Take a fresh look at your lifestyle.

’வா வாத்தியார்’ திரைப்பட விமர்சனம்!

65

சென்னை:

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய  இரண்டு படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

இப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், பி.எல். தேனப்பன், ஆனந்தராஜ் , நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன், யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், வித்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், தன்னுடைய தலைவனை பெரிய திரையில் பார்க்க விரும்பி ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை தூக்கிக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் தியேட்டருக்கு வருகிறார். இந்நிலையில் அங்கு  எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, எம்ஜிஆர்; இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போகிறார்.  இன்ப அதிர்ச்சியாக எம்ஜி ஆர் இறந்த அன்று அதே நாள், அதே நேரத்தில் பேரன் பிறக்க எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார் ராஜ்கிரண்.. எம்.ஜி.ஆரைப் போலவே அவனது உள்ளங்காலிலும் ஒரு மச்சம் இருக்க எம்ஜிஆரின் மறுபிறப்பு என்றெண்ணி அதே கொள்கைகள் மற்றும் லட்சியங்களுடன் அவரை வளர்க்க நினைக்கிறார். தன் பேரனுக்கு ராமேஸ்வரன்(கார்த்தி) என்று பெயர் வைத்து அழைக்கிறார் ராஜ்கிரண். தன்னுடைய பேரன் கார்த்தி எம்ஜிஆரை போலவே நல்லவனாகவும், வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி நல்ல விஷயங்களையும், பல அறிவுரைகளையும் சொல்லி, எம்ஜிஆர் போல் வித்தைகள் கற்றுக் கொடுத்து வளர்ப்பதுடன், “நீ போலீஸ் அதிகாரியாகி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிறார்.

அதேபோல்  போலீஸ் அதிகாரியாகி விட்ட பிறகு எம்.ஜி.ஆராக இருப்பது வாழ்க்கையின் இன்பத்தை அளிக்காது நம்பியாராக இருக்கவே ஆசைப்பட்டு ஏமாற்றும் நுட்பமான கலையை கற்றுக்கொள்கிறார். பெரிய பண முதலைகளின் கைக்கூலியாக மாறும் கார்த்தி,  சத்யராஜுடன் இணைந்து மக்கள் விரோத பணிகளுக்குத் துணை போகிறார். தன் பேரன் கார்த்தி வழி தவறி மாறியதில் மனம் நோகிறார் ராஜ்கிரண். எம்.ஜி.ஆர் அம்சம் கொண்ட கார்த்தி, அவரது வழியில் பயணிக்காமல் எதிர்மறையாக பயணிப்பது ராஜ்கிரணுக்கு தெரிந்ததும், மனம் வருந்தி இறந்து விடுகிறார். தாத்தா ராஜ்கிரணின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படும் கார்த்தியின் உடலில் திடீரென்று ஒரு வித மாற்றங்கள் ஏற்படுகிறது. எம்.ஜி.ஆரின். ஆவி கார்த்தியின் உடலில் புகுந்துக் கொள்ள பின்பு கார்த்தியின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அவரை அறியாமல் அவருக்குள் எம்ஜிஆரின் ஆவி அதாவது அருள் வந்து அவரை ஆட்டுவிக்கிறது. அதன் பிறகு நடப்பது என்ன? என்பதுதான் “வா வாத்தியார்”  படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் ஒரே சமயத்தில் நல்லவராகவும், கெட்டவராகவும் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் கார்த்திக்கு அமைந்திருக்கிறது. எம்ஜிஆராக மாறும் போது வரும் செயற்கைத்தனம், ஒட்டாத மேனரிஸங்கள் எல்லாம் எடுபடவில்லை. இருந்தாலும் அவருக்குள் எம்ஜிஆர் அருள் வரும் போது எம்ஜிஆர் தோற்றம் காட்டி, உடல் மொழி, பேச்சு எல்லாமுமே மாறி சிறப்பாக நடித்து இருக்கிறார்.எம்ஜிஆர் நடித்த பாடலில் அவரை விட சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பியாராக வரும் போது காவல் அதிகாரி தோரணையுடன் ஊழலும், நக்கலான பேச்சு என்று அசத்தி இருக்கிறார். எம்ஜிஆராக கார்த்தி உருமாறி வரும்போது நான் ஆணையிட்டால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற பிரபல பாடல்கள் இடம் பெறுவது ரசிக்க முடிகிறது

நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டிக்குப்  பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இருந்தாலும் காப்பாத்துங்க….என்று அவர் போலியாக கத்தும் காட்சியில் அனைவரையும் ரசிக்க வைக்கிறார்.

எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகன் பூமி பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரன் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பேரன் தான் நினைப்பது போல எம்.ஜி.ஆராக இல்லை நம்பியார் ஆக இருக்கிறான் என்பது தெரிந்தவுடன் அவர் வேதனைப்படும் காட்சிகள் அற்புதம்.

பெரிய பல்லுடன் வித்தியாசமான தோற்றத்தில் பெரியசாமியாக- வில்லனாக வரும் சத்யராஜ், கொடுத்த வேலையைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்.

நிழல்கள் ரவி,ஆனந்தராஜ்,ஜி.எம்.சுந்தர்,கருணாகரன்,ஷில்பா மஞ்சுநாத்,ரமேஷ் திலக்,வித்யா,பி.எல்.தேனப்பன்,யார் கண்ணன்,நிவாஸ் ஆதித்தன் என படத்தில் நிறைய நடிகர்கள்.அனைவரையும் தேவையான அளவு நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், 25 ஆண்டுகளுக்கு முந்தைய வண்ணப் பதிவுகளை திரையில் மிக சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்து எம்ஜிஆரின்  நினைவுகளில் மூழ்க செய்து விடுகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

எம்ஜிஆர் ஒரு தனிப்பட்ட மனிதர் அல்ல.நமது தமிழகத்தின் வழிகாட்டி. திரைத்துறையில் இருப்பவர்களுக்கும், சாதாரண பொது மக்களுக்கும் அவர் ஒரு தெய்வமாகவே இப்போதும் இருக்கிறார் என்பதை கார்த்தியின் உடல் மொழி மூலமாக ரசிகர்களை ரசிக்க வைத்து நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம். திரையரங்கில் ரசிக்கத் தக்க அம்சங்கள் கொண்ட ஒரு முழு நீள வியாபார ரீதியான படம் என்பதில் சந்தேகம் இல்லை. எம்ஜிஆரின் நினைவலைகளுடன் நல்லதுக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.

மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும்.

ரேட்டிங் 3/5.