சென்னை:
இன்னர் வியூ சார்பில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கும் ‘அனந்தா’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா
இப்படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய் ஜீ மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்.
புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து ஐந்து பக்தர்களுக்கு அழைப்பு வருகிறது. அவர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். அங்குள்ள மேலாளர் அவர்களை வரவேற்று “பாபா உங்களை இங்கு வரவழைத்திருக்கிறார். உங்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறார். அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை பக்தர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்கள். சுகாசிணி பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் அடைகிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் உயிருக்கு பிரச்சனை ஏற்படுகிறது அதேபோல் தொழிலதிபர் ஜெகபதி பாபுக்கு வாழ்வில் எப்படி திருப்பம் கிடைத்தது, ஒய் ஜி மகேந்திரன் தனது மனைவியை பறிகொடுத்தபோது நடந்த சம்பவம் என்ன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடனப் பெண்ணுக்கு நடந்த அதிசயம் என்ன உள்ளிட்ட ஐந்து முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ‘அனந்தா’ .
சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்களாக மாறும் ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், அபிராமி வெங்கடாசலம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது சிறப்பாக யதார்த்தமாக நடித்து இருக்கின்றனர்.
புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு செல்லாதவர்கள் கூட அவரது பக்தர்களாக மாற்றும் விதத்தில் காட்சிகள் மனதை தொடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பா விஜயின் வசனங்கள் மற்றும் பாடல்கள், தேவாவின் இசை மற்றும் பின்னணி இசை பக்தி சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்துகிறது,
ஒளிப்பதிவாளர் சஞ்சய் காட்சி கோணங்கள் வண்ணமயமாக படமாக்கி உள்ளார்.
சாய்பாபா பக்தர்களுக்கு நேரில் காட்சியளித்த ஆசிரம காட்சிகளும் கதையோடு இணைத்து இயக்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. ஒவ்வொரு கதையும் வெளிவரும்போது அது மேன்மேலும் உணர்ச்சியின் ஆழத்தை உருவாக்குகின்ற மாதிரி இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் அனந்தா’ புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள் பார்க்க வேண்டிய படம்.