்சுக்கள் எல்லாமே உயிர்ப்பு மிகுந்து இருக்கிறது. இப்படத்தில் வீரமிக்க சண்டைக் காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி உணர்ச்சி மிக்க உறைவிடமாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
வில்லனாக ரிதன் கிருஷ்ணா,பணக்காரத் திமிரையும், ஆணவத்தையும் நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.எனக்கு ரவுடியிசமும் செய்யத் தெரியும் என்று சொல்லி அதற்கேற்ப நடித்து மிரட்டியிருக்கிறார்.
அம்மு அபிராமியின் கதாபாத்திரம் காதல் மட்டுமே மையமாக வைத்திருப்பதால், அதிக முக்கியத்துவம் இல்லாமல் தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளின் நிறத்தையும், அம்மக்களின் மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிடா சண்டை போட்டிகளை படமாக்கிய விதம் பாராட்டத்தக்கது.
சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். கிடா சண்டைப் போட்டிகளை அசத்தலாக பின்னணி இசை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
டாக்டர் பிரகாபல் கதை எழுதி இயக்கியிருக்கிறார். கிடா சண்டையை விளையாட்டாகக் கருதாமல் வெறியாக நினைத்து பழக்கி வளர்க்கும் இருவர் இடையே நடக்கும் மோதலும், அனல் பறக்கும் காட்சிகளும் அதன் விளைவாக நடக்கும் வன்முறையும் ரவுடியிசமும் படத்தை அதிர வைக்கின்றன. மனிதர்களின் மோதல்களுடன் விலங்குகளின் மோதல்களையும் அழுத்தம் திருத்தமாக கொடுத்திருப்பதில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் ‘ஜாக்கி’-படம் ரசிப்பு தன்மை மிகுந்தது.
ரேட்டிங் 3/5.